புதன், 31 டிசம்பர், 2008

2009 வாழ்த்து

ஈரா யிரத்தின் ஒன்பான் ஆண்டே வருக!
சீராய் இரக்கம் அன்போ டெல்லாம் தருக!
போரும் வெடியும் என்றும் எங்கும் விலகி,
யாரும் உயர்வும் இன்பம் யாவும் அடைக!!

எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

செவ்வாய், 30 டிசம்பர், 2008

ஒருதலைக் காதல் ஒழிக.

ஒருவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க:

"எவரறிவார் யான்கொண்ட அன்புன்மேல் இங்கே
எதையறிவார் என்பற்றி ஏனோ் --- இவையொன்றும்
மானிடர் தானறியார் மாறாதுன் மேல்கொணர்ந்த
வானருட் காதலிறை வா."

என்று ஒரு வெண்பாவாக்கிவிடலாம். ஒருதலைக் காதல் இறைக்காதல் ஆகிறது.

"மானிடர் தானறியார் மாதவனுன் மீதிசைந்த
வானருட் காதலிறை வா."

எனினுமாம்.
ஒருதலைக் காதல் பாடலில் வரவேண்டும் என்றால்:

"மானிடர் தானறியார் மாறாதே ஓர்தலையாய்
யானிடர்க் காதல் படும்."

இலக்கியங்கள் பழித்த ஒருதலைக் காமம் ஒழிக.

ஞாயிறு, 28 டிசம்பர், 2008

தகப்பன் > தோப்பன் > தேப்பன் : திரிபுகள்.

மகன் > மோன்.

இந்தத் திரிபில், மக என்பது மோ என்று திரிந்த அமைப்பை ஒட்டி,

தகப்பன் > தோப்பன் என்று திரியும்,. தோப்பன் பின் ஆர் விகுதி பெற்று, தோப்பனார் ஆகும்.

மகன் என்பது மான் என்றும் திரியும்.

அதியமான், பெருமகன் > பெருமான்.

அதியமானில் வரும் மான், ம்+ஆன் என்பதன் கூட்டாகவுமிருக்கலாம்.

அதிய(ன்)+ம்+ஆன்.
மலைய(ன்)+ம்+ஆன்.
தொண்டை+ம்+ஆன்.

ஏ - ஓ திரிபு:

வந்தேம் - வந்தோம்.
விகுதி "ஏம்" - ஓம் என்று திரிந்தது.

ஏம் > ஏமம் (பாதுகாப்பு)

மேடு > மோடு
பெடை - பெட்டை > பொட்டை(க்கோழி)
பெண் > பொண்ணு

எனப் பல பேச்சு வழக்குத் திரிபுகள்.


தகப்பன் > தேப்பன் > தோப்பன் (அ>ஏ>ஓ) மற்றும் எ-ஒ திரிபுகள் காண்க.

வியாழன், 25 டிசம்பர், 2008

பிரமித்தல்

பிரமிப்பு
-------

தமிழ் இயன்மொழி.

அப்படியென்றால், இயற்கையாய் மக்கள் நாவில் தவழ்ந்து, வளர்ந்து, மிகப் பழங்காலத்திலேயே எழுத்துக்கள் அமையப்பெற்று, இலக்கிய வளமும் அடைந்து இன்றும் நின்று நிலவும் மொழி.

தமிழுக்குப் பழங்காலத்தில் பல கிளை மொழிகள் இருந்திருக்கலாம். அவை குமரிக் கண்டத்துடன் அழிந்திருக்கக்கூடும். (இப்போதுள்ள பேச்சு வேறுபாட்டுக் கிளைகளைக் குறிப்பிடவில்லை) . இல்லையென்றால் சில அவுத்திரேலியப் பழங்குடி மக்களின் மொழிகளிலும் தமிழ்ச் சொற்கள் (அழிவினின்றும் எஞ்சியவை ) காணப்படுதல் ஏன் என்று ஐயமுறுவோர் காரணம் காட்டவேண்டும்.

நிற்க:

இப்போது பிரமிப்பு என்ற சொல்லின் பொருளைக் காண்போம்.

பெரிதென்று மிக வியத்தலே பிரமித்தல்.

பெரு > பெருமித்தல் > பிரமித்தல்.

பிரமித்தல் என்பது பேச்சு வழக்குத் திரிபில் முளைத்த சொல்.

இதைப்பற்றி மேலும் உரையாடுவோம்.

புதன், 24 டிசம்பர், 2008

ஞாயம் மாட்டுக்குக்

ஆசிய சோதியும் ஆனவர் பின்சென்ற
அன்புள்ள மக்கள்் ் இலங்கையிலே-- அவர்
பேசிய பேச்சுக்கில் லைமதிப் பேகுண்டு
வீசினர் கொன்றனர்  மாடுகளை!!

மாந்தரும் மண்ணொடு மண்ணாய் அழிந்ததை
எண்ணி உகுத்திடக் கண்ணீரிலை! -- அங்கு
போந்தயெண் பத்தைந்து மாட்டுக்கும் கண்ணீரை
வாங்கிட வேணுமே போய்இரவல்.

ஆட்டுக்குக் காட்டிய ஈவிரக் கம்பெரு
மாட்டுக்கும் மாதவன் காட்டவில்லை -- எனப்
பாட்டுக்குக் கொண்டுபோய் மாட்டின் முதுகினில்
பாய்ச்சினர் வான்குண்டு பாருங்களே!

தமிழும் கடமையும்



(கலித்தாழிசை)





ஒவ்வொரு காலையும்
ஒருமணி நேரம்
ஆகிலும் தமிழ்நூல் ஓதிடுவீர்;
எவ்வழி செல்வ
தாயினும் ஒருபுத்
தகமே கொண்டு
செல்லுதல் அதுகடமை! 1

படிப்ப தனைத்தும்
பைந்தமிழ் ஆக
பார்த்துப் படிக்க முனைந்திடுவீர்!
துடிப்பது நெஞ்சம்
அனைத்தும் தமிழ்தமிழ்
என்றே துடித்திடப்
பார்ப்பீர் அதுகடமை! 2

பிறமொழி கற்றுப்
பெரும்பயன் கொள்வீர்
பேதைமை யாமே அவைவெறுத்தல்.
திருமொழி தமிழே.
திசைபல செல்லினும்
இருத்துவிர் மார்பினுள்
தமிழை அதுகடமை! 3

ஆக்கிய நாள்



post Jan 22 2008,

தமிழ் (குறட்டாழிசை)

தமிழ்

(குறட்டாழிசை)



பரந்த கண்டமாம் பஃ·றுளி யாற்றொடு பாரில் பல்வழிச்
சிறந்து விளங்கிய பைந்தமிழ்!

தான்பல சொற்களைத் தரணி மொழிகட் கீந்து வளர்கெனும்
மேன்மை வழங்கிய பைந்தமிழ்!

கடலும் பொங்கியே கண்டம் விழுங்கிட நிலத்தை இழந்துதன்
உடல்கெ டாதகன் னித்தமிழ்!

நூல்கள் அழிந்தன; கலைகள் அழிந்தன; நொந்த போதிலும்
கால்தடு மாறாக்் கலைத்தமிழ்!

பகைவர் வந்தனர்; பாழ்ப டுத்தினர்; பயமு றுத்தினர்
தகைமை தாழாத் தனித்தமிழ்.



புனைந்த நாள்: 21.1. 08

ஒரு தோட்டத்துப் பூ

ஒரு தோட்டத்துப் பூ.


தோட்டத்தில் மலர்ந்திருந்தேன்
தொட்டிட வந்தாய் தோழி
காற்றென அசைத்தாள் என்னைக்
காத்தனள் கொஞ்சநேரம்;
ஆட்டமோ என்னைக்கண்டே
அசையாதே என்றவாறு
பூட்டினாய் விரல்கள் என்மேல்;
பூவெனைப் பறித்தேவிட்டாய்!

வருடினாய் விருப்பம்போலே
வகைகெட மாட்டிக்கொண்டேன்
நெருடினாய் நிமிர்த்திமோந்து
நேர்ஒரே முத்தம்தந்தாய்!
குருடியே` என்றேவையக்
கொதித்திட வலிமையில்லை.
மருள்தரக் கசக்கிப்பின்னே
மாய்ந்திடக் களைந்திடாதே!

எழுதிய நாள்: 27.8.08

தமிழர் வீரம்.

ஏறாத மலைதனிலே ஏறிவெற்றிக் கொடிநாட்ட
தேராச்சிங் களப்படைகள் திரண்டுருண்டு முயல்வனவே!!

மாறாத மரபுடைய மறத்தமிழர் எதுபோதும்
நூறாகச் சிதறடிப்பார்் நுழைபகைவர் படையணியை.்

ஆயிரம் ஆண்டுகளின் முன்.....

ஆயிரம் ஆண்டுகள்் முன்னே -- சென்றே
அங்கே தமிழென்று ு சொன்னால் --- ஓடிப்
போயின புன்பகை எண்ணி --- நெஞ்சம்
பூரித்ததே என்ன சொல்வேன் !!

அங்கிருந் தாயிரம் சென்று --- எந்த
அம்பலத் தின்முன்பும் நின்று --- தமிழ்
பொங்கப் புகன்றனை என்றால் -- மண்டி
போட்டு வணங்கினர் நன்றாய்!

இன்னும் ஈராயிரம் போனால் --- அங்
கிருந்ததுவே ஒரு கண்டம்; --- அதில்
பொன்னும் மணியும் தமிழும் -- ஒளி
பொய்யா நிலைபெற்ற துண்டே!!

இந்தப் புகழ்சொலும் உன்னை -- உன்
இருப்பிடம் என்றிடும் மண்ணைக் -- கொள்ள
மந்தத் தலைகொண்ட மாந்தர் --- வரின்
மண்டை அடிகொடு சேர்ந்தே!!

என்னைத் தழுவின் மழை!

ஒரு நண்பர் தந்த ஒரு திரைப்பாடலின் கருத்துக்கள் உள்ளடக்கிய பாடல் இது. அவர் தந்த சொற்களையே வைத்து எழுதப்பட்டது.


பூமிக் கொளிபாயும் கோமகள் கண்விழித்து;
பூவிற் கவள்முகம் மண்ணியதால் --- மேவுபனி;
பல்லைத் துலக்கின் நுரையாம்் பரவைக்கே;
என்னைத் தழுவின் மழை.


பாடலை உரை நடையில் எழுதினால்: கோமகள் கண்விழித்து (அதனால்) பூமிக்கு ஒளி பாயும்; அவள் முகம் மண்ணியதால் (=கழுவியதால்) பூவிற்குப் பனி மேவும்; அவள் பல்லைத் துலக்க (அது) பரவைக்கே (=கடலுக்கே) நுரை ஆகும்; என்னைத் தழுவினால் மழையாகும்.


ஆசிரியப்பா:

கோதைகண் ஊடொளி விழிக்க உலகம்
வாதையறு அங்கைநீர் தழுவிடக் கூதை
இதழ்வாய் அணைக்கும் மழையில்
அதழில் பனித்துளி ஆழ்கடல் நுரைத்ததே.

ஊடொளி விழிக்க : ஆசிரியத் தளை.
வாதையறு : இது கனிச்சீர் ஆகலாம். அதாவது வஞ்சிப்பாவுக்குரியது. இதற்கு விதிவிலக்கு கூறி கவிஞனைக் காப்பாற்ற வேண்டியிருக்கிறது. அதாவது... (எல்லாம் சொல்லிவிட்டால் எப்படி? நிற்க).
வாதையறு அங்கைநீர : விதிவிலக்குக் கூறி ஏற்கப்பட்டால் வெண்டளை ஆகலாம். ஏற்கப்படாவிடின் வஞ்சி. ( பிறகு சொல்கிறேன் ).
அங்கைநீர் தழுவிடக் : இது கலித்தளை. இதற்கு விதிவிலக்கு கூறி ஏற்கப்படுமாயின், ஆசிரியத்தளை.
ஆழ்கடல் நுரைத்ததே: ஆசிரியத்தளை.

இவ்வளவு இடர்ப்பாடுகளும் உள்ளன....தொடர்ந்து உரையாடுவோம்.

கோதை - முடி கோதுவதால் பெண்ணிற்கு ஏற்பட்ட பெயர். கோதாவரி ஆற்றின் குறுக்கப்பெயராகவும்் வரும்.
கோதி வாரிக்கொள்வதால் - ்க்கொளவதால்் கோது வாரி : கோதாவாரி > கோதாவரி என்றாகி யிருக்கலாம்.
இந்தச் சொல்லை நினைவூட்டியமைக்கு நன்றி.
கோதை+ வாரி = கோதாவரி என்றுமாம். வாரி - ஆறு என்றும் பொருள்படும்.

கோதி வாரிக்கொள்பவள் பெண். கோதாமல் வாரிச் செல்வது அந்த ஆறு. ??

நீங்கள் போட்டிருந்த சொற்களையே கூடுமான வரை வைத்துக்கொண்டு இப்படி மாற்றலாம்.

கோதைகண் ஊடொளியால் இவ்வுலகு வெட்டமுற
வாதை யிலாஅங்கை் நீர்கழுவ --- கூதை
அதழில் பனிநீர் நுரைகடலாய் ஆழ்ந்தே
இதழ்வாய் அணைக்கும் மழை.

வெட்டம் = வெளிச்சம்;

உங்கள் கருத்து இந்த வரிகளில் உள்ளதா? இல்லையென்றால் எங்கெங்கு மாறிவிட்டது? காலையில் அடித்த மழை நீ என்னைத் தழுவியதால் என்ற கருத்து "இதழ்வாய் அணைக்கும் மழை" என்பதில் தொனிக்கிறதா?
உங்களுக்கு மன நிறைவானால் சரி, இல்லையென்றால் மேலும் மாற்றுவோம்.

இப்போது, இப்பாடலின் முதல்வரியை மோனை பெய்து எப்படி அழகுபடுத்தலாம் என்று பார்ப்போம்.

கூ என்ற ஓரெழுத்துச் சொல்லுக்கு பூமி அல்லது மண் என்ற பொருளும் உள்ளது.

"கோதைகண் ணூடொளியால் கூதெளிந்து வெட்டமுற"

என்று மாற்றுவோம்.

கோ - கூ மோனை.

அது மட்டுமின்றி, 'கோதை' - 'கூதெ' என வந்து, அடியெதுகை போன்றதோர் அழகு அவ்வரிக்கு ஏற்படும்.

நிற்க.

வெட்டம் என்ற சொல் நேயர்கள் அறிந்த சொல்லேயாம். "வெட்டவெளிச்சம்" என்ற சொற்றொடரில் அது ஒளிந்துகொண்டிருக்கிறது. வெட்டமென்ற சொல், மலையாள மொழியிலும் வழங்குவதே. அது பழந்தமிழ்ச் சொல்.

"வாதை யிலாஅங்கை் நீர்கழுவ --- கூதை"

இந்த இரண்டாம் வரிக்கு ஒரு மோனை அழகு கொடுப்போம்.

வாதை இலாஅங்கை வாரிதழால் --- கூதை

ஆகவே வாதை - வாரி என மோனை வருகிறது.

தழால் - தழுவல்.

இதையே:

வாதை இலாஅங்கை வாரிதழீஇ - கோதை

தழீஇ - தழுவி. (பழந்தமிழ் வழக்கு).

வாரி என்பதற்கு நீர், நீர்வடிகால், ஆறு, கடல் என்று பலபொருள் உள.

கொழும்பு நகர்சென்று கூரையின் கீழ்வீழ்ந்து
எழும்ப முடியா தினும்தூங்கும் வெங்காவே
நீங்கள் வரும்வரை நேரிய பாடலொன்று
ஈங்குத் தருவேன் இனி.

இக்குறள் ஏனையோர்க்கு:-

"துறந்தார்க்குத் தொல்லையொன் றில்லை; உலகில்
சிறந்தாரோ அத்தன்மை யால்?"

பாவம்நம் வெங்கா பலநாள் மறைந்திருப்பார்
ஏவப் பிறரின்றி இங்குறுவார் --- நாவிலே
நற்றமிழ் மிக்கொழுக நாலிரண்டு சொற்றவழ
மற்றும்போய் மீள்வார் மறைந்து.


கொடுமைக் கெதிர்நின்றான் கொன்றொழிக்கும் போரில்
அடிமைப் படேனென்றே அன்றுமின்றும் அல்லல்
படுகின்ற நற்றமிழன் பட்டதெலாம் போதும்
நடுநின்று நல்லுலகே நாடு.
நீங்கள் பயன்படுத்திய சொற்களைக் கூடுமானவரை உள்ளடக்கி:-

யாப்பும் அறியேன் தமிழின் இலக்கணம்
யாதும் அறியேன் பிழையெனினும்-- தோதாய்த்
தமிழன் எனப்பிறந்த தண்தவமே எண்ணிப்
புனைந்திடுவேன் பாக்கள் பல !


மேற்கண்ட பாட்டில், எதுகை ( ) தேவைப்படும். "யாப்பும்" : "யாதும்" - மோனையாகவும் ஓரளவு மாத்திரை ஒத்தும், பும் - தும் என்று ஒண்றியும் வருதலால் எதுகை என்று
ஏற்கலாம். தமிழன் - புனைந்திடுவேன் எதுகை வரவில்லை. மற்றபடி சரி.


சற்று வேறுவிதமாக:-


யாப்பறியேன் இன்பத் தமிழ்கூறு இலக்கணத்தின்
காப்பறியேன் யாதும் கசடேனும் -- ஏற்பீர்,
தமிழன் எனப்பிறந்த தக்கதவம் எண்ணி
அமைப்பேன் அரும்பா பல.

இலக்கணம் மொழி காப்பது ஆதலின் காப்பு எனப்பட்டது.

அரும்பா என்பது அரிய பாக்கள் என்றும் அரும்பாத என்றும் இரு பொருள்படும். என்றாலும் இங்கு பாடலைத்தான் குறிக்கிறது.

மகிழ்வுடன் புனைக!!



"வெற்றுப்பாடலை" வெண்பாவாக்கும் கலை......!

[ சீரும் தளையுமில்லாப் பாடல்கள் சில, நன்றாகவே இருக்கக் காணலாம். அவற்றின் கருத்தோட்டத்தைச் சிதைத்துச் சொற்களையும் மாற்றி "வெண்பா" ஆக்கிவிட்டால்..... அதைப்பற்றியது இந்தப் பாடல்]

சீரும் தளைமற்றும் சேராக் கவிதைக்குள்
ஊறும் அழகை உருக்குலைத்து --- வாருமே
வெண்பா விளைந்திடக் காண்போம்; வெளிறிய
மண்பாவா னாலும் மதி.

இந்தி படிப்பதா வேண்டாமா?

(இன்னிசை வெண்பா)

விரும்பின் எதையும் படிக்கலாம் இன்றேல்
வெறும்பூவைச் சூட மறுக்கலாம் அஃதொப்ப,
உள்ளம் விழையாத எம்மொழியும் வேண்டாமே,
கொள்ளவே தக்கதைக் கொள்.

ஒரு கருத்துக்கள நண்பருக்கு எழுதியது:

(நேரிசை வெண்பா.)

ஆரூர்ப் பெயர்மாண்பீர் அண்மித்தீர் இத்திரியை
வேறூரில் வேலைமிக் கென்னவோ --- நேரிழப்பு?
மீண்டுமோர் சுற்று மிகக்கூர்ந்து கற்றுயர்ந்து்
தாண்டித் தடைதகர்ப் போம்.

எழுதித் தொடருங்கள் எம்மால் இயன்ற
பொழுதெல்லாம் இங்கு புகுந்து --- பழுதின்றிப்
பூக்கள் மணமொக்கப் பொன்பொலியச் சீர்செய்தே
ஆக்கிடப் பாவின் பணி.

சனி, 20 டிசம்பர், 2008

நிகழ்வுகளும் கருத்துக்களும்

(வெண்டுறைகள்.)

காவலனே முன்நின்று கடந்திடுக என்றாலும்
கோவலன்போல் முன்சென்றால் குழப்பமே உனதாகும்.

வேண்டாமே என்பவளை விட்டகல வொட்டாமல்
ஆண்டாள நினைப்பானேல் அறிவிலியும் அவனாமே.

விழைவில்லாள் அன்னவளை விரும்பிப் போய்க்கண்டு
நுழைந்தில்லில் கொன்றுதற் கொலைப்பட்டான் ஒருபேதை.

These were based on recent events in Mumbai and Andra Predesh.

இயற்கை தந்த கவி செயற்கையில் பதிவு பெற்றது.

மெல்லிய பூங்காற்றிலே --- என்
மேனி சிலிர்த்திடுதே!
அல்லி மலர்திடுதே ! -- நில
வழகொளி வீசிடுதே,

அணிபெறு வண்டினங்கள் -- சேர்ந்து
அருகே முரல்பொழுதில்,
இனிமை தவழ்கவிதை -- என்
நெஞ்சில் முகிழ்க்கிறதே.

மங்கிய தண்மதியில்் -- இங்ஙன்்
மாந்திக் கிடக்கையிலே,
தங்கிடும் கோலெழுத்தை -- வரை
தந்திடத் தருணமுண்டோ?

உள்ளில் ஊறியதை -- அங்கே
உள்ளப் பலகையிலே,
தெள்ளத் தெளிவுறவே -- வைக்கத்்்
தேங்கின எண்ணங்களே.்

மகிழ்வினை என்சொல்லுவேன் -- என்
மனைக்குள் புகுந்ததுமே,
அகழ்ந்துடன் ஆய்ந்துமனம் -- கண்டு
அக்கவி தான் தொடுத்தேன்.

இயற்கைக்கு நன்றிசொல்வேன் - கவி
இயன்றதோர் ஊற்றதனால்!
செயற்கை மறப்பதுண்டோ --- புனை
செய்த மனைவளர்க!

வெள்ளி, 12 டிசம்பர், 2008

நிலநூல் அறிவு

களப்போர் நிகழ்வுகளைக் காதாற் பெறினும்
எழுத்தாற் படித்திடினும் என்ன --- உளத்தாலே
எந்தவிடம் என்ன இனிநடக்கும் என்றுணரச்
சொந்த நிலஅறிவின் றேல்.

இன்பகாலம் இனி வருமோ?

வாழ்வதற் கேற்ற சூழல்கள் அமைந்த
கூடும் ஒவ்வொரு குருவிக்கு முண்டாம்;
வாடிய காலம் இருப்பினும் இன்பம்
கூடிய காலமும் வந்திடும் அன்றோ?
ஏற்ற இறக்கம் இயல்பே வாழ்வினில்!
ஆற்ற இனிதாய்த் தொடருதல் அரிதே.
குமுறிய கடலால் குமரி மூழ்கித்
தமிழ்நிலம் சுருங்கிய கால முதலாய்
இழந்தவை பற்பல; இனித்தவை பற்பல.
இன்ப காலம் இனிவரும்; துன்பமும்
தொலைந்திடும் அந்நாள் எந்நாள்?
அலைதுயர் இலாது தமிழர் வாழவே!

வியாழன், 11 டிசம்பர், 2008

படிக்கும்போதே மறைந்த இணையக் கட்டுரை.

காகிதத்தால் ஆனதொரு நூலென் றாலோ
கைதவழும் கண்படிக்கும் போதில் ஓடிப்
போகுமென அஞ்சிடவே வேண்டா நாமும்
பொழுதெல்லாம் வாசிப்போம் நெஞ்சம் துள்ளும்;
ஆகுமொரு நல்லிணையம் தன்னில் ஒன்றை
ஆர்வமுடன் நாம்படித்துக் கொண்டி ருக்க,
நோகவது போய்மறைந்தே மாய மாகி
நுகர்வழியும் போக்கதனை நோக்கு வீரே!