வியாழன், 25 நவம்பர், 2010

நலம்் குலவு தமிழினில்....

உலகு படைத்தவன் ஊழி முதல்வனாம்
நிலவு வேணியன் நிறுவிய அமைப்பினில்
அலவு இலாதவை அழகு மிகநலம்்
குலவு தமிழினில் கூறி விளக்கினீர்.

அலவு இலாதவை - குழப்பமிலாதவை.

This poem praises a writer for his good work.

புதன், 24 நவம்பர், 2010

some lines on my cat


 புதுக்கவிதை

இது எங்கள் பூனை,
இது எங்கள் பூனை.
எது பக்கம் வந்தாலும்
ஏதும் பயந்து ஓடுவதில்லை!

என்ன அங்கே வருதோ என்று
இருந்த படியே ஆய்வு செய்யும்.
கண்ணை விரித்துப் பார்த்து விட்டுக்
கலங்கிடாமல் நடந்து போகும்.

மியாவ் என்று நான் சொன்னாலே
மியாவ் என்று தானும் சொல்லும்.
குரலில் என்றன் உணர்வு தெரிந்து
மியாவில் பலவகை மீட்டிக் காட்டும்.

உடலோ கொஞ்சம் கனத்துப் போச்சு!
உட்கார்ந்து நேரம் கழிக்க லாச்சு!
உலகம் அமைதி என்றே நினைத்து
உறங்கிக் காலையில் விழிக்க லாச்சு.

போர்த்திப் போட்டேன் தூங்கு! என்றேனே
போர்வைக் குள்ளே கிடக்கும் சோம்பல்
நேர்த்தி என்று நினைத்தி டாமல்
நீட்டி மேலே தூங்கும் பூனை!

கிழடு ஆன போதும் இன்னும்
கிழட்டுப் பற்களில் பழுதோ இல்லை!
தோலும் முகத்தில் சுருங்க வில்லை,
வாலின் ஆட்டமும் அடங்க வில்லை.

ஞாயிறு, 21 நவம்பர், 2010

இறையின்பம்

தனித்தலையாய் இறையின்பம் தினைத்துணையே நன்மை!
பனித்தூய்மை அடியரொடும் இனித்திடுமா றாழ்ந்து
நினைத்தமர்ந்து நிலைப்படுத்தி நிறைவினையே காணல்
அனைத்துலக அடியவரும் பனைத்துணையென் றேற்பர்.


இதன் பொருள்:

தனித்தலையாய் = தானே தனியராய்; இறையின்பம் = இறைவன் பால் பத்தி (பக்தி) கொண்டு அவனை நாடிச்சென்று இன்புறுவது;
தினைத்துணையே நன்மை! = சிறிதளவே நன்மை தருவதாகும்;

பனித்தூய்மை அடியரொடும் = பனியைப் போல தூயவரான அடியார்களுடன், இனித்திடுமாறு =இன்பம் உண்டாகுமாறு ; ஆழ்ந்து நினைத்து = தியானம் செய்து;
அமர்ந்து நிலைப்படுத்தி = உட்கார்ந்து மனத்தை நிலைப்படுத்தி; நிறைவினையே காணல் = அத்தியானத்தின் வெற்றியைக் காணுவது;
அனைத்துலக அடியவரும் = ஏனை மதங்களின் அடியார்களும் பனைத்துணையென் றேற்பர். =பெருநன்மை பயப்பது என்று ஏற்றுக்கொள்வர்.,கூட்டு முயற்சி ஆதலினாலே. என்றவாறு.

வெள்ளி, 19 நவம்பர், 2010

புரட்சிக்குத் தயாராகுங்கள்.

புரட்சிக்குத் தயாராகுங்கள்.


எரிமலை வெடித்துச் சீறி
வெளியெங்கும் குழம்பைத் துப்பிச்
சரிவுற மனைக்குள் ஏறச்
சாய்ந்தன மரங்கள் பக்கல்;
உரியதும் யாதோ இந்த
உலகினில் மக்கள் செய்தற்கு?
அரியதைச் செய்வோம் செவ்வாய்
அங்குசென் றொளிந்து கொள்வாம்!

நீரொடு நிலமும் உண்டு
நெஞ்சுக்கு வளியும் உண்டாம்
ஓரிரு திங்கள் நின்றே
ஓய்ந்தபின் திரும்பி வந்தால்
ஊரினில் புதுமை செய்வோம்!
ஒன்றுக்கும் கவலை வேண்டாம்
யாருடன் வருவீர் இங்கே
யாமினிப் புரட்சி செய்வோம்.

செவ்வாய், 16 நவம்பர், 2010

கெட்டவர்யார் ?

எதிரியென்று யாரைச்சொல்வோம் -- இன்றே
எதிரியென்பார் நாளை உதவுநண்பர்;

உதறி எவர் தம்மைவிடுப்போம் --இந்த
உலகத்தில் என்றும் கெட்டவர்யார் ?

திங்கள், 8 நவம்பர், 2010

வறுமையோ வந்துற்ற தில்.

எயிறு தொலைந்து மயிரும் குலைந்து
பயறு கடைந்துண்ணும் பாழ்முதுமை வந்தும்
பொறுமை கடைப்பிடியாள் பொக்கை பிளந்தால்
வறுமையோ வந்துற்ற தில்.

புதன், 3 நவம்பர், 2010

dபொருள் - பொய்யா விளக்கு. kuraL

financial resources (of country as well as individual) Reply with quote Ed
பொருள் - பொய்யா விளக்கு.

பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று. 753

பொருள் என்னும் = பொருள் என்று சொல்லப்படுவது,பொய்யா விளக்கம் = அதை உடையவரைக் கைவிடாத விளக்கானது, இருள் அறுக்கும் = ஒருவனை வந்து சூழும் இருளைப் போக்கிவிடும்; எண்ணிய தேயத்துச் சென்று = அவன் நினைக்கும் இடத்திற்குப் போய்.

உடையவனைக் கைவிடாத விளக்கான பொருள் என்று சொல்லப்படுவது அவன் நினைக்கும் இடத்திற்குப் போய்,
அவனை வந்து சூழும் இருளைப் போக்கிவிடும்;

அந்த இருள் வரும் தோற்றுவாய் வெளியில் ஒரு தேயத்தில் இருந்தாலும், பொருள் அங்கும் சென்று செயல் பட்டு வெற்றியை ஈட்டித் தரவல்லது என்கிறார் நாயனார்.

பொய்யா: - பொருளைப் பயன்படுத்துங்கால், அது தன் வேலையை கெடாது செய்தே தீரும் ஆகையால் பொய்யா என்றார். பொய்யா விளக்கம் = மெய் விளக்கம் என்கிறார் உரையாசிரியர் வீரராகவனார்.

பொருள், யாக்கை முதலிய நிலையானவை அல்ல என்றாலும், அவை இவ்வுலக வாழ்க்கைக்கு வேண்டிய கருவிகள் என்பதையும் நாயனார் நன்கு எடுத்துக் கூறியுள்ளார். இதுவே நடுநிலை பிறழாத நல்ல கொள்கை.

பிறரைக் காட்டிலும் ஒரு சைவ சமயப் பெரியாருக்கே இத்தகைய நடுநிலை நெறி கைவரும் என்பது கருதத்தக்கது.

செவ்வாய், 2 நவம்பர், 2010

Deepalvali greetings to all

ஆகும் சீரென்றால் ஆசீர் அதுவாகும்
நோகும் யாதேனும் நும்மை அணுகாமல்
பாகும் செந்தேனும் பாயும் சுடர்வாழ்வை
நேகும் நீர்மைதீர் தீப ஒளிதருமே

நேகும் -மென்மையாகி ஒடியும். நீர்மை - தன்மை.
தீர் -தீர்க்கின்ற.