சனி, 22 நவம்பர், 2014

தலைமகளும் தற்புகழ்ச்சியும்

ஒரு தலைமகளும் ஒரு தலைமகனும் தமக்குள் புலவியில் ஈடுபட்டு
நிற்கும் வேளையில் தலைமகள் தன்னைத் தானே புகழ்ந்து கொள்வதாக
ஒரு புலவன் அல்லது கவிஞன் பாடுதல் கூடாதென்பது பண்டைப் பொருளதிகார வரையறவு  ஆகும். தற்புகழும் தலைமகள் தன்னடக்கம் இலாதவள் என்று கொள்ளப்படும். புலவன் படைக்கும் கதைத்தலைவி மிகச்சிறந்த பண்புநலன்கள் உடையவளாய் இருத்தல்வேண்டும்.பண்டைப் புலவர்கள் ஒரு சிறந்த குமுகாயத்தை (சமுதாயத்தை) உருவாக்க வேண்டுமென்பதிலும் சீர்கேடுகள் புகுத்தப்படுதல் கூடாதென்பதிலும் கண்ணும் கருத்துமாயிருந்தனர்  என்பதையே இவ்விதிகள் காட்டுகின்றன.

தலைமகனுடன் மாறுபட்டு நின்றாலும் கூட, தற்புகழ்ச்சியில் தலைதூக்கும் அடக்கமின்மை தலைவிக்கு விலக்கப்படும்.

பொருளிலக்கணம் ஏதும் ஆங்கிலம், சீனமொழி ஏனை உலக மொழிகள் என எவற்றிலும் இருப்பதாகத் தெரியவில்லை. எனினும்  ஆங்கிலத்தில்
self praise is no praise என்பர், தற்புகழ்தலை எல்லா மொழியினரும் வெறுத்தொதுக்குகின்றனர். அடக்கம் அமரருள் உய்க்கும் என்பது வள்ளுவனார் வாய்மொழி. இதனை ஒரு உலகப்பண்பாட்டு விதி எனலாம். இவ்விதியை நம் பொருளிலக்கணம் பண்டை நாளிலேயே செயற்படுத்தி யுள்ளது. எத்தகைய சூழ் நிலையிலும் தலைவியை அடக்கம் உடையவளாகக் காட்டுவதையே கவிஞனின் பண்பாடு, கவிதையின் பண்பு என்றெல்லாம் மொழிந்தால் அது மிகையன்று.

கிழவோன் முன்னர்க் கிழவி தற்புகழ்தல்
புலவிக் காலத்துப் புரைவ தன்றே.

என்பது இறையனார் அகப்பொருட் சூத்திரம். 47

கிழவோன் - தலைமகன்  கிழவி - தலைமகள் இது கற்பியலில் வருகிறது.
கிழமை என்ற சொல் உரிமை என்று பொருள்படும். கிழ+ஆர்=கிழார் உரிமை உடையவர் என்பது  பொருள். நிலக்கிழார் என்பது காண்க.

தற்புகழ்தல் தகுதியானதன்று. ஆனால் கதைப்பாத்திரம் ஒரு பரத்தையாயின் அது ஒத்துவரக்கூடிய நடத்தையே. பாடலியற்றுவோன் அவள் தற்புகழ்ந்து பேசுவதாகப் பாடலாம்.

"இந்தத் தலைமகன் என்பால் விழவில்லையாயின் என் சங்கங்கள் தவிடுபொடியாகட்டும்' என்று அவள் கூச்சலிடுவதாகக் கவி புனையலாம்.
சங்கம் என்பது சங்குவளையல்.  சூத்திரத்தில் "முன்னர்" என்பது பெய்யப் பட்டுள்ளதால் இது நேர்நிற்கையில் நடந்துகொள்ளும் விதம் பற்றி எழுந்தது ஆகும். எனினும் ஏனைக் காலங்களிலும் தற்புகழ்ந்து பேசாதிருத்தலே சிறந்த நெறியாம்.

கிழவன் கிழவி கிழமை

கிழவன் கிழவி என்ற சொற்கள் இக்காலத்தில் பொருள் திரிந்து வழங்குகின்றன. கிழமை : உரிமை.  "கிழமைப் பட வாழ்"‍‍.  Wherever you live, live there with all rights and privileges associated with your situation. So said auvaiyAr. சனிக்கிழமை:  சனிக்கு உரிய நாள் என்று பொருள். கிழ என்பதற்கு  உரிமை என்பதே அடிப்படைப் பொருள். கிழ +  ஆர் = கிழார். உரிமை உடையவர். கிழ என்பதிலுள்ள  ஈற்று அகரம் கெட்டு, கிழ எனற்பாலது  கிழ் என்று நின்று ஆர் விகுதியுடன் புணர்ந்தது. கிழ + அன் ‍= கிழவன், இது
வகர உடம்படு மெய் தோன்றி, கிழவன் ஆயிற்று. கிழான் > கிஸான்.

கிழ என்ற உரிச்சொல், கீழ் என்பதிலிருந்து தோன்றியது. அரசனே எல்லா நிலங்கட்கும் உரியவன். ஏனை உரிமையாளர்கள், அவன் உரிமை தர அதைப் பெற்று வாழ்வோர் ஆவர். இன்றைய அரசாட்சியிலும்,
 இதுவே நடைபெறுகிறது. அரசு ஆவணம் தரவில்லையானால், நிலம் எப்படி உங்களுக்குச் சொந்தம்?  கீழ் > கிழ.  ஒப்பு நோக்குக: கீழ் > கிழங்கு.தமிழில் கிழ் என்பது சொல்லாகாது, அது திரிபுகளின் ஓட்டத்தில் கருவைப்போல் தோன்றா வடிவமே. அதைப் பிறைக்கோடுகளுக்குள் இட்டுக் காட்டலாம்:  கீழ் > ( கிழ் )+ அம் + கு = கிழங்கு. தரையில் கீழ் உள்ள செடியின் பகுதி.

பொருள் மாறுதலுக்கு உதாரணம் நாற்றமெனும் சொல். முன்னர் இது நன்மணம் என்று பொருள்பட்டது. நறு :  அடிச்சொல். நறு ‍>ந‌றிய. (ஒ.நோ: சிறு > சிறிய)
"நறியவும் உளவோ நீ அறியும் பூவே!"  (kuRunthokai)  என்பது காண்க. நறு > நாறு > நாறுதல் : வினைச்சொல் ஆக்கம்.  நாறு + அம் = நாற்றம்.

"சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி,
மூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி,
.................................................
.................................................
புதுமலர் தீண்டிய பூ நாறு குரூஉச்சுவல்
கடுமா பூண்ட நெடுந்தேர்..............................
( நற்றிணை, 149  )

என்பதும் காண்க.

மற்றும்:  "சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்...." என்பது
குறள்.

பரத்தையிற் பிரிந்த தலைமகன்

.காதல் பரத்தை எல்லார்க்கும் உரித்தே

(இறையனார் அகப்பொருள்.
கற்பியல், சூத்திரம் 40 )

அதாவது, பரத்தையின் காதற் பொருட்டுத்  தலைமகளைப் பிரிந்து செல்லுவதாகப்  புலவன் கவிதை இயற்றுதல்,   தலைமகன் எத்தகைய நிலையினன் ஆயினும்,  அவனுக்கு உரியதாக இலக்கிய உலகம்
ஏற்றுக்கொள்ளும் என்பது.

இல்லறம், துறவறம் என்ற மேலான  நல்லறங்களைப் போற்றி வந்தவர்
தமிழர். ஆயினும் பரத்தைமை போன்ற  இழிவுகளும்  அவர்களிடம் இருந்ததன .ஆனால் சிலர், இதுவும் குலமகளிரைப் பாதுகாகத் தேவையான ஒரு வசதியே என்கின்றனர்.

எப்படியோ!

பரத்தையை வேண்டி ஒரு தலைமகன் தலைமகளைப் பிரிந்தான் என்றால்
தலைமகட்கு அது துன்பமே. இத்துன்பத்தை எடுத்துக்காட்டப் புகும் புலவன், இத்துன்பம் நீங்கி மீண்டும் தலைமகளிடத்துத் தலைவன் வந்து ஒன்றுகூடும் நிகழ்வினையும் பாடலாம். இப்படிப் பிரிந்து கூடினால், அது இன்பமே என்கின்றனர் இலக்கிய மேதைகள். இதிலிருந்து புலவனுக்குப் பாடப் பற்பல
பொருள் கிடைக்கின்றன.

இறையனாரின் அகப்பொருளுக்கு உரை  தந்ததாகச் சொல்லப்படும்
திருமுருகாற்றுப் படை தந்த நக்கீரனார், இதைத் தற்காத்துக் கூறுவதாகத் தெரிகிறது. "ஊடலே, புலவியே, துனியே ( அச்சம் அல்லது புலவியின் முதிர் நிலை ) என்றிவை நிகழும், நிகழ்ந்தால் அவை நீங்கிக் கூடினவிடத்துப் பெரியதோர் இன்ப(ம்) "  என்கிறார் அவர்   (புலவர்  பிறர் அவர் பெயரால் புகுததியதாகவும்  இருக்கலாம்! )  .பிரியவும் ஒரு காரணம் வேண்டுமே. எக்காரணமும் இல்லை யென்றால் பிரிவுதான் ஏது?  துன்பம்தான் ஏது?
\
இறையனார், கவிதையில் மென்சுவை வேண்டுபவர், ஆகையால் அவர்
இதனை இலக்கியத்துக்கு ஏற்றதெனக் கொண்டுள்ளார் என்கிறார் நக்கீரனார்.


காதற்பரத்தை எல்லார்க்கும் உரித்து என்று அஃறிணை முடிபு கொண்டதற்குக் காரணம், "  காதற் பரதையின் பொருட்டுத் தலைமகளைப் பிரிதல் என்னும் நிகழ்வு எல்லார்க்கும் உரித்து" எனற் பொருட்டாம். இல்லையேல், காதற்பரத்தை எல்லார்க்கும் உரியள்  என்று சூத்திரம் வந்திருக்கவேண்டும். அந்த நிகழ்வைப் புலவன் எத்தன்மையோர்க்கும் பாடலாம் என்பது. இவ்வதிகாரத்தின் பொருள் பிரிவு   (subject )  ஆதலின், இது பொருத்தமே.

காதற் பரத்தை என்றதனால், இந்த உரை மேலும் பொருத்தமாகிறது.
"காதல்" என்றதனால், அதுகொண்டு தலைமகன் தலைமகளைப் பிரிவன் என்று கொள்ளவேண்டும். இது இக்காலத்தில், "சின்னவீடு" என்று திரைப்படங்களில் பரப்பப்பட்டது  போன்றதொரு சொல்லாட்சி ஆகும்.

திங்கள், 17 நவம்பர், 2014

தொலைபெசி

தங்கையொரு தொலைபெசி வாங்கி வந்தாள்
தக்கபடி காப்பதாக எண்ணிக் கொண்டு,
என்கையே அன்றிப்பிற கைகள் எல்லாம்
இதைத்தொடுதல் ஆகாதே என்று  சொன்னாள்
பின், கையால் அதனையவள் தூக்குங் காலை
பெட்டென்ற ஒலியோடு வீழ்ந்த பேசி,
கண்களிலே நீர்தன்னை வீழச் செய்ய‌
கலங்கிவிட்டாள் கவலையவள் நெஞ்சைக் கவ்வ.

என்னதங்காய்!என்றேன் நான்; பாவம் அன்னாள்
என்செய்வாள் என்மனமோ இரங்கிற் றின்றே
சொன்னமருட் சொல்தன்னை மறக்க வேண்டி]
சோர்வுலகில் வீழாதே என்றல் போலென்
கண்னொளியைச்  செலுத்தினேன்  மற்றென் செய்வேன்;
கண்மணியே வாவென்றே அணைத்துக் கொண்டேன்;
தன்னொளியை மீள்பெற்ற நிலவோ பின்னாள்
தக்கனவே அறி நிறைவை அடைவாள் உண்மை.



திங்கள், 3 நவம்பர், 2014

The student மாணவனே,,,

படாமை நேர்ந்தால் வீணென்பான் விழுப்புண் வேண்டிடும் வீரமகன்;
தொடாமை நேரத் துயர்கொளும் காதலி தோள்விழை காதலனே;
இடாமை உண்டேல் இந்நாள் பாழென ஏற்பவன் அறவ‌ழியோன்;
விடாமை கொண்டு கல்வி தொடர்பவன் வெல்லும் மாணவனே.

ஞாயிறு, 2 நவம்பர், 2014

பிரகாசம்


பிரகாசம் என்ற பெயருள்ள ந(ண்)பர்கள் பலருள்ளனர். பிரகாசம் என்பது ஒளி என்று பொருள்படுமாதலின், இந்தச் சொல்லுக்குப் பால்பாகுபாடு இல்லை என்றாலும் இப்பெயர் தாங்கியோர் பெரும்பாலானவர்கள் ஆடவர்களே ஆவர் 
பிரகாசம் என்பதைச் சங்க நூல்களில் கண்டுபிடிக்க முடியவில்லை. நீங்கள் கண்டிருந்தால் தெரிவியுங்கள்
ஆகவே இது தமிழ்  அன்று எனபர்.

பண்டைக் காலத்தில் அரசர் அரண்மனைகள் பெரியனவாய் இருந்தன. ஆனால் பெரும்பாலான மக்கள் சிறு வீடுகளிலேதாம்  வாழ்ந்தனர். வீடுகளும் போதுமான  வெட்டம் (ஒளி) இல்லாமல் இருக்கும்.  வீட்டுக்கு வெளியிலேதான் வெளிச்சம்.

புறத்தே கதிரவன் அல்லது நிலா காயும்.

புற காயம் > புறகாசம் > பிரகாசம்.

யகரம் > சகரமானது.

புற காசம் என்பதில் வல்லெழுத்து மிகாது காக்கப்பட்டது.