வெள்ளி, 30 ஜனவரி, 2009

புசி > போஷி> போஷாக்கு

புசித்தல் என்ற சொல்லின் அடிப்படையில் தோன்றியதே போஷி, போஷாக்கு என்பன.

போஷி என்பது, இருக்கு வேதம், அதர்வண வேதம் முதலிய நூல்களிலும் உள்ளது.

புசி > போசி > போஷி.
போஷி > போஷாக்கு.

போஷி + ஆக்கு = போஷாக்கு.

புசி+ஆக்கு > போஷாக்கு எனினும் அதுவே.

திங்கள், 26 ஜனவரி, 2009

உறங்கும் உலகினர்

மையக் கிழக்கில் நடக்கும்சண்டை -- அது
மனத்தை உருக்கும் உலகெங்குமே! -- ஆயின்
நையத் தமிழரைப் புடைத்துக்கொல்வார்--கண்டு
நாவினை யேனும் அசைத்ததுண்டோ? -- இன்று
செய்யத் தகுந்தவை அனைத்தும்செய்த -- தமிழ்ச்
சீர்பெறும் ஞாலத் தமிழெரெல்லாம்,-- சென்று
பைய உலகினர் கண்களுக்குள் --- தோன்றி
பாய்ந்து விழித்தெழச் செய்திடாரோ?

வெள்ளி, 23 ஜனவரி, 2009

நெறிதவறிய வேடன்

தமிழன் எனச்சொன்னால் பாவமோ? -- இந்தத்
தரையில் குடிவாழ்தல் நோகுமோ -- நீரில்
அமிழ்ந்தும் அவன்சாக வேணுமோ -- தீயில்
அழிந்தால் புவிக்காவல் ஆறுமோ?

குழந்தை முதியோரும் பெண்களும் -- ஒரு
குற்றம் அறியாநோ யாளியும் -- உயிர்
இழந்தும் உடல்கள்புண் ஆகியும் ---போர்
இனியெத் தனைநாட்கள் போகுமோ?

இரத்த வெறிகொண்ட மாந்தர்கள் -- இங்கு
இயற்றும் சமர்நிற்க வேண்டுமாய் -- ஓர்
உரத்த குரல்தந்துஇஞ் ஞாலமும் ---அமைதி
ஓங்கச் செயற்பால காலமே!

புலிக்கே வலைவீசும் வேட்டுவன் -- வந்த
பொன்மான் முயல்தம்மைச் சாட்டுதல்,--- ஒரு
நெறிக்குள் அவனில்லை காட்டுமே --- உலகு
நில்லா தவன்மன்றில் ஏற்றுவீர்!

புதன், 14 ஜனவரி, 2009

எண்கணிதம் தொடர்ச்சி.

நானுமெண் கணிதம் பார்த்து
நாட்பலன் உரைப்பேன் நாளை
மானிடர்க் கெல்லாம் துன்பம்
மாறிடும் மகிழ்வு தோன்றும்!
ஏனது நடக்கும் என்றீர்?
இருபதும் ஒன்றும் கூட்டி.
மேனிலை ஆண்டும் சேர்க்க
மீளுமெண் ஐந்தாம் காண்க!

இரண்டா யிரத்தின் ஒன்பான்
இனிதாகும் ஆண்டில் நாளில்
இருபத்தில் பதவி ஏற்பார்
இரும்பெயர் ஓபா மாவே!
ஒருபத்தில் பாதி என்றால்
உயர்வெலாம் கூடும் என்பேன்!
உருவத்தில் உயர்ந்தாற் போல
ஓங்கிடும் அன்னார் ஆட்சி!!

என்கணக்கு இதுவே ஆகும்.
இனிவரும் காலம் காண்போம்....
பொங்கலுண்(ட) பின்னே வந்து
புதுக்கணக் கிங்கே சொன்னால்
பங்கமாய்ப் ் போகா தன்றோ?
பைந்தமிழ் மக்காள்! எங்கும்
பொங்குக பொங்கல் இன்பம்.
புதுப்பொலி வெங்கும் தங்கும்!

எண்கணிதப் பலன்

எண்கொண்டு கணித்துச் சொல்வார்
இனிவரும் பலன்கள் எல்லாம்!
விண்ணென்றும் இருந்த தைப்போல்
வேறுபடா திருக்கக் கீழே
மண்ணின்று பலதீ மைசூழ்
மடுவினில் விழுந்து மாளக்
கண்ணொன்றும் இலதாய்ச் செல்லும்
கதியினைக் கணித்தா சொன்னார்?

திங்கள், 12 ஜனவரி, 2009

viiram

வீரமே ஓர்முதலாய் வெற்றியே ஊதியமாய்
வீறுடன் போராடும் வெஞ்சமரில் --- சீருடனே்
நெஞ்சில் விழைந்ததெலாம் நேராம் விடுதலையே
நஞ்சுமே நாடெனின் ஊண்.


போரிடும் மறவர்க்கு வீரமே ஒரு  மூலதனம் ஆகும் 
வெற்றிதான் அவர்கட்குக் கிடைக்கும் இலாபம்.
கடினமான போரில் எழுச்சியுடன் போராடுகிறார்கள் .
அவர்கள் வேண்டியதெல்லாம்  உண்மையான நேர்மையான விடுதலையே ஆகும்.
நீ  நஞ்சை நாடு ( நாட்டம்  கொள் ) என்றாலும் அவர்கள் அதுவே எமக்கு "ஊண் " (உணவு ) எனறு  உண்டு அமைவர் .

இது வீரத்தின் இலக்கணம் ஆம் .

ஞாயிறு, 11 ஜனவரி, 2009

காளி தேவிக்கு விண்ணப்பம்

நீரின்றி வாடிடும் ஏழைத் தமிழரை
நீதானே காப்பற்ற வேண்டும் -- வலிந்த
போரொன் றவர்கள் பொறுக்கமாட் டார்மேல்
புகுத்தலை நீமாற்ற வேண்டும்.

வான்குண்டு வீச்சுக்கு வாழ்வு பறிபோகா
வண்ணமே நீயருள வேண்டும் -- அவர்க்கு
ஊண்பண்டு போலக் கிடைத்திட உன்னருள்
அல்லாது வேறென்ன வேண்டும்?

உடைமைகள் யாவும் இடையே களைந்தவர்
ஒயாத போராட்டம் வாழ்வில் -- கண்டு
படையவர் ஆற்றும் கொடுஞ்செயற்கு ஆளாய்ப்
படுந்துயர் நீபோக்க வேண்டும்.

சின்னஞ் சிறிய குழந்தைகள் மூப்பில்
செயலறி யாதவர் மக்கள் -- தம்மைக்
கண்ணுங் கருத்துமாய் முன்காத் தனையவர்
இன்றுசெய் பாதகம் யாதோ?

விரைந்தருள் நீயே புரிந்திடு தாயேநல்
வீரம் விளைத்திட்ட காளி --- அவர்கள்
குறைந்திட்ட வாழ்வின்னும் குன்றாமல் நீவா
நிறைந்திடச் செய்யிந்த நாழி!

வெள்ளி, 9 ஜனவரி, 2009

Problems for the new leader Obama

உலகத்தின் போர்கள் எல்லாம்
ஒபாமா ஓயச் செய்வார்;
சிலகத்தி தாம்போய்ச் சேரும்
செம்மையாய் உறைக்குள் என்று
பலபத்தி ரிகைகள், மேலோர்
பகர்ந்தனர் பதவி கொள்ள
நலமொத்து வருமுன் பேஇந்
நானில மெங்கும் வெம்போர்.

புகலப்போர் மட்டும் என்றால்
போகட்டும் என்போம் ஆங்கே
அகலப்பார் எங்கும் கெட்ட
ஆழ்பொரு ளியலால் வாடும்!
இகலுப்பி எதிரில் நின்ற
இன்னலை வென்றே விண்மீன்
மிகலொப்ப ஓபா மாவும்
மேலெழக் காண்போம் நன்றே.

வியாழன், 8 ஜனவரி, 2009

பொருள் அழுத்தம் emphasis

சொல்லுங்கால் ஒரு கருத்துக்கு அழுத்தம் கொடுத்துச் சொல்லவேண்டுமானால், ஒவ்வொரு மொழியிலும் அதற்கு வெவ்வேறு வசதிகள் உள்ளன.

தமிழில் இவ்வழுத்தம் கொடுக்கும் முறை எங்ஙனம் கையாளப்படுகிறது என்று பார்ப்போம்.

காசியப்பன் சோறு தின்றான். (வாக்கியம்)


இதன் பொருள்: காசியப்பன் சோறு, குழம்பு, பச்சடி, துவையல் (இன்ன பிற ) என்பனவற்றை உண்டான் என்று பொருள். வெறுங்சோறு உண்டான் என்பது பொருளன்று.

காசியப்பன் சோற்றை உண்டான் (வாக்கியம்).

இதில் "சோற்றை" என்பது: அவன் சப்பாத்தி, இட்டிலி, உப்புமா (இன்ன பிற ) என்பனவற்றை உண்ணவில்லை, சோற்றையே உண்டான் என்றாவது, மற்றவற்றை உண்ணாமல் சோற்றை உண்டான் என்றாவது பொருள்படலாம்.

இங்கு "ஐ" உருபு வந்து, சோறு என்ற சொல்லின்மேல் ஓர் அழுத்தத்தை உண்டாக்கியிருக்கிறது என்று உணரலாம்.

சின்னா மதுரை போனான்.

இதில் மதுரை என்ற சொல்லின்பால் அழுத்தம் ஏதும் இல்லை. மதுரை போய், அங்கிருந்து சொந்த ஊருக்கு உந்துவண்டியில் போனான் என்று பொருள் விரிவடைய இடம் தருகிறது இந்த வாக்கியம்.

சின்னா மதுரைக்குப் போனான்.

இங்கு வேறு இடத்துக்கு அவன் போகவில்லை, மதுரையோடு அவனது இப்பயணம் முற்றுப்பெறுகிறது என்று பொருள்படலாம்.

வேற்றுமை உருபுகள் ஒருவகை் பொருள் அழுத்தத்தை இடம் நோக்கி உண்டாக்குகின்றன என்று தெரிகிறது.

கடல்கடந்த சீனர்.

இங்கு கடல்கடந்த என்பது ஆங்கிலத்தில் வரும் oversea என்பதற்கு இணையான பொருளைத் தருகிறது. அதாவது இந்தச் சீனர் சீனா நாட்டினர் அல்லர் என்று பொருள்தரும். (The Chinese diaspora!)

கடலைக் கடந்த சீனர்.

இங்கு: இரண்டு மூன்று சீனர்களிடையே இந்த ஒருவர் கடலைக் கடந்தார், மற்றவர்கள் கடக்கவில்லை என்று பொருள் தரலாம். அதாவது ஒருவர் மட்டும் படகேறி வந்தவராக இருக்கலாம்.
கடலைக் கடந்த செயலானது முன்மை (primacy or importance) பெறுகின்றது. It does not refer to a category of Chinese. It is a reference to action of sailing across probably from China.

சில வேளைகளில் அழுத்தத்தை ஏற்படுத்த உருபு மட்டும் போதாமை ஏற்படலாம். எடுத்துக்காட்டு:

உனக்கு மட்டும் உனக்கு மட்டும் இரகசியம் சொல்வேன்.

இங்கு மட்டும் என்ற சொல் பிறருக்கு இந்த இரகசியம் கூறப்படாது என்று பொருள் தருவதைக் காணலாம். இருமுறை அடுக்கி வந்து அழுத்தம் குுடிவிட்டது என்று தெரிகிறது.்

இதுபோன்ற பொருள் அழுத்தங்களை (emphasis) நீங்கள் உணர்ந்ததுண்டா?

பிரிதிவி அல்லது பிருதிவி

பிருதிவி


அவஸ்தான் மொழியில் "பெரது" என்றால் விரிவுடையது என்று பொருள்.

ஒன்றைப் பெரிது எனில், உருவத்தில் பெரிது, இடத்தில் பெரிது, சிந்தனையில் பெரிது என, இன்னும் பலவாறு "பெருமை" (பெரிது) விரிவடையும்.


பெரிது (தமிழ் ) : பெரது (அவஸ்தான்).

பெரிது, பெரிது, புவனம் பெரிது என்பது ஔவையின் பாட்டு வரி.

அவஸ்தான் மொழியில் , புவனம் ( நிலவுலகு) பெரிதென்று கூற, பெரது என்ற சொல் பயன்படும். (perethu: broad, wide like the earth).

பெரிது (தமிழ்) : பிரிதிவி அல்லது பிருதிவி (சங்கதம்). பிரிதிவி = நிலவுலகு. பிரிதிவி = நிலவுலகின் தலைவன்.

புவனம் பெரிதுதான். சங்கதத்தில் பிரிதிவி என்ற சொல் ஏற்பட்டதும் பொருத்தமே.


ஆராயத்தக்கவை:

காஸ்பியன் கடலுக்குக் கிழக்கிலான பார்தியா (Parthia) , பார்தாவ். [ தமிழ்: பெரு, பரிதி முதலியவை ]
ஈரானிய வட்டாரத்தில் ர்த். ர்ட் என்பன ல் என்று திரிதல்.
(e.g. sard became sal, zard→zal, vard→gol, sardar→salar etc.).