செவ்வாய், 24 டிசம்பர், 2013

நிர்ணயம்

இன்று நிர்ணயம் என்ற சொல்லை ஆய்வு செய்வோம். இது தமிழன்று என்று வகைப்படுத்தப்படும் சொல்.

 இதன் தொடக்கமாகிய "நிர்" என்பது "நிறு" என்பதன் திரிபு. நிறு என்பதோ நிறுவு என்பதன் அடிச்சொல்.

ணய என்பது "நயம்" என்பதில் வேறன்று.

இதைப்   பின்வருமாறு விளக்கலாம்.

நிறு > நிறுவு > நிறுவுதல்.

நிறு > நிர். > நிர் நயம் > நிர்ணயம்.

எதையும் நிர்ணயம் செய்வதாவது,  அதை நயமாக நிறுவுதலே ஆகும்.

புதன், 11 டிசம்பர், 2013

Nelson Mandela

இனம் மொழி மதம் கடந்து
மனித இனத்தை நேசித்தார்
தனி மனித உரிமை களைத்
தலைதாழ்ந்து பணிந்திட்டார்.
நிறவெறி தனைஎதிர்த்து
நெடுங்காலம் போரிட்டார்
அறநிலை பிறழ்தலிலாப்
பெருவாழ்வில் நிலைநின்றார்

இன்னொரு காந்தியென‌
இவ்வுலகில் ஒளிவீசி,
தம்ம‌ரு நறுநாட்டின்
தலைமையிலும் கொடிநாட்டி
மின்னலென அது நீங்கி
மேலான தனிவாழ்வில்
தாமாக அமைந்திட்டார்.
தரணியில்யார் ஒப்பவரே?


நெல்சன் மண்டேலாவின்
நீடுபுகழ் பறைசாற்ற‌
கல்நின்று அணிசெய்யும்
மன்று ஒன்று  நாட்டுவரோ?

மறைந்தாலும் மறைவில்லா
மாமனிதர் புகழ் ஓங்க‌
நிறைந்துயரந்த தமிழ்ப் பாவால்  
நின்றுபணிந்தேத்திடுவோம்.






செவ்வாய், 10 டிசம்பர், 2013

riots in Singapore Island

சட்டமும் ஒழுங்கும் தலைமேற் கொள்ளும் சிங்கப்  பூரரசு
சாலைகள் சந்துகள் எல்லாம் தூய்மை உலகில் இதுஅரிது
கொட்டம டக்கிக் குறும்பரை வைக்கும் கொள்கை அதுபெரிது
குற்றம் அரிதெனக் கூறும் தீவினில் கலகம் ஒருவியப்பே!

அறிகுழு அமைத்தும் அதன்கா ரணம்தரும் நாளை எதிர்பார்ப்போம்
பிறிதொரு காரணம் உண்டிது பிறந்த திகதி நாள்  நட் சத்திரம்
அறிவது யாதெனின் ஆகுநே ரம்குன்றி ஆகா ததுவிரிந்தால்
பெறுவது தீமையே என்பதும் உண்மையே பேசும் இதுதெளிவே.


சூடு கிளப்பிச்  சூறாவளி தோன்றாமல்
பாடு தவிர்த்த‌பண் பட்டகா வல்துறை.

ஞாயிறு, 8 டிசம்பர், 2013

ஏகலைவன்

ஏகலைவன் என்ற மகாபாரதச் சொல்லை இப்போது ஆய்வுசெய்வோம்.

எய் =  அம்பு எய்தல்.
எய் ‍> ஏ  இது முதனிலை திரிந்த பெயர்ச்சொல். இங்ஙனம் நீட்சி அடைகையில் யகர ஒற்று, கெட்டது. (அதாவது, மறைந்தது). இப்படி மறையவில்லை என்றால், ஏய் என்று ஆகி, விளிச்சொல்லுடன் மயங்கும்.

அடுத்து, கலை என்ற சொல்.  அம்பு எய்வது ஒரு கலை.

வன் என்பதில், வ்+அன் ஆகவே வகர உடம்படு மெய்யும் அன் என்னும் ஆண்பால் விகுதியும்.

வல் > வன் என்றும் திரிந்து, வல்லவன் என்பதையும் குறிக்கும்.

ஆக இது தமிழ் மூலங்களையுடைய ஒரு பெயர்

Ekalavya:  Notes

ஏகலைவன் என்பது தமிழ் வடிவம். சங்கதத்தில் "ஏகலவ்யா". ஏகலைவன் என்று நேர்புனைவாக  இல்லாமல் ஏகலைவ்+ய்+அ(ன்)  என்று மாற்றம்பெற்றுள்ளது. வகர உடம்படு மெய்யும் யகர உடம்படு மெய்யும் உள்பொதியப்பட்டு, ஆண்பால் னகர ஒற்று களையப்பட்டுச் சொல்லாக்கம்  பொற்றுள்ளது. ஏகலைவன் கரு நிறத்தோன் என்பதும் கவனிக்கத் தக்கது.


வட  பெரு நிலப்பகுதியில் கருப்பு  இனத்தோர் ஆட்சி செய்த  பாகங்களும்  இருந்தன  என்பதும்  அவர்கள் ப‌ற்பல கலைகளையும் அறிந்திருந்தனர் என்பதும்  இதனால் பெறப்பட்டது.




வெள்ளி, 6 டிசம்பர், 2013

நீ வேறு நான் வேறு...

நமக்குள் உள்ள‌
ஒற்றுமைகள் என்ன வென்று
உரைகல்லில் உரசிப் பார்ப்பதைவிட‌
வேற்றுமைகள் யாவை என்று
விரித்துப் பார்ப்பதே
உலக மக்களிடையே ஒரு
கலையாகி விட்டதென்பேன்!

இதனால்
உன்னுடன் நானில்லை,
என்னுடன் நீயில்லை,
நீ வேறு நான் வேறு...

ஒரே மாநிலத்து மக்களேகூட‌
வேறுபாடுகளை விரித்தறிந்து
விலகிவிட வேண்டுகின்றனர்.

நல்லதோ கெட்டதோ  இது!
நானும் நீங்களும் சொல்லமுடியுமோ?

காலமே முடிவினைக் கழறும்.

எது எப்படி ஆனாலும்
எல்லோர்க்கும் எல்லாம் இனிதாய் முடிந்து
இன்பமே பெருக வேண்டும்
இவ்வெண்ணமே
என்னில் தோன்றி
விண்ணைத் தாண்டும்.

வியாழன், 5 டிசம்பர், 2013

அதிகாரக் கோதை மயக்கு

கோடி பொதுமக்கள் கொன்றவன்--  அதிகாரக்
கோதை மயக்குநீர் உண்டவன்!
தேடிப் பதைப்பவை செய்தவன் -- ‍‍‍ இனக்கொலை
தேர்ந்தவன் பாவத்தில் உய்தவன்.

அரியணை நீங்கிடா ஆணவன்-- புவி
அனைத்தும்  சொலக்கே ளாதவன்!
புரிந்துள போர்க்குற்றம் நீதிமுன்-- வைத்துப்
புகலவும் நெஞ்சொப்பி டாதவன்..

குற்ற மனைத்துக்கும் கொள்கலம்--  ‍‍‍‍இது
குழைவின்றிக் கண்டதுஇந்  நன்னிலம்!
இற்றைக் கியான்மட்டும் கண்டதோ!-- ஆக‌
இவன்யார் என்பது விண்டிலேன்.

செவ்வாய், 3 டிசம்பர், 2013

அயல். > அசல்.

இனி, அயல் என்ற சொல்லுடன் சற்று  விளையாடலாம்.


ஐயம், என்பது ஐயப்பாடு. இதன் பகுதி யாகக் கருதத்தக்கது ஐ ஆகும். ஐ+அம் = ஐயம்.

ஐ = அய்.

அல் என்பது  அல்லாததைக்  குறிக்கும்  அடிச்சொல்.


அய்    + அல்  =  அய்யல்    >  அயல். > அசல்.


அய்யல் என்றுதான்  யகரம் இரட்டிக்க வேண்டுமென்பதில்லை.

பை  >    பையல்   > பயல்  >  பசல் >   பசன் > பசங்க....  





வாசித்தல் & அசல்

வாசித்தல் என்பது வாயினால் ஒலித்துப் படித்தல் என்று பொருள்படும்: இஃது சொல்லின் அமைப்பிலிருந்து வெளீப்படும் பொருளாகும்.

வாய் > வாயித்தல். > வாசித்தல்.
 
யகரம் சகரமாக மாறுவது தமிழியல்பு.

வாசித்து என்பது மலையாள மொழியில் வாயிச்சு என்றே  சொல்லப்படும்.

வாயித்து என்பதெ முந்து வடிவம். இதை முன்பு நான் எழுதியுள்ளேன். எங்கு என்று நினைவில் இல்லை.

அசல் என்பது தமிழ்ச்சொல் அன்று என்பர். நம்பிக்கைக்குரிய நல்ல பொருள்கள் பெரும்பாலும் வெளி நாட்டிலிருந்தே வந்தபடியால், அயல்  என்ற சொல் திரிந்து அசல் ஆகி போலியன்மையைக்
குறித்தது. உள் நாட்டுப் பொருள்கள் கலப்படமுள்ளவை என்று நினைத்ததையே இது காட்டுகிறது.

இதில்  யகரம் சகரமானது நோக்குக. அயல் > அசல்.