வியாழன், 19 ஏப்ரல், 2012

நான் அவரை நம்பித் தொலைந்தேன்

இனி வாயிலான் தேவனார் என்னும் சங்கப் புலவர் பாடிய ஒரு சிறு பாடலை நுகர்வோம்.

மழைவிளை யாடும் குன்றுசேர் சிறுகுடிக்
கறவை கன்று வயிற் படரப் புறவிற்
பாசிலை முல்லை ஆசில் வான்பூச்
செவ்வான் செவ்வி கொண்டன்று
உய்யேன் போல்வல் தோழி யானே.


குறு. 108

இது தலைவி தோழிக்குக் கூறியது பற்றிய பாடல்.

அருஞ்சொற் பொருள்: சிறுகுடி = சிற்றூர்.
கறவை = கன்றையுடைய பசு. கன்றுவயின் = கன்றினிடம். புறவு = முல்லை நிலம். பாசிலை = -பச்சை இலை. ஆசு = குற்றம். ஆசில்-
ஆசு இல்= குற்றமற்ற. வான் பூ = வெண்ணிறப்பூக்கள். செவ்வான் - சிவந்த வானம். கொண்டன்று = அழகு கொண்டது.

யான் உய்யேன் = நான் இனி வாழமாட்டேன். (நான் அவரை நம்பித் தொலைந்தேன் என்பது). போல்வல்= போலும். தோழி யானே என்றபடி.



வருவேன் என்று சொல்லிச் சென்று, வாராது போன தலைவர்களை நினைத்துத் தலைவியர் வடித்த கண்ணீர்ப் பாடல்களில் இதுவும் ஒன்று.

காதல் எண்ணாதார் சாதலைத் தழுவவேண்டாமே...


காதல் காதல் காதல்
காதல் போயின் காதல் போயின்
சாதல் சாதல் சாதல்

இது மகாகவி பாரதியின் வரிகளல்லவா?

பாடல் புரிந்திருக்கும், அதன் அழகு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

மேற்கண்ட பாடலைப் பாடிய புலவர் பற்றி:


இதைப் பாடிய நல்லிசைப் புலவர்தம் இயற்பெயர் தேவன் என்பதுபோலும். உயர்வுப் பன்மையில் தேவனார் என்றனர். வாயிலான் என்பதென்ன என்பது ஆய்வுக்குரியது. இதனை வாய்+இலான் என்று பிரித்தால் எப்போதும் அதிகம் பேசாமல் அடக்கமாகவே இருந்தவர் என்பதற்காக ஏற்பட்ட பெயரா என்று தெரியவில்லை. ஊமையானவர் என்று பொருள் கொள்ள இயலவில்லை. வாயில்+ஆன் என்று பிரித்து வாயில் காப்போரின் தேவன் அல்லது தலைவர் என்று கொள்வதில் உள்ள தடை என்னவெனின், வாயிலான் என்பது ஒருமை வடிவில் இருப்பதே. இத்துறையில் ஆய்வு மேற்கொள்வோருக்கு இதை விட்டுவிடுவோம்.

இப்பாடலின் கருத்தினைப் பார்ப்போம்:

குன்றுகளில் மழை வந்து விளையாடத் தொடங்கிவிட்டது. மழை விளையாடும் குன்று என்பது அருமையான சொல்லாட்சி. ஆகவே இது மாரி காலம். தலைவி வாழ்வது இக் குன்று சார்ந்த ஒரு சிற்றூரில் தான். அங்குள்ள கறவைப் பசு(க்கள்) தம் கன்று(களை) நோக்கிச் செல்கின்றன. அவை தம் கன்றுகள்பால் எத்துணை அன்பு உடையவை.இதுபோன்ற அன்பினை தலைவி தலைவனிடம் எதிர்பார்க்க முடியவில்லை. அவன் தலைவியை நாடி வரவில்லையே! முல்லைச் செடிகளில் பச்சைப் பசேலென்று இலைகள். முல்லைப்பூக்களோ, தம் வெண்மையினால் வானத்தின் செம்மையை எதிர்கொள்கின்றன. அழகுக்கு அழகாக அன்றோ இருக்கின்றது! முல்லையைப் போல் வெள்ளை உள்ளத்துடன் காத்திருக்கும் தலைவியை நோக்கி, செவ்வானம் போல் தலைவன் வந்து எதிர் நிற்கவில்லை. அந்த முல்லைக்குக் கொடுத்துவைத்தது தலைவிக்கு இல்லை.

மாரி காலம் வருவதற்குள் வந்துவிடுவேன்! கறவைப் பசுக்கள் கன்றுகட்குப் பாலூட்டுமுன் நான் வந்து உனக்குக் காதல் அமுதூட்டுவேன்! வெண்முல்லை செவ்வானைச் செவ்வி காணுமுன் நான் வந்துவிடுவேன்!....என்றெல்லாம் உறுதிகளை அள்ளி வீசியவன், அப்பருவகாலம் வந்துவிட்டது, அவன் எங்கே? நான் தொலைந்தேன் தோழீ! தொலைந்தேன்... என்று தலைவி........


தலைவியின் உள்ளம் முல்லைபோல் வெண்மை, தலைவனிடம் தான் செவ்வானம்போல் செம்மை இல்லை. செம்மை = நேர்மை.

இப்போது பாடலை இன்னொருமுறை பாடிமகிழுங்கள்.

உலகம் நல்லதாக இருக்கவேண்டுமெனில்

இனி, ஒளவையாரின் ஒரு புறப்பாடலைப் படித்து இன்புறுவோம் வாருங்கள்.

இதில், உலகம் நல்லதாக இருக்கவேண்டுமெனில், ஆண்கள் நல்லோராக இருக்கவேண்டும் என்று பாட்டி கூறுகின்றாள்.ஆண்மக்கள் கோணல் வழிகளில் செல்வராயின், அப்புறம் உலகம் எங்ஙனம் ந்ல்லுலகமாய் இருப்பது. ஆண்களே பெண்டிருக்கும் தீங்கிழைத்துவிடுகின்றனர் என்பது தெளிவு. பெண்கள் தீயவழிகளில் சென்றிருப்பராயின், அதற்கும் ஒரு கேடுறும் ஆடவனே பின்புலத்தில் நின்றிருப்பன் என்று நாம் சொல்லலாம், பெரும்பாலும் இக்கருத்து பிழையாகிவிடாது,

நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிகையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே.

புறம் 187


இப்பாடலைச் சற்றே அணுக்கமாக ஆராய்வோம்:

ஆடவர் = ஆண்மக்கள் ( வாழுமிடம், )
நாடு ஆகு(ம்) ஒன்றோ = அரசாட்சியும் ஒழுங்கு முறைகளும் உள்ள நாடு என்ற ஓர் இடமானாலும், காடு ஆகு(ம்) ஒன்றோ = அவை யாவுமற்ற காடு எனப்படும் ஓர் இடமானாலும், அவல் ஆகு(ம்) ஒன்றோ = பள்ளத்தாக்கு எனப்படும் தாழ்வு இடமானாலும், மிகை ஆகு(ம்) ஒன்றோ - நிலம் உயர்ந்து நிற்கும் மலைப்பாங்கான இடமானாலும்,
(அவ்வவ்விடங்களில் அவ்வாடவர்கள்,) எவ்வழி நல்லவர் =எந்த முறையில் நல்லவர்கள் என்றாலும், அவ்வழி நல்லை = அம்முறையில் உலகமாகிய நீயும் நல்லதாகவே இருக்கின்றாய், வாழிய நிலனே = உலகமே, நீ வாழ்க! என்றபடி.


அவல் என்ற சொல், மலைப்பு உண்டுபண்ணக்கூடும்.
அது மலைப்பாங்கான இடம் என்பதற்கு எதிர்க்கருத்தாக, சமதரைப் பகுதிகளைக் குறிக்கிறது. இச்சொல்லில் அமைப்பைத் தனியாக ஓர் இடுகையில் விளக்கியுள்ளேன். மேலே  4.7.12 தேதியின் இடுகையைக் காண்க.




வையகம் எல்லாம் எமது - So said an elephant

உங்களுக்கு முத்தொள்ளாயிரத்திலிருந்து இன்னொரு இனிய பாடல், இதோ:


மருப்பு ஊசியாக மறங்கனல்வேல் மன்னர்
உருத்தகு மார்பு ஓலையாக --- திருத்தக்க
வையகம் எல்லாம் எமது என்று எழுதுமே
மொய்யிலைவேல் மாறன் களிறு.


மருப்பு = யானைத்தந்தம். மறம்= வீரம்.
கனல் = ( தீபோலக்) கனல் (வீசும்.)

வேல்மன்னர் - வேலெடுத்துப் போரில் ஈடுபட்ட மன்னர்.

உருத்தகு மார்பு =உருவத்திற்குத் தகுந்த மார்பு, என்றால் விரிந்த மார்பு.

ஓலையாக - எழுத்தைப் பதிவு செய்யும் பொருளாக,

திருத்தக்க -உயர்வு தங்கிய. வையகம் = உலகு.

எல்லாம் எமது = யாவும் எம்முடையது.
மொய்யிலைவேல் =இலை மொய்வேல்: இலைபோன்ற வேலின் குத்தும்பகுதி. கூரிய வேலை யுடைய என்பது.
மாறன் = பாண்டியன். களிறு = யானை.





வேல் என்ற ஆயுதத்தை நோக்கினால்,
அதன் கூரிய பகுதியில் ஓர் இலை இருப்பதைப்போன்ற வடிவம் இருக்கும். இதனைத்தான் "இலை மொய்க்கும் வேல்" என்கிறார் புலவர். மொய்த்தல் என்ற சொல் இங்கு பாநயம் சேர்க்கின்றது.

பாண்டிய மன்னனின் யானை, போர்க்களத்தில் என்ன செய்துகொண்டிருந்தது? இந்த உலகமெல்லாம் எங்களுடையது என்று எழுதிக்கொண்டிருந்தது. போரில் ஓர் இடைவேளைபோல் ஏற்பட்டு, பாண்டிய மன்னன் ஓய்ந்திருந்த போதும் அவன்றன் யானை ஓய்ந்திருந்ததா என்றால் அதுதான் இல்லை. யானை தொடர்ந்து போர் நடவடிக்கைகளை மேற்கொண்டு , தன் தந்தத்தினால் (/தந்தங்களினால்) எழுதிக்கொண்டு இருந்தது.

எங்கே? பகை மன்னவர்தம் மார்பைக் கீறி அந்த வாக்கியத்தை எழுதிக்கொண்டிருந்தது! அதன் தந்தம்தான் ( /தந்தங்கள்தாம்) அதன் எழுதுகோல்.

இந்தப் பகை மன்னவர்கள்,வீரத்தில் சளைத்தவர்களா என்றால் இல்லை. அவர்களும் வீரக்கனல் வீசும் வேல்களை ஏந்தி வந்தவர்கள்தாம். இத்தகு பெரு வீரர்களுடன் தான் பாண்டியனும் போர்செய்துகொண்டிருந்தான்.

பாண்டியன் கோழை யல்லன். அவன் எதிரிகளும் கோழையர் அல்லர். அந்த யானையும் ஒன்றும் கோழையன்று. எங்கும் வீரக்கனல்.

பகை மன்னரின் வீரம், அவர்கள் வேலின்மேலும் அவர்கள் அகன்ற மார்பின்மேலும் ஏற்றிக் கூறப்படுகிறது; போரில், வெற்றியின் விளிம்பில் நின்றுகொண்டிருந்த பாண்டியனைக்கூட, அவ்வளவு வீரக்கனலைப் பெய்து வரணிக்கவில்லை புலவர்.
வீரர்களை வென்றவன் தான் பெருவீரன். இதைப் புலவர் நன்றாக உணர்ந்திருந்தார்.

புலவரின் புலமை யாது என்பதற்கு இவை எல்லாம் சான்றுகள். வெறும் எதுகை மோனைகளைப் பெய்து எழுதுவது, யார்வேண்டுமானாலும் எழுதலாம். அது கவிதையும் ஆகாது. அதை எழுதியவரும் நல்லிசைப் புலவர் ஆகிவிடமாட்டார்.

தெய்வம் தொழாது கணவனைத் தொழுதல்.

கன்னிக் காவலும் கடியிற் காவலும்
தன்னுறு கணவன் சாவுறின் காவலும்
நிறையிற் காத்துப் பிறர்பிறர்க் காணாது
கொண்டோன் அல்லது தெய்வமும் பேணா
பெண்டிர்தம் குடியிற் பிறந்தாள் அல்லள்

உதயகுமாரன் அம்பலம் புக்க காதை ௯அ - ௰2
மணிமேகலை.

கன்னிக் காவலும் கடியிற் காவலும் - கன்னியாய், அதாவது திருமணத்தின் முன் பெண்டிருக்குப் பெற்றோரும் மற்றோரும் அளிக்கும் பாதுகாவலும், அதற்கடுத்துத் திருமணம் நிகழ்ந்தபின் அவர்கட்குக் கணவன்மாரும் அவர்கள் நலம் கருதிய ஏனையோரும் அளிக்கும் பாதுகாவலும்;

தன்னுறு கணவன் சாவுறின் காவலும் - கணவன் இறந்து கைம்பெண்ணான பின் உறவினரும் ஏனையோருமளிக்கும் காவலும்;


நிறையிற் காத்துப் பிறர்பிறர்க் காணாது - கற்பு நெறி வழாமல் காத்துக்கொண்டு அடுத்தவர்கள் குறையேதும் காணாத படிக்கு, (1)

கொண்டோன் அல்லது தெய்வமும் பேணா - கணவன் இருந்தாலும் இறந்துவிட்டாலும் அவனையன்றித் தெய்வத்தையும் தொழாமல்;

இவ்வரிகளையும் இனிவரும் சிலவற்றையும் தொடர்ந்து காண்போம்.

Note: (1) பிறர் பிறர்க் காணாது - பிறர் கைம்பெண்ணைக் காணாத படி என்றும் உரைப்பர்.

செயற்கரிய செய்வார்.....

Refer to previous post and continue:

மணிமேகலை புத்தமதக் காப்பியம் என்பர். எனினும்
தெய்வம் தொழாமல் கணவனைத் தொழுக என்று புத்த மத நூல்கள் கூறியதாகத் தெரியவில்லை.(1) இது எங்ஙனமாயினும், கணவனைப் போற்றுவது தமிழர் கொள்கை, இன்னும் சொல்வதாயின் இந்துமத நெறியென்று பின்னர் பெயர் குறிப்பித்த நம் நெறியினர் போற்றிய கொள்கை என்பதே சரியானது என்று கூறலாம். மணிமேகலை பாடிய சாத்தனாருக்கு இது மிகவும் பிடித்த கொள்கை ஆதலின், இதனையே கூறிய வள்ளுவ நாயனாரையும் சாத்தனார் பிறிதோரிடத்துப் "பொய்யில்(லாத) புலவன்" என்று பாராட்டியமையும் ஈண்டு நினைவில் நிறுத்தற் குரியதாம்.

நாடகத் தொழிலுடையார் தனியொரு வகுப்பினராய் முற்காலம் தொட்டு இன்றுகாறு மிருத்தலை அறியலாம். அதற்கு இலக்கியச் சான்றுகள் மிகப்பல. இவ்வரிகளும் அதையே காட்டுவதுடன், கற்பு நெறியிலும் மணவாழ்வு மேற்கொள்ளுதலிலும் கைம்பெண்மைநெறியிலும் அவர்கள் நெகிழ்வுடையார் என்று குமுகாயம் கருதியதையும் படம்பிடித்து முன்வைக்கின்றது.

கற்புநெறி தவறாது போற்றிய வகுப்பினரிடைத் தோன்றிய கண்ணகிக்கு, அந்நெறியின்கண்ணே நிற்றல் எளிதாம்; அங்ஙனம் போற்றாதாரிடைத் தோன்றிய மணிமேகலைக்கு அது கடினமன்றோ! செயற்கரிய செய்வார் பெரியர் என்றபடி, மணிமேகலை கற்பென்னும் வெற்பேறி நின்றதைப் போற்றிடவே ஆசிரியர் சாத்தனார் இங்ஙனம் பாடிச் சென்றுள்ளார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாம் என்பது.

===========================================================================

Note: (1) If you have evidence in Buddhist literature on this point, please post the references here. I think this is Tamil and Hindu culture based. I have not found anything to the contrary in my reading and studies.

இலக்கியம்

இலக்கிய மென்ப
தெளிதன்று! கேட்டுக்
கலக்கிய கும்பியுடன்
காணாமற் போனோர்
வலுக்கிறதே எண்ணிக்கை!
வாழ்தமிழ் அன்றி
இனிக்கிறதே
மற்றிங் கெலாம்.

These words just came to my mind....I feel that lesser people are now interested in Tamiz. Do you not think so?

திங்கள், 16 ஏப்ரல், 2012

இரண்டு குருவித் தோழிகள்

இரண்டு குருவித் தோழிகள் பேசிக்கொண்டார்கள். பின் கூரையின் கீழ் அவர்கள் இருப்பிடத்திற்குப் பறந்து சென்றுவிட்டார்கள்.

அப்பம் எறிந்தாள் சிவமாலா -- தோழீ
அதுநம் விருந்தாம் வருவாயே.
வெப்பம் மிகுந்திடில் கூரையுண்டு - தோழீ
வேறேது வேண்டும் மகிழ்வாயே

கூரையின் கீழொரு மண்டபமாம் -- கேள்
குறையில்லை அங்கே வருவாயே.
ஆருமே அங்கு வருவதில்லை -- எனில்
அஞ்சா அரசும் நமதல்லவோ

முட்டை குஞ்சென்றே எதனையுமே --திருடி
முடக்கிடும் தீமைகள் நேர்வதில்லை;
பட்டாவைப் பெற்ற நிலத்தினிலும் --மிகப்
பண்ணாகும் நல்லிடம் வந்திடுவாய்.

note: வகையுளி: முட்டைகுஞ் / சென்றே / எதனையுமே. இதை முட்டை குஞ்சென்றே எதனையுமே என இயல்பாகவே எழுதியுள்ளேன்.