ஞாயிறு, 29 ஜூலை, 2012



பணிப்பெண் அன்பும் சேவையும்.



an affectionate  maid....


என்கால் தன்மடி மீதுவைத்தாள்
இனிதாய்த் தடவி வேதுவைத்தாள்
தன்கால் மொத்தடி பட்டதுபோல்
தான்மனக் கவலை உற்றுவிட்டாள்.

சின்னக் கண்ணனும் எனைத்தேற்ற
சேர்ந்தே பெண்ணவள் எனைப்போற்ற.
அன்னை மூவராய் ஆனதினால்
அதைத்த நோவதும் போனதன்றோ!

அன்பினர் யாரும் எட்டநின்றால்
ஆன வலியெலாம் கிட்டவந்து
பண்பில் எருமைபோல் முட்டநிற்கும்
அன்பினர் குறுகிடில் விட்டகலும்

இரவில் வலியும் ஏறிடுமோ
என்பால் தோழியும் கூறிடுவாள்
வருவது வரட்டும் என்செய்வது
வைத்தியம் என்பது பின்செய்வது


வேது = இளஞ்சூடு கொடுத்தல்.
மொத்தடி - மொத்து அடி.
அதைத்த= வீக்கம் ஏற்பட்ட.
நோவு = வலி. நோவு அதும் = நோவு அதுவும்
கிட்ட - பக்கத்தில். அருகில்.
பண்பில் - பண்பு இல் - பண்பு இல்லாத
அன்பினர் - அன்பு உடையோர்

குறுகிடில் -  நெருங்கி வந்தால் 

திங்கள், 23 ஜூலை, 2012

பாஷாணம்

நஞ்சு அல்லது உண்ணக் கொல்லும் பொருள்  பலவகை, சில பச்சையாகவே உண்டு  சாவினை  வரவழைத்துக் கொள்ளும்  திறம்  தருவதாம்  இதற்குரிய சொல் :

பச்சைநஞ்சு என்பதாம்,

 பச்சைநாவி  என்பது இன்னொரு நஞ்சின்  பெயர் .(aconite)

இனி பாசாணம் (பாஷாணம் ) என்ற சொல் எங்ஙனம்  அமைந்தது.?

ஆணம் என்பது  குழம்பு போல்  காய்ச்சப்படுவது.

பசுமை +  ஆணம் =  ; பாசாணம் .>  பாஷாணம். (இங்கு  முதனிலை நீண்டுள்ளது )

(இன்னோர் எடுத்துக்காட்டு  பசுமை + இலை = பாசிலை.)

அதாவது பச்சிலையை அவித்தெடுத்த நஞ்சு அல்லது  நஞ்சுக் குழம்பு என்பதாம்.

 இப்போது இது பொதுப்பொருளில் வழங்குகிறது,    


  காய்கறிக் குழம்பைப் "பச்சைக் கறி "  என்பது மலையாள வழக்கு.    


பாஷாணம் என்ற சொல் சமஸ்கிருத அகரமுதலியில் காணப்படவில்லை.





Poison என்ற ஆங்கிலச் சொல், ஒரு குடிக்கும் நீர்ப்பொருள் என்று பொருள்படும் சொல்லினின்று வந்ததாகக் கூறுவர்.:-


(potion, ,  a portion of a drink,  a drink in general.


குடிக்கத் தரப்படுவது (=gift)  என்று பொருள்தரும் சொல்லிலிருந்து பல ஐரோப்பிய மொழிகளில் இதற்குச் சொல் அமைந்துள்ளதென்பர்.


தமிழில் " பச்சிலை",  "வேகவைத்தல்" முதலிய கருத்துகளின் அடிப்படையிலேயே சொல் அமைந்துள்ளது.



மலாய்மொழியிலும் பல தமிழ்ச்சொற்கள் வழங்குகின்றன.
பாசாணம் குறிக்கும் ராச்சூண் என்னும் மலாய்ச்சொல்,
அரைச்சுண் (அரைச்சு உண்) என்பதன் திரிபு போல் தோன்றுகிறது. இது மேலும் ஆராய்வதற்குரியது. தற்கொலை செய்துகொள்வோருள், பச்சிலைகளை அரைத்து உண்டு மாண்டவர்கள் பலர்.
Poison  என்ற ஆங்கிலமும் பாசாணம் ("பாyசாண்") என்பதனோடு சற்று ஒலியொற்றுமை உடையதே.
இவற்றைப்பற்றி இங்கு ஏதும் கருத்துக் கூற முற்படவில்லை.






வியாழன், 19 ஜூலை, 2012

சங்கப் புலவர் கொல்லன் அழிசியார் " பனிப்புதல்"



பனிப்புதல் இவர்ந்த பைங்கொடி அவரைத்
கிளிவா யொப்பின் ஒளிவிடு பன்மலர்
வெருக்குப்பல் ருவின் முல்லையொடு கஞல,
வாடை வந்ததன் தலையும்  நோய் பொரக்
கணடிசின் வாழி தோழி தொண்டிரைக்
கடலாழ் கலத்திற் றோன்றி
மாலை மறையுமவர் மணிநெடுங் குன்றே.


கொல்லன் அழிசியார், குறுந்தொகை  240.

இவ்வழகிய பாடலின் பொருளை  இனி நோக்குவோம்.




அருஞ்சொற்பொருள்


புதல் - புதர். பனிப்புதல்:  பனிப்பொழிவின் காரணமாக மிகக் குளிர்ந்துவிட்ட புதர்  இவர்ந்த = பற்றி  ஏறிய.  பைங்கொடி அவரை = பசுமையான அவரைக் கொடி.  கிளிவாய் ஒப்பின் = கிளியின் அலகினை ஒத்த.
ஒளிவிடு பன்மலர் = ஒளிவிடுகின்ற பல மலர்கள்.
வெருக்குப்பல் = காட்டுப் பூனையின் பல். உருவின் = உருவத்தை ஒத்த.  முல்லை - முல்லைமலர். கஞல = செறிய.  வாடை = வடக்குத் திசையினின்றும்  வீசும் குளிர்காற்று. பொர = வருத்த. *தெண்டிரை = தெண் - திரை, தெளிந்த அலைகள்,
கடல் ஆழ் - கடலில் மூழ்கும்.  கண்டிசின்  =  காண்பாயாக .


இவர்தல்- (கொடியைக் குறித்து இச்சொல் பயன்படும்போது, மிக அடர்த்தியாகவும் உயரமாகவும் அக்கொடி மேலேறுதலை உணர்த்தவல்லது.  கண்டிசின் - காண்பாயாக என்பதாம். இசின் என்ற இடைச்சொல் இப்போது வழக்கில் இல்லை.  சில ஆய்வாளர்கள் இதை கங்கையாற்றுப் பகுதிகளில் வழங்கும் எழுத்துமுறையற்ற ஒரு திராவிட மொழியில் வழங்குவதாகக் கூறி யிருந்தனர். இக்குறிப்பு தற்போது என்னிடமில்லை.


கண்டு+ ஈகு + இன்  = கண்டீகின் > கண்டீசின்  கண்டிசின்   எனத் திரிந்திருக்கலாம் என்பர். ஈதல் = ஈகுதல், தருதல் பொருள்.  காண்க, காண்தருக என்பன  ஒத்த பொருள்  உடையன  எனலாம்., . 



தெள் - தெளி - தெளிவு.





தெள் - தெள்ளு,   தெள்ளுதமிழ்.
தெள் - தெள்ளத் தெளிந்த (மரபுத் தொடர்.)




தெள்+மை = தெண்மை.= தெளிவு.
தெண்மை+ திரை=  தெண் திரை = தெண்டிரை.




மாலை மறையுமவர் மணிநெடுங் குன்றே என்பது.


தலைவியின் வீட்டிலிருந்து பார்த்தால் காதலர் வதியும் நெடுங்குன்றம் மாலையில் செஞ்சுடரோனின் ஒளிவெள்ளத்தில் அழகு மிளிரநிற்கின்றது.  மணி - அழகு, ஒளி என்பது பொருள். அவர் மணி நெடுங் குன்றம் : காதலர் வாழும் அழகொளி வீசும்  நெடிய  சிறு மலை. அவர் அருகில் இல்லாவிடினும், அவ்வழகிய நெடுங்குன்றையாவது நோக்கிய வண்ணம் தலைவி தன் மனத்தை ஆற்றிக்கொண்டிருந்திருப்பாள் .    .மாலை போகப்போக, இரவின் இருள் கவியக்கவிய, மலை மறைந்துவிடுமே! அவரும் இங்கில்லை. கண்டு மனங்களிக்க அவரது மலையும் மறைந்துவிட்டால், இத்துன்பத்தை எங்ஙனம் தாங்கிக்கொள்வது. இப்போது இரவு வருவதுதான் பெருந்துன்பமாகிவிட்டது. மாலை மாலையாகவேயாவது இருந்துவிடக்கூடாதா?


மாலை  என்பது  ஒளி யும்  இருளும் கலக்கும்  நேரம்  ஆகும் . இங்கு  மாலை  என்றது  இந்த  நேரத்தின்  விளிம்பைக்  குறிக்கிறது ,  மால் > மாலை.


தோழியிடம், "அதோபார், அந்த மலை மாலையில் மறைந்துவிடுமே....!. ""ஒளி குன்றக் குன்ற மலையும் கொஞ்சம் கொஞ்சமாக மறையுமே"  என்கிறாள் 


மாலையில் அவன் வாழும் மலைகூடக் கண்ணுக்கு மறையக்கூடாதா? அத்துணைக் காதலா? புலவர்  அழிசியாரின் பாடல் வெகு"ஜோர்" என்றுதான் சொல்லவேண்டும். என்னே நம் சங்க இலக்கியங்களில் வரும் காதற் சித்திரங்கள்.....





இனிப் பாடலின் முழுப்பொருளையும் காண்போம்.


குளிர்ந்த புதரில் பற்றி ஏறியுயர்ந்த அவரைப் பசுங்கொடி  கிளியலகினை ஒத்த ஒளிவீசுகின்ற பல மலர்களைத் தாங்கி நிற்கிறது.  வடக்கிலிருந்து வாடைக் காற்று  (குளிர்காற்று) வீச,  காட்டுப் பூனையின் பல்போன்ற முல்லை மலர்கள் அவரைப் பூக்களுடன் சென்று செறிகின்றன.   இயற்கையில் இவை இங்ஙனம் ட்கலந்துறவாடவே, எதிர் தோன்றும் மலையில் வாழும் காதலன் அருகில் இல்லாமையால், தலைவியைப் பிரிவுத்துயர் வருத்துகிறது.  போகட்டும், அவருடைய அழகிய ஒளிசெய்யும்  சிறு மலையையாவது  பார்த்துக்கொண்டே துயரை ஆற்றிக்கொண்டு    இருந்துவிடலாம் என்றால் மாலை வந்துவிட்டது. கடலில் கலம் மூழ்கும்போது கொஞ்சம் கொஞ்சமாக ஆடி ஆடி உள்ளிறங்கி மூழ்குதல் போல, மலையும் இருள் கூடக்கூட மறைந்துவிடும். தோழி, அவர் வாழ்க,நீயும் யாவரும் வாழ்க! இனி நான் எதைப் பார்த்து ஆற்றுவேன்? காதலெனும்  நோயுடன் அன்றோ நான் போராடிக்கொண்டிருக்கிறேன்....."
{நோய்  பொர   என்பது  புலவரின்  தொடர் .} 




என்பது தலைவி கூற்று.


நோய்  எனை  வந்து  வருத்துகிறதே .....என்பது பொருள்   பொருதல்  = சண்டை இடுதல் என்றும் பொருள்படும் சொல்,  காம  நோய்  அவளுடன்  போராடுகிறது  என்பது  பொருத்தமான உரை.  வாட்டுகிறது  என்றும் கூறலாம் .. காம நோய்க்கு  அவள்  ஒன்றும்  பலியாகிவிடவில்லை  என்பது  நன்கு தெரியும்படி """'பொ ர "  என்றார்  புலவர்.


அந்த மலை மறைவதுபோல, அந்தக் கலம் மூழ்குவதுபோல தலைவியும் துயரில் மூழ்கி வாடை தரும் குளிரில் வாடுவதுபோல் வாடி,
துன்பமே உருவாகிவிடுவாள்..... பாவம்....




புதன், 18 ஜூலை, 2012

அற்புதம்


அற்புதம் என்பதோ ஓர் அற்புதமான சொல். இச்சொல்லின் அடிச்சொற்கள் யாவை என்று ஆய்வோம்.

அருமை, புதுமை என்ற சொற்கள் நீங்கள் அறிந்தவையே.

அரு + புது  + அம்.
தமிழாசிரியர்கள் இவற்றை அரும்புதுவம் என்று புணர்த்தி யிருப்பார்கள்.

இங்கேதான் சொல்லமைப்புப் புணர்ச்சி வேறுபடுகிறது.

அரு >அர்.> அற்.
புது > புத். (இங்கும் உகரம் கெட்டது).
அம் -விகுதி. அம் என்பது அழகு என்றும் பொருள்படும்.

அர்+புத்+அம் = அற்புதம்.

அரு என்பதன் மூலவடிவம் அல் என்பது. இதற்கு விளக்கம் உண்டு எனினும் பின்பு காண்போம்.

ஆகவே  அல்+புது+ அம் = அற்புதம் என்பதுமாம்  .

லகரம் ரகரமாய்த் திரியும். பகரத்தின்முன்  லகர ஒற்று றகரம்   ஆகும்           

அல் ஒரு சொல் விகுதியுமாகும்.

எனவே,  இச்சொல் அழகிய அரும்புதுமை என்ற அளவிற்குப் பொருள்விரிக்க இடம்தரும்.



இது திரித்துப் புனையப்பெற்ற சொல் என்பது சொல்லாமலே விளங்கும்.

செவ்வாய், 17 ஜூலை, 2012

நம்பிக்கை யாவுமே வீண்தானோ!!


இங்குதானே இருந்தாய்
பொங்கும் மகிழ்வுடன்!
வேறு கவனத்தில்
நூறு கோடி எண்ணங்களின்
கெடுபிடி தன்னில் தவித்துவிட்டு,
இல்லம் திரும்பி என்
செல்லமே நானுன்னை
மீண்டும் தரிசிக்க எண்ணுகையில்
எங்கோ மறைந்தனையே....
எங்குதான் சென்றாயோ
மீண்டும் நானுனைக் காண்பேனோ!
நம்பிக்கை யாவுமே வீண்தானோ!!


இன்றிரவு என் கனவிலாவது வரமாட்டாயா!

எனை நீங்கி,
முன்பின் அறியா இடத்தில்
மிளிர்வதும் உனக்கு அறமோ.
தளர்வுற்றுத் தாழ்வதென்  தரமோ!
இதுவே நான் வாங்கிவந்த வரமோ!

வெள்ளி, 13 ஜூலை, 2012

தொல்காப்பியம் பெயர்க்காரணம்.



தொல்காப்பியம் பெயர்க்காரணம்.
கடல்கோளால் தமிழர் நிலங்கள் அழிந்து, மக்கள் பலர் மாய்ந்ததுடன், தமிழ் நூல்களும் மிகப்பல அழிந்துபட்டன. அப்புறம், பாண்டிய மன்னன் வடக்கில் இருந்த பல நிலப்பகுதிகளை வென்று பிழைத்தவர்களை அங்குக் குடியேற்றினான். அவன் " நிலந்தரு திருவிற் பாண்டியன் " எனப்பட்டான். அழிந்துபோன இலக்கண நூல்களை நன்கறிந்திருந்த தொல்காப்பியனாரும் பிழைத்தவர்களில் ஒருவர். அவரை அழைத்து,  அழிந்தவற்றில் நினைவில் நின்றவற்றைக் காத்தல் பொருட்டு, ஒரு புதிய இலக்கணம் பாடும்படி கேட்டுக்கொண்டான். அதற்கிணங்க, தொல்காப்பியனாரும் தம் இலக்கண நூலை இயற்றியருளினார்.

இங்ஙனம் தொன்மை காத்தற்பொருட்டு இயற்றப்பட்டதாகலின், அது " தொல்+ காப்பு+ இயம் " = தொல்காப்பியம் எனப்பட்டது.

சிலர், காப்பியம் என்பது சமஸ்கிருதம் என்று வாதிடுவர்.தொடர்கதைப் பாடல்களை குறிக்கும் "காவ்யா" என்ற சொல்லினின்று காப்பியம் வந்ததென்பர்,

தொல்காப்பியம் என்பது ஒரு காவியம் அன்று. அது இலக்கண நூல்.  ஆதலின், காவியம் என்பதிலிருந்து காப்பியம் வந்து, பின் தொல்காப்பியமாயிற்று என்பது வீண்வாதமாகும்.

இதை நிலைநாட்டும்பொருட்டு, தொல்காப்பியர் காலத்தைக் கிபி 8ம் நூற்றாண்டு என்று கூறுவதும்  பொருந்தாதது ஆகும்.

காப்பியம் என்ற சொல்லும் ஏனை இந்தோ ஐரோப்பிய மொழிகளில் இல்லை. சமஸ்கிருதம் இந்தோ ஐரோப்பிய மொழி என்று வெள்ளையர் கருதுவதால், காப்பியத்துக்கு இனம ஆன சொல் மேலை நாட்டில்  வழங்கினால் தவிர, அது சமஸ்கிருதமாகாது.

மேலும், காப்ய என்ற சமஸ்கிருத்ச் சொல்  "காபி என்பவனின் வழிவந்தோன்" {   a descendant of Kapi ( a person) } என்று பொருள்படும்.  காப்ய காவ்ய என்பன தொடர்பற்றவை என்பது தெளிவு,


காவ்ய என்பதை காப்ய என்று மாற்றினால் பொருள் வேறுபட்டு,  காவியத்தைக்கூடக் குறிக்காது. பின்பு எங்ஙனம் அது ஓர் இலக்கண நூலைக் குறிக்கும்?

தொல்காப்பியருக்குத் திரணமாதக்னி, அல்லது திரணமாதுக்னி என்ற பெயரும் இருந்ததாகக் கூறப்படுகிறது.   திரண என்பது உள்ளது தக்கவைத்தல், பாதுகாத்தல் என்பதாம்.  மாத  என்பது எழுதப்பட்டதைக் குறிக்கும் (composed). . அக்னி என்பது பொன்னையும் குறிக்கும்.எழுதப்பட்டவற்றை  அல்லது முன் பாடப்பட்ட இலக்கணங்களைக் காக்கும் பொன்னானவரென்று பொருள் தருகிரது. தொல்+காப்பு+இயம் என்பதும் அதே காப்பகப் பொருளைத்  தான் தருகிறது. இதனாலும், தொல்காப்பியத்தில் வரும் காப்பியம், எழுத்தில் காக்கப்பட்டதைக் குறிக்குமே யன்றி ,கதைகளைப்பற்றிய  காப்பியத்தைக் குறிக்காது.

காவ்ய என்ற சொல்லும் கவித்தல் (குவித்தல்) என்பதன் மகவு ஆகும்.



Related topics:

Please see posts dated 29 June 2012:

*  Tolkappiyam Timeline.

*  அதங்கோடு ஆசான்


Note:-

In fact all inscriptions in India were in Prakrit till the early centuries AD : " They were not in Sanskrit, the later polished language 










செவ்வாய், 10 ஜூலை, 2012

due appreciation or praise


பாராட்டத் தக்கவரை பாராட்டாமல் விடுதலும்
குற்றமே


யாரோடும் மானிட நேயம் --- பொலிந்திட
யாத்திடும் பாக்களில் காத்திடும் பண்பினில்
பாரினில் செந்தமிழ் மேவி -- குழைந்திடப்
பயக்கும் கருத்துகள் தேனுள் தினைத்துகள்

இத்தகு பாவலர் தம்மைப் --- புகழ்ந்தி
இனிய சிலச்சில பணிவில் சொலத்தகும்;
பத்தொடும் ஒன்றெனக் கும்மி --- அடித்தொரு
பக்கல் களைந்திடில் பொக்கம் விளைந்திடும்.



குறிப்பு :--தேனுள் தினைத்துகள் = தேனும் தினைமாவும் போல இனிமையானது.
பக்கல் - (ஒரு ) ஓரமாக;  களைந்திடில் = வீசிவிட்டால்.
பொக்கம் - குற்றம்'  அல்லது பிழைபடுதல்




பலியிடத் தயங்காப் பாழ்மனத் தோர்நிறை
உ;லகிடை உலவியும் ஓருயிர்க் கிரங்கி
எலியென்றும் எள்ளாது நலிவொன்றும் கொள்ளாது
மலைக்கும் மனம்தரு கனம்சிறு கண்ணன் 


குறிப்பு :-


எலிக்கும் வீட்டில் இடம் வரையாது வழங்கினார்
மலைக்கும் நிலைக்க இடம் தருக என்றார்.
சிறந்த உள்ளம் உடையார்......
.






சுந்தர ராசனார் சொல்லாட்டோ இத்திரியில்
மந்திர நன்மொழிபோல் மாண்புற்றுச் -- செந்தமிழை
வெல்பரந் தாமரின் வெள்ளியல் மாறாத
நல்விருந்தாக் கிற்றே நமக்கு.

குறிப்பு 


சொல்லாட்டு - சொல்விளையாட்டு. 
வெல் பரந்தாமர் - ஒரு தற்கால இலக்கண ஆசிரியர்.
வெள்ளியல் - வெண்பா இலக்கணம்.




குறள்வெண்பா :


பக்கமலை போனாலென் தக்கசின்னக் கண்ணனையே
ஒக்குமலை ஒன்றில்லாப் போது!

தொலைமலையால் யாதுயர்? சின்னக்கண் தோன்றல்
கலைமலையாய் முன்னெழுமிக் கால்/




குறிப்பு:  முன்னெழுமிக் கால் =  முன் எழும் இக்கால்,  அதாவது முன்னே தோன்றுகின்ற இப்பொழுது. 

வெள்ளி, 6 ஜூலை, 2012

மனங்கவர் ஷெல்லி


ம ன ங் க வ ர்  ஷெ ல் லி


ஷெல்லியின் கவிதைகளைப் படித்துக் கொண்டிருந்தேன்.
அவனுடைய கருத்தோட்டம் இப்படி யிருந்தது:

வெகுண்டெழுந்த மேற்குக் காற்றே
இலையுதிர் காலனின் மூச்சே
கண்ணுக்குப் புலப்படாமல் இருந்துகொண்டு
காய்ந்த இலைகளை விரட்டுகிறாய்.

இதைக் கவிதை வடிவில் எழுதலாமே என்ற எண்ணம் எழுந்தது  அது இப்படி வந்தது:


உதிர்காலன் எதிர்வீச்சாய் உரத்த மூச்சாய்
ஓங்கித் திசைமேற்கின்வழி வீங்கும் காற்றே,
புதிராகி, விழித்திரைக்குப் புலப்படாமல்
புரட்டிச்சரு கனைத்தும்பேய் விரட்டினாயோ!

ஆனால் தொடர்ந்து மொழிபெயர்க்கவோ, தழுவிப் பாடவோ முயற்சி செய்தேனில்லை.




மெதுவெள்ளை, கறுப்புடனே உறுத்தும் செம்மை
மேவுகின்ற நிறச்சருகுக் குவியல் தம்மை

என்ற வரிகளை, "காய்ந்த இலைகளை" என்பதற்குப் பதிலாக இணைத்திடலாமா என்றும்  யோசித்தேன்.....

வேறு  சோலிகள் வந்து குறுக்கிட்டுவிட்டன.....

nAthi


continue from post titled "anaathai" dated 5.7.12   (அனாதை ) 

நா என்பது அன்மை  அல்லது "அல்லாமை"  (அல்லாதது) குறிக்கும் ஒரு சொல்.ஆங்கிலத்தில் உள்ள "நோ" என்பது  அச் சொல்லுக்குத் "தூரத்துச் சொந்தம்". இந்தோ ஐரோப்பிய மொழிகளில் உள்ள இணையான சொற்களைப் பட்டியலிட்டுக் கொள்ளுங்கள்.

அல்> அலா(தது) > அனா > நா.

ஒப்பீடு:

அம் > அம்மை > அம்மா > மா > மாத்ரு

இப்படித் தலைபோனவை பலவாம்.

தலைபோய் வால் நீண்டவை பல.


நா > நாதி.  (தி விகுதி)

நாதி இல்லாதவன்  என்பதில், உள்ள நா, ஆதரவு  என்று பொருள் தருவது.  வெறும் இன்மை அல்லது அன்மையைக் குறிப்பதன்று.

ஆகவே இந்தோ ஐரோப்பிய நா வேறு. நாதி என்பதில் உள்ள நா வேறு

வியாழன், 5 ஜூலை, 2012

maayOn


மாயோன் குழந்தைப் பருவத்திலே --அவன்
வாயைத் திறந்ததும் ஞாலம்கண்டு
தாயும் அறிந்து  மகிழ்ந்ததுண்டு -- அதைத்
தரணி உணர்ந்து நெகிழ்ந்ததுண்டு,

அனாதை


இதைக் கவனியுங்கள்.

மொழி  -  அன்மொழி.
முறை  >  அன்முறை

இப்போது:

ஆதரவு > அனாதரவு

பின்:  அனாதரவு > அனாத > அனாதை.

நாதி என்பதைப் பின் பார்க்கலாம்.@@

அன் -  என்பது எதிர்மறை முன்னொட்டு.



Note: @@  Please see continuation under heading:  nAthi,   posted date:  7.7.12



புதன், 4 ஜூலை, 2012

அமுதப் பெருநலம் அடையத் தகும்படி....








-
வெயிலும் நிழலும் ஒளியும் இருளும் இன்பமும்
துன்பமும் மண்மிசை இயல்பொருளே;

குயிலும் மயிலும் கூகையும் காக்கையும் கொக்கும்
குறைநிறை அடைதற் குரிபொருளே;

வயலில் பயிரும் வெயிலில் கருகி மழையில்
அழுகி அழிவது தெரிவதனால்,

இயவுள் இயற்றிய கரும வினையென இவற்றை
மனிதனும் நினைப்பதன் பயனறிவோம்.


நடப்பவை யாவும் நடக்கவி வைதாம் நாதனின்
செயலென நடங்துகொண்டால்,

அடைப்பதும் வேண்டுமோ துன்பம் இருள்புகு வாயிலை,
அறிந்திவை கூறிட வேண்டியவாம்'

துடைப்பது கண்ணீர்! அதற்கொரு மேலவன் துணியொடு
நிற்பவன் என்று துணிந்துணர்ந்தால்

மடைப்பளி நின்றிடும் மலைப்புறு வேதனை மாநில
மக்களும் கொண்டிட நடைபெறுமோ?


காரைக் காலவர் கண்டு மகிழ்ந்துயர் வேறக்
குறித்திடும் அம்மையின் வரல்நெறியில்

ஓரைந் தொடுக்கிய சாரத் தொடுதிகழ் வாழ்வைத்
தரித்தவர் யாரும் திறல்பெறுவார்.

தீரத் தெளிந்தவர் தேடும் அனைத்திலும் கூறப்
படுமறம் பொருளொடும் இன்பமிவை

ஆரத் தழுவிய அமுதப் பெருநலம் அடையத்
தகும்படி அணிசெயும் உலகமைப்போம்.





மதிகாண நிதிவேண்டும்


திருவுண்டு எனும்போதும் மதிகாண நிதிவேண்டும்
திருவென் றிருந்தாலே போதும் --- அதில்
திருத்தமே வேண்டாமெப் போதும்!


,

நந்தனாருக்கும் திருபாணாழ்வாருக்கும் கவிதீட்டிய சுதாமருக்குப் பாடியது



நந்தனையே சிவனேற்று நன்மை செய்தார்'-- அது
நாட்டினுக்கே இறையன்பின் தன்மை காட்ட!
விந்தையிதே பாணருக்கும் அந்தமில்லார் -- பத்தன்
வேண்டியதை அருள்செய்தார் மென்மை கூட்ட.

அந்தமில்லார் = சிவனார். பத்தன் = பக்தன்.



எனது கவிகள் சுதாமர் தாத்தாவுக்கு மிகவும் பிடித்திருந்தது. பலவற்றை மேற்கோளாகக் காட்டி அவர் என்னுடன் கவிதைகளால் "உரையாடினார்" எனில் மிகையன்று. தாத்தாவே கொஞ்ச நாள் தோழியாகிவிட்டார்.



திருமதியா என்றார்க்கு, மதிகாண நிதிவேண்டும் என்று பதில் இறுத்தது அவருக்குப் பிடித்திருந்தது,

மறைத்திறம் வழுவிடா மானிட மலை

நந்தனோ டெந்தபன் னாயன்மார் வந்துமே
ஒத்தியல் கின்றதாம் மொத்தநற் கருத்திது
மந்தனும் சொந்தவை குந்தமென் கைகளில்
நந்துமோர் நன்னிலை என்றதை ஏற்பனே.


வாழவே பிறந்தவர் வளநலம் கொண்டவர்
சூழுதுன் பனைத்துமே சூழ்ந்துணர்ந் தழிப்பவர்
ஏழ்பிற விகள்வரும் இடர்களைந் தொன்றுடன்
ஆழ்கடல் நீந்தியே அப்பால் களிப்பவர்.


பிறவியின் பயனைஇப் பிறவியி லடைபவர்
துறவியே ஆயினும் இல்லுளார் ஆயினும்
இறையொடு மொன்றியே நிறைகொள நின்றுள
மறைத்திறம் வழுவிடா மானிட மலையவர்.



வருவான் இறைவனே!


ஒருவரோ அல்லர் இருவரோ அல்லர்
அறுபதும் மூன்றுமே ஆனோர் தொகையாம்
திருவினை வாழ்த்தித் திறம்பெற் றவர்கள்
மறுவற நின்றவர் மாதவத் தோராம்.

அனையவர் தந்தவை ஆழ்கடல் அன்ன
இணையறு பாடம் இறைவர்த் தொழுதல்
புனைகதை அன்றிது போற்றிநின் றார்க்குத்
துணையென வந்து துயர்களை வுண்மை.


அன்பும் அறமும் பிறழ்செலவு உற்றவன்
மன்பதை தன்னில் மயக்கழிந் தானெனத்
தென்பட நின்று தெருள்பெறும் காலையே
அன்பரை ஆள வருவான் இறைவனே!       

தாயின் பொறுப்பென



தாயின் பொறுப்பென ஆய யாவினும் ஓய
ஒழிந்திட உதவியொன் றிலாப்படிக்கு

நோயும் நொடியற, காயும் வயிற்றினுக் காயதீம்
பால்தனை வாயில் புகட்டியபின்,

சாயும் காலமும் இராவும் பகலும் பொழுதிவை
சடுதியில் போகதுன் பலைப்படுவாள்,

போயும் இனியும் பொல்லா மகாரினால் புகழும்
தரமும் உலகினில் கொலைப்படுமோ?



மட்டில் மகிழ்வுடன் தொட்டில் குழவிநன் மெட்டில்
இசைபெறத் தாவி அணைத்திடுந்தாய்;

குட்டிக் குரங்கதன் சுட்டித் தனம்மிகக் கட்டிப்
பிடிக்குமப் பெற்ற கிளைக்குரங்கு;

ஒட்டித் திரிநலம் எட்டில் உறழுபத் தெட்டும்
செலும்வரை நெட்டில் வளர்தருமோ?

தட்டித் துரத்துமே முட்டும் சிறுகபி பட்டும்
அறிகிற மட்டம் அடைந்ததுமே!       

செயிர்தீர்ந்த சீர்வாழ்வு பயிர்செய் வோமே.


      We will follow examples set by Nayanmaar in devotional path

இறைகாட்டும் வாழ்நெறியில் நின்று செய்யும்
முறையெல்லாம் மாறாமல் முன்னே செல்லக்
குறையின்றிக் கூறிவரும் கொற்றம் போற்றும்
மறைசார்ந்த மாண்புமொழிக் குரித்தே நன்றி.

கண்காற்றில் தூசிவிழக் கசிந்த போதும்
கண்போற்றி அஃதகற்றிச் செல்லுமாப் போல்
முன்னேற்றப் பாதைபோம் அயர்ச்சி தாண்டி
பின்மாற்றம் ஒப்பாத முயற்சி வேண்டும்.

படியேறிப் படியேறிப் பார்த்த வீட்டில்
குடியேறி வாழகையும் கொடுப்பர் காணீர்!
அடிதொற்றிப் பேருந்தில் படியேறிப் பின்
மடிதொற்றி மாதணைக்கும் குழந்தை யாமே.

தன்வீட்டு வாழ்கூலி தந்து நட்பால்
பின்வீட்டில் முன்வீட்டில் இணக்கம் கண்டு
தன்பாட்டை யார்பிறர்க்கும் இடரே இன்றித்
தான்பாடி வீண்பாடு தவிர்த்து வாழ்வோம்.

சாதணப்பே நேர்ந்தாலும் சார்ந்த வாழ்வே
மாதணைப்பாள் மாதவத்தோன் பாங்கிலுள்ளாள்
நோதணத்தல் அவள்செயலே யாதும் வந்த
போதணைப்பாள் துன்பமெலாம் போம்போம் என்போம்.


நாயன்மார் கண்ணப்பன் நந்தன் பாணன்
நாட்டியதோர் நன்னெறியில் நலிவு நண்ணா,
சேயிருவர்க் காயானாள் சேய்மை செல்லாச்
செயிர்தீர்ந்த சீர்வாழ்வு பயிர்செய் வோமே.

27.9.2010.  Written for Sudha/s reading.
      

The gifts of God



மலைகளைத் தந்தான் மாகடல் தந்தான்
மாட்டுடன் ஆட்டினை, மாபல தந்தான்
இலைதழை செடிகொடி காய்கனி தந்தான்
இன்பமும் கோடியே இனிதுளே வைத்தான்


துய்ப்போன் பால்வினா வைப்போன் அவனலன்,
தோன்றிமுன் தொந்தரை செய்வோன் அவனலன்;
கைப்பொருள் தாவென வேண்டுவன் அவனலன்;
கரும வினையலால் பிறபதி வுறுத்திலன்.







5.10.2010

The greatness of mother.


குட்டியை மாந்தன் குழந்தைக்கே ஒப்பிட்டுக்
குட்டியெனும் சொல்லாலே கூறினீர் --- மட்டிலாத்
தாயின் பெருமையைத் தக்க படிசொன்னீர்
காயும் கனியாம் தரம்.


கனியாம் = கனியாகும். தரம் = தகுதி, நில




These lines were written in praise of Sudhama. 23.10.2010






உனது சொர்க்கம், உன் தாயின் காலடியில் இருக்கிறது.


--- நபிகள் நாயகம்.



செவ்வாய், 3 ஜூலை, 2012

An English poem: Unfamiliar personalities


         These are personalities before,
        With whom I was not so familiar;
        You had taken much great pains indeed
        Inducting ideas well much costlier!
ma.
        For both great persons of yesteryears
        You would be the sole speech writer!
        Just friendly between or crossing spears
        None besides you would e'er be the wiser.


        Whatever be their doctrine or creed
        You may, dear, with all haste just proceed;
        Let me be the spectator indeed,
        And all good things my way I shall heed




This was written  for Sudha.    29.10.2010.

Nandan PaNan conversation poem MY REPLY:

கவலைஒன் றில்லை நெஞ்சில்
கடவுளைக் கடைந்து கண்டால்,
தவலையுள்* தயிரை மத்தால்
தவறாமல் ஆய்ச்சி போலே; 
துவளுறும் துன்ப வாழ்வில்
துறக்கமே காணும் பாதை
சவளறத் தந்த ஐயர்
சாந்துணை ஏத்தத் தக்கார்.


அன்றுள நந்தன் பாணன்

ஆயவர் பேசிக் கொண்டார்
நன்றிவை சொன்ன பாங்கு
நான்மிகப் புகழ்ந்து சொல்வேன்;
ஒன்றது தெய்வம்; மாலும்
உயர்சிவ னாரும் என்ற
தென்றிசை மேலோர் வாய்மை
தெளிவுற நீவிர் சொன்னீர்.



My internet  senior friend  Suda wrote a imaginative poem, in which Nandan and PaNan had a conversation. It was quite interesting. I wrote, this  stanza in appreciation of the poem.  8th November 2010, 07:29 PM

அவல்.




"அவலாகு ஒன்றோ மிகையாகு ஒன்றோ" என்பது ஔவையாரின்  பாடல் வரிகள். புறம் 187

(இப்பாடலையும் அதன் பொருள் விளக்கத்தையும் இந்த  முன் இடுகையில் காண்க:   Pl see April 2012 collections. for this poem by Avvaiyar,  -> below   )

அவல் என்பது மலைப்பாங்கான இடத்துக்கு எதிரான பொருளில் இப்பாடலில் வருகிறது. மலை என்ற சொல்லுக்கு மடுவு என்பதுபோலவும், மேடு என்பதற்குப் பள்ளம் என்பது போலவும் எதிராக உள்ளது.

அரிசியிலிருந்து செய்யப்படும் அவல் என்பது வேறு.

அழு > ஆழ் > ஆழம்.
அழு > ஆழ் > ஆழ்தல்.
அழு > அழுந்து.
அழு > அழுந்து  > அழுந்துதல்.
அழு > அழுவம்.

  azuvam 1. depth; 2. pit; 3. deep sea; 4. expanse; 5. jungle, forest; 6. country, district; 7. battle; 8. middle; 9. abundance, copiousness; 10. greatness, excellence; 11. fortress

அழு > ( அழுவல் ) > அவல்.

எனவே, "ழு" இடைக்குறைந்து, அவலாயிற்று

இதில், அழுவம் என்பதனோடு ஒப்பிட்டு, அழுவல் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இனி, அழு  > அழுவு > அவு >  அவல் என்றும் இதனை உணர்ந்துகொள்ளலாம்.

திங்கள், 2 ஜூலை, 2012

Sivamala on Sanskrit cited,

Urban Dictionary.com citing Sivamala on Sanskrit.

You may read this article:

http://www.urbandictionary.com/define.php?term=sanskrit&defid=2459636,

" ..that between the languages of Southern India and those of the Aryan family there are many deeply seated and radical affinities; that the differences between the Dravidian tongues and the Aryan are not as great as that between the Celtic for instance and the Sanskrit. "

----G.U.Pope



வாழ்த்துக்கள்



கவிகள் தந்த இரு நண்பர்களுக்கு வாழ்த்து.

இருவரின் கவிகளும் இனிமை
இனிமைத் தமிழ்ச்சுவைத் தனிமை!
தனி-மையோ எழுதுங்கால் வடிந்து--ஒரு
வடிவான தேனாச்சு முடிந்து.

முடிச்சினில் பொதிதிரிப் பருப்பு,
பருப்பினில் சருக்கரை கலந்து,
கலந்ததைக் காய்ச்சினீர் பாகாய்,--அந்தப்
பாகினைப் பாவலர் நோகார்!

நன்கு முயன்று எழுதியுள்ளீர்கள். சுந்தரராசு அவர்கட்கும் சின்னக்கண்ணனுக்கும் வாழ்த்துக்கள், இனியும் பாடுங்கள், கேட்போம்.

பொதி = பொதிந்த; திரி = முந்திரி. நோகார்= விரும்பாமல் இரார்.
வாழ்த்துக்கள் எனலாகாது என்பர் அறிஞருள் ஒரு சாரார். இருவகையிலும் எழுதலாம் என்பதே  எமக்கு உடன்பாடு.

அடுத்தல் continue


அடுத்தல், அடுத்திருத்தல் கருத்திலமைந்த சொற்களின் ஆய்வு தொடர்வோமே!

அடு > அடி  (இ)
அடு > அடை (ஐ)
அடு > அடகு  (கு)
அடு > அடர் (வினைச்சொல்)

அடு (அடுத்து நிற்றல்) > அடு  (சுடுதல்) > அடுப்பு.

அடு > ஆடு  இது சூடு என்னும் பொருள்.

ஆடுறு = சுட்ட. ஆடுறு தேறல் - சூடான பானம்.

தொடர்வோம்.

ஞாயிறு, 1 ஜூலை, 2012

what poem is this? Just enjoy it!


முதுமை முடுகிவந் துங்கள் முனைப்பயர்த்திப்
பையப் பணிகளையே செய்யப் புகுத்திடினும்,
நோய்கள் நிலைமிகுந்து வாய்கண்கை நேர்தளர்ந்தும்
ஆய்வை எழுத்தையுமோர் பாவைச் புனைவதையும்
சூடு தளர்த்திச் சுடர்குறைத்த வேளையிலும்
தம்வேலை தம்குடும்பம் என்றசுமை மிக்குவந்து
இம்மியும் காலம் இசைந்துவராப் போதினிலும்
செந்தமிழ் யாண்டும் மறவாது வந்தவழி
எந்த நிலையிலும் பிறழாது இயங்கியவர்
சுந்தர ராசன் சோர்விலார்  வாழ்கவாழ்க!
அந்தர  அழகுக் கவிகள்  இவண்புனைக!
பொடிக்குத்தான்  போயிலையாய் பொற்கவிகள் ஈந்த
அடிக்கொரு பொன்னாய் அணிபெற்று நிற்கவே.
வெள்ளை அகவல் கலிவஞ்சி என்றுநூல்
உள்ள அனைத்துமே ஓங்க விளைத்திடுக.
தொல்லறி வாளர் திறம்பெற்றே
அல்லவை நீக்கியே பல்புகழ் நேர்படவே.

யாவும் நன்று. இந்த வரிகளைத் திரு சுந்தரராஜ் அவர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன். என்ன பா என்று
இப்போது சொல்ல முடியவில்லை. கண்டபடி எழுதியது. சின்னக்கண்ணன் அவர்கள், இதைச் சுவைத்துக் கருத்துகளை வழங்க வேண்டிக்கொள்கிறேன்.