வியாழன், 30 மார்ச், 2017

தாழ்மதித்தல் தாமதம்

பண்டைப் போர் நடவடிக்கைகளில் தயார்நிலையில் இருக்கும் ஓர் படையின் தலைவன் எதிரிப்படை எப்போது இக்களம் வந்துசேரும் என்பதை கணிக்கவேண்டியவன் ஆகிறான். இன்று வராது, நாளைப்
பொழுது புலருமுன் வந்துவிடும் என்று மதிப்பிட்டு அதுவரைத் தம் படையணியிலுள்ளோர் உண்டும் களித்தும் ஓய்வுகொண்டும் இருக்க உத்தரவிடுகிறான்.  இதுதான் தாழ்மதித்தல் என்பது. வேறு விடையங்களிலும் இங்ஙனம் தாழ்மதிக்கவேண்டி யிருக்கலாம்.

இத்தாழ்மதிப்பு பின் ஓரெழுத்து இழந்து தாமதி என்று ஆகி வழங்கியது.
இது தாமதம் என்று பெயர்ச்சொல் ஆனது. வாழ்த்தியம் என்பது தன் ழகர ஒற்றை இழந்து வாத்தியம் ஆனது போல இச்சொல்லும் திரிந்தமைந்தது என்பதை உணர்க.  தாழ்வணி  >  தாவணி .

தாழ்மதித்தல் என்பது நேரத் தாழ்மதிப்புக்கு ஏற்ற சொல் என்பதறிக.

தமிழில் சொற்கள் எழுத்திழப்பு  பெருவரவினது  ஆகும் .   உசாவடி  என்பது
சாவடி என்று திரிந்தமை காண்க .

புதன், 29 மார்ச், 2017

தீ தீபம் தீயியம் தீவியம் திவ்வியம்

 ஒருவரைப் பார்த்தவுடன் அவர் தீயாரா நல்லாரா என்று தெரிவதில்லை. அவர்தம் நடவடிக்கைகளைச் சற்றுக் க‌வனித்தாலே நாம் ஒருவாறு வகைப்படுத்த முயலலாம். ஏற்கனவே தீயார் என்று அறிந்துகொண்ட ஒருவரைக் "காண்பதுவும் தீதே" என்பதுதான் ஒளவைப்பாட்டி நமக்குச்
சொல்லும் அறிவுரை.

  தீயானது, நம்மைச் சுடும் தன்மையுள்ளது. சுடப்படுதலை நாம் விரும்புவதில்லை. தீப்புண் ஆறக் காலமாகும். தொல்லையாகவிருக்கும்.

  தீயிலிருந்து அதை  (தொல்லையை )  விலக்க அறிந்த நாம், தீ நமக்கு ஒளி தருவது; சமைத்துண்ண உதவுவது, பல்வேறு வகைகளில் உதவுவது என்பதை
அறிந்துதான் வைத்துள்ளோம். மாலையில் ஒரு விளக்கு கொளுத்திச் சாமி கும்பிட்டால் மனம் நிலைப் பட்டு அமைதி கிட்டுகிறதென்பது பலரும் கண்ட உண்மை. ஒன்றுமே இல்லாமல் அந்த அமைதி கிட்ட முயலலாகாதா எனில் முயலலாம். ஆனால் அதற்கு மனத்திறன் வேண்டும்,எல்லோர்க்கும் அமையாத மனத்திறம் அது. அமையாதோர், விளக்கினால் - ‍ தீயினால் பயன்பெறுதலில் தவறு காணல் பொருந்தவில்லை.
   தீயே நன்மைக்கும் தீமைக்கும் வித்தானதால், தீமை என்பதும் தீபம்
என்பதும்  ஒரே அடியினின்று தோன்றியவாயினும், கருத்துமுரண் காணப்படுகிறது.
   பழங்காலத்தோர், தீயை வணங்கவும் அதை இறை வழிபாடுகளில்
பயன்படுத்தவும் தலைப்பட்டனர். இவை வேறுவகைகளில் உதவினாலும்
உதவாவிட்டாலும் பூச்சிகள், புழுக்கள், குளிர், வனவிலங்குகள் என்பவற்றை அண்டித் துன்புறுத்தாமற் காத்தன. கொசுவிரட்டுத் தீச்சுருளைக் mosquito coils கொளுத்துகையில் இதை நாம் உணரலாம். இறைவழிபாடு என்ன, ஒரு நிமையம் minute  உறங்குதலும் ஆகாமற் போய்விடுமே!

தீபம் என்பது இறைப்பற்றுமையை மனத்துள் உய்க்கின்றது.

தீ என்பது ஐம்பூதங்களில் ஒன்றானாலும் அது மனிதனுக்கு அமைந்த ஒரு கருவிப்பொருளே ஆகும்.  தீபம் என்பது சற்று மேனிலை பெற்றுத்
திகழ்வதாகிறது.

இறைவன்மை குறிக்க ஒரு சொல் புனையவேண்டின், தீயையே தேர்ந்தெடுப்போம். ஆனால் முரண் உள்ளது. தீ+இயம் என்னும்  ஒரு
அடிச்சொல்லையும் ஒரு விகுதியையும் கூட்டிப் புனைந்தால் அது
தீயியம் என்று வருகின்றது. இதை (வரைசொல்லை draft ) உற்று நோக்கின், தீ மட்டுமே மனத்துள் வருகின்றது. இறைவன்மையும் அதற்குதவும் தீபமும்
அகத்துட் புகவில்லை. காரணம் அந்த முரணே ஆகும்.  ஆகவே
தீயியம் என்பதில் சில மாற்றங்கள் தேவைப்படுவது தெரிகிறது.

தீயியம் என்பதில் வந்த யகர உடம்படு மெய்யை மாற்றி அமைக்கலாம்.
தீவியம் என்னலாம். இலக்கண முறையில் (அதாவது: முன் அமைந்து
மொழிமரபுகளில் காணப்படும் நிலையை ஒட்டிச்சென்றால் ) ஈகாரத்துக்கு அடுத்து இகரம் வந்தால் யகர உடம்படு மெய்யே வரவேண்டும். பழ‌ம்புளியை விரும்பும் புலவன்மார்க்கு வகரம் சுவைக்காது.ஆகவே
தீவியம் அத்துணையும்  விரும்பத்தக்கதாக இல்லை. ஆயினும் பழையன‌
வேண்டியாங்கு கழிதலும் புதியன புகுதலுமாக இதை ஏற்கவேண்டியுள்ளது. இன்னும் ஒருபடி மேலேபோய் தீவியத்தைச் சுருக்கித் திவ்வியம் ஆக்கவேண்டியுள்ளது. அப்போது முரண் முற்றிலும் விலகி ஒரு புதுமைச்சொல் கிட்டுகிறது.

மக்கள் நாவிலே புழங்கிப் புழங்கி, தேய்ந்து தேய்ந்து, காய்ந்து சுருங்கி
மருவி அமையும்படி காத்திருந்தால் பன்னூறு ஆண்டுகள்      காத்திருக்கவேண்டும். சில நெறிமுறைகளைப் பின்பற்றி "வைத்தியம்"
செய்து  "திவ்வியத்தை" வெளிக்கொணர்தலே சாலச்சிறந்தது என்று
தீர மானித்துவிடலாம் (தீர்மானிக்கலாம்) காணீர்!

நெடில் குறிலாகப் பல சொற்கள் மொழியில் உலவிக் கிடக்கையில்
இது ஒன்றும் ஏற்க இயலாததாகிவிடாது.....தாவுதல் தவ்வுதல் என்று
நிலைக்கவில்லையோ?

will edit.
The discussion submitted here are for the purpose of understanding the etymology of the word.
A religious construction is not intended.

தாவரங்கள் தாழ்வரங்கள்

தாமதித்தல்<  தாழ்மதித்தல்

தாவணி<  தாழ்வணி

இச்சொற்களைக் கண்டு களித்த நமக்கு, இன்னொரு சொல்லையும்
கண்டுமகிழ்தல் அம்மகிழ்வின் பெருக்கமாகும்.

தாவரங்கள் என்பதைப் பல ஆண்டுகட்கு முன்னரே எழுதினோம்.
அவை எல்லாம் அழிவுண்டன.

தாவரங்கள் என்பது செடிகொடிகளுக்கான பெயர். இவை மிக்க‌
உயரமாக வளராதவை. மரங்களே உயரமாகப் பெரியனவாக‌
வளரும்.  இவை தாழ = உயரமின்றி. வருதலால் = வளர்ந்து
மேல்வருதலால்; தாழ்வரங்கள் எனப்பட்டன.


இங்கு வரம் என்பது வரு+அம்.   வருதலை உடையது.

தலைக்குமேலே உயரமாய் வருவது மரம்; இடுப்பளவு, மாரளவு
வருவது தாழ்வரம் > தாவரம்.  செடிகொடிகள் எனல் இயல்பாகக்
கூறுவது.

மர வளர்ச்சியை "வரும்" ‍ கழுத்தளவு வரும்; தலைக்குமேலே வரும் என்று,  பேசுவது சிற்றூர்ப் பேச்சு.

மழை பெய்யும் என்பார் வாத்தி;  மழை வருமென்பதே மக்கள் பேச்சு.
பெய்தல் என்பது இல்லாமலில்லை. அது பெய்யும்போது அச்சொல் பயன்படும்,

செவ்வாய், 28 மார்ச், 2017

கனகசபைப் புலவர் 1826 முதல் 1873 வரை

கனகசபைப் புலவர் என்பவர் 1826 முதல் 1873 வரை யாழ்ப்பாணம்
அளவெட்டி என்னும் ஊரிற் பிறந்து வாழ்ந்தவர். வட்டுக்கோட்டை சாத்திரக் கலாசாலை என்னும் கல்விச்சாலையில் கற்றுத் தேறி, பின்னர் ஆங்கில வைத்தியமும் ஆயுர்வேத வைத்தியமும் கற்றவர். இவரைப் பற்றி
நாம் மயிலையார் ஆராய்ச்சியிலிருந்து அறிந்துகொள்கிறோம்.

இவர் அழகர்சாமி மடல் என்னும் ஒரு சிறு பாட்டுநூல் ( பிரபந்தம்)
பாடி அதை வேலூர் சென்று பாட்டுடைத் தலைவர் முன்னிலையிலே
அரங்கேற்றினார். அடுத்து 1753  விருத்தப்பாக்களைக் கொண்ட திருவாக்குப் புராணம் என்பதையும் பாடியுள்ளார். அதுமட்டுமின்றி ஒரு தமிழ்நிகண்டையும் எழுதிமுடித்தார்.

இந்த நூல்கள் எவையும் கிடைக்கவில்லை. இராசபக்சே நடத்திய‌
இனவழிப்புப் போரின் முன்பே எரியூட்டிச் சாம்பலாக்கப்பட்ட யாழ்ப்பாணத்
தமிழ் நூல் நிலையத்தில் இவை இருந்திருக்கலாம். நூல்கள் அனைத்தும்
உருவின்றி மறைந்தன என்பதால் இவை இழந்தவை இழந்தவைதாம்.
தனிப்படிகளை யாரேனும் எங்கேனும் கண்டுபிடித்துத் தமிழார்வத்தால்
பதிப்பித்தால், அப்போது நாம் ஆகூழினர் (அதிருஷ்டசாலிகள்) ஆவோம்.
அந்தநாளும் வந்திடுமோ?

இவர் சென்னைக்குச் சென்று வீராசாமி செட்டியார் என்ற புலவருடன்
ஓர் அகரவரிசையைத் தயாரிக்க உதவினார் என்பர். சென்னையும்
பல இயற்கை இன்னல்களுக்கும் வெள்ளத்துக்கும் உட்பட்ட நகரமே.
அங்குக் கிடைப்பதும் முயற்கொம்பே.

என்றாலும் நூல்நிலையங்களில் தப்பித்தவறி இவற்றுள் ஏதாவது
கிட்டுமோ? மக்களை எட்டுமோ?

சாமிநாத ஐயரைப்போல் பழ நூல்கள் காப்போரே தமிழ்த் தாயின்
தவப்புதல்வர் ஆவர்.


பருப்பென்றும் பருக்கையென்றும்,,,,,,

நெருப்பென்ற பகலவ‌னும் காய்ந்து வற்றி
நீரில்லாக் கா(ய்)சினியாம்  காய்ந்த தாலே
பருப்பென்றும் பருக்கையென்றும் தேடிச் சோர்ந்து
படுக்கையிலே தூங்கிவிடும் ஏழை மக்கள்;
இருப்பென்றும் இல்லாத வெற்றுப் பைகள்
இவர்களுக்குத் தொண்டென்றால் சென்று செய்க!
பொறுப்பிதுவே ; புண்ணியம்தான்; போற்றிக் கொள்வீர்.
பூதலத்தில் யாதுமில்லை நெஞ்ச மின்றேல்.

போராட அறியாத சங்கத் தமிழர்

சங்கத்த மிழருக்குத்  தெரியும் போர்தான்;
சற்றுமறி யாரவர்போ ராட்டம் என்றால்!
எங்கெங்கு நாட்டினிலே தேடி  னாலும்
இல்லையிந்தப் போராட்டம் என்ப தொன்று!
பங்குபெறு மக்களாட்சி என்ப தில்லை;
பயன்வேண்டி மணியடித்தார் அன்றும் உண்டு.
தங்கிமிளிர் அமைதியது பொங்கும் வண்ணம்
தமிழரசு இயன்றதெனச் சொல்வார் உண்டே.


மிகுந்த போராட்டங்கள் நடைபெற்ற இந்திய மாநிலம்
தமிழ்நாடுதான் என்கிறார்கள் (புள்ளிவிவரங்கள்).
2015 எண்ணிக்கை: 20450.
அடுத்து பஞ்சாப் 13089





திங்கள், 27 மார்ச், 2017

தவளையும் தபசியும். they escape.......

ததவளையும் தபசியும்.

பகரத்துக்கு வகரமும் வகரத்துக்குப் பகரமும் பலமொழிகளில் வருகின்றன.எனவே  தபசி என்பது தவசி என்றும் எழுதப்படும். இரண்டும்
ஒன்றுதான். தமிழுக்கென்று சில சிறப்பான திரிபுகள் உள்ளன. ஆனால்
பிறமொழிகளில் வரும் திரிபுகளும் தமிழிலும் வருகின்றன. இரண்டுமுண்டு. இதற்குக் காரணம் நாமும் மனிதர்கள்; பிறமொழியினரும்
மனிதர்கள். நாக்கு வாய் முதலியவற்றிலும் கருதத்தக்க வேறுபாடுகள் இல்லை. தேய்வைத் தோட்டத்தில் (ரப்பர் எஸ்டேட்) தமிழர்களுடன் வளர்ந்த சீனர் நன்றாகத் தமிழ்ப் பேசுகிறார். தொலைபேசியில் அவருடன்
பேசுகையில் அவர் தமிழரா, சீனரா என்று தெரிவதில்லை. எண்ணற்குரிய‌
வேறுபாடின்மையால் பல் திரிபுகளில் ஒற்றுமை இருப்பது வியப்புக்குரியதன்று .  இது கடன்கொண்டதுமன்று.  இருவேறிடத்தும்
இயல்பானது.

தபசி என்ற சொல்லின் முன்வடிவம் தவசி என்பதே. பின்வந்த மொழிகள் இச்சொல்லை "தப" என்று அவற்றுக்கு எளிதாக மாற்றிக்கொண்டன. ஆனால் இவ்வடிவமும் தமிழுக்கு ஏற்புடையதே. இது தாவுதல் என்ற வினைச்சொல்லினோடு தொடர்புடையது. ஒரு தவசி, ஏலாத உலக நடப்புகளைத் தாவி, அப்பால் செல்கின்றான். இந் நடப்புகளோடு சென்று வெற்றி கொள்ளாமல் தவிர்த்துவிடுகிறான்.  தாவு! தவிர்! இத் தவிரென்பதும் தொடர்புடைய சொல்லே என்றறிக. தாண்டுதல் என்பதும் தா என்றே தொடங்குகிறது. தாள் என்ற காலடி குறிக்கும் சொல்லும் "தா" என்றே தொடங்குகிறது. தாண்டுவதும் தாள்களினாலேயே  முடிகிறது. தாள்+ து  = தாண்டு ஆகிறது. தாவும்போது, தாண்டும்போது, தவசி என்போன் "தப்பி" விடுகிறான். உலகியல் நடவடிக்கைகளில் அவன்
பட்டுக்கொள்வதில்லை. தப்பு என்பதும் தாண்டுவதோடும் தாவுவதோடும் தொடர்புடையதே என்றறிக. தப்பு என்பது இடைக்குறைந்தால் தபு என்று
வரும். தப்புதல் > தபுதல் ஒன்றே என்பதறிக.  தபுதாரம்:  தாரம் இழப்பு. மனைவியை இழந்த நிலை. இது தொல்காப்பியச் சொல்.

தவசியைப் போல் தவளையும் தாண்டியே செல்கிறது. இடைப்பட்ட மண்ணில் தடையொன்று இருந்தாலும் இல்லாவிட்டாலும் தனக்குள்ள‌
இயல்பான முற்செலவு முயற்சியால் தாவிவிடுகிறது; தாண்டிவிடுகிறது.

இவ்விடையத்தில் தவளையும் தபசியும் ஒன்றாகின்றனர். இருசொற்களும்
தாவுதல் அடிப்படையில் அமைந்தன.

தாவு > தாவு+ சி =  தவசி.
சி என்பது ஒரு தொழிற்பெயர் விகுதி.

வேய்தல் : வேய்+சி > வேசி. யகர ஒற்று மறைவு.
காய்தல் :  காய்+ சி + இன்+ இ = காய்சினி > காசினி.

இவை சி விகுதி இறுதியும் இடையும் வந்த சொற்கள்.  இவைபோலுமே தவசி  என்பதிலும் சி  வந்துள்ளது.

இனி, தா என்ற நெடில் த என்று குறிலானதற்கு எடுத்துக்காட்டு:

சாவு + அம் = சவம்.
தாவு + அம் = தவம்.

தாவு = தப்பு. தப்பு> தபு > தபம் என்பதும் அம்முடிபு கொண்டதே.
இவை வேறல்ல. வேர்ச்சொல் ஒன்றானதால் எப்படிச் சென்றாலும்
அம்முடிபே தோன்றும்.

தாவு என்பது தவ்வு (தவ்வுதல்) என்றும் குறில்தொடக்கமாகும்.
தவ்வு > தவு > தவம்; தவ்வு> தவு > தபு > தபம்.
தவ்வு> தப்பு > தபு > தபம்!!

இடைக்குறைச் சொற்களாலும் பிறமொழிகளையும் வளப்படுத்திய மொழி
தமிழாகும்.

Some edit - paste repetitions seem to haunt us. We are looking into it.  If you find any appearing
on your screen, please give us time to rectify any error .









ஞாயிறு, 26 மார்ச், 2017

அம்மோகம்>

அமோகம் என்ற சொல் எங்ஙனம் அமைந்துள்ளது என்பதை அறிந்துகொள்வோம்.

அம் என்பது அழகு என்பதைப் பல இடுகைகளில் சொல்லிவிட்டபடியால் அதை மீண்டும் சொல்லவேண்டியதில்லை. எனினும் புதிய வாசிப்போருக்காக இதைக் கூறவேண்டியதாகிறது.

ஓகம் என்பது ஓங்குதல், அதாவது மிகுதி, உயர்வு முதலியன குறிப்பது
இதுவும் எளிதாக அமைந்ததே.

ஓங்கு  :  ஓங்குதல், தொழிற்பெயர்,

ஓங்கு >  ஓகு:  இது இடைக்குறை.  நடுவில் உள்ள ஙகர ஒற்று மறைந்தது,
ஓகு+ அம் =  ஓகம்,  மிகுதி, நிறைவு, உயர்வு குறிப்பது.

யோகம் என்ற சொல்லும் இதன்கண் பிறந்ததே ஆகும். ஓயனை> ஓசனை
யோசனை போல. ஆனை > யானை போல.
அது நிற்க.

அம்+ஓகம் = அமோகம் ஆனது.

அம்மோகம் என்று விரித்துப் புணர்த்தினாலும் பின் மகர மெய் மறைந்து
அமோகம் என்றே வரும். முயற்சிச்சிக்கனம். இடைக்குறை.

இதை அ+ மோகம் என்று பிரித்தல் பிழை ஆகும்.

Female baby names : KuRaL derived

அவிர்மதி (குறள் 1117)
தூவிதா ( குறள் 1120)
பணிமொழி (குறள் 1121)
நுதல்யா (> திருநுதல் குறள் 1123)
அமர்க்கண்ணி (குறள் 1125)
ஏமிதா ( ஏமம் - குறள் 1131)
மலரன்னா (மலர்+அன்னை, மலர், குறள் 1142) Also like a malar
ஒப்பிடுக: தம் +அன்னை, தமன்னை, தமன்னா)
மலர்மதி
அரிதாமணி (குறள் 1153) அரிதாகும் மணி என்பதன் சுருக்கம்.
உய்வினி (>உய்வு) குறள்1174
பசந்தி ( குறள்1188) பச்சை நிறம் தோற்றம்
தந்தவள்
இது வசந்தி என்பதனோடு மயங்கி நிற்கும் பெயர்.

நனவிதா ( குறள்1219)

மாலிகா (மாலை, குறள்1221)
இது பழைய பெயர் போலாகிவிட்டது.

போதிதா (போது = அரும்பு) குறள்1227

குழலினி. குழலிகா. குறள் 1228

மாயா குறள் 1230 இது பழைய பெயர்

சனி, 25 மார்ச், 2017

முதலீட்டால் முன்மைபெற்று உயர்க


A poem on international relations....


நாடுகளே நீங்களே ஒன்றுபடுங்கள்
கோடுயரப் பேட்டைகளில் தொழில்நிறுவுங்கள்!
ஒத்துழைப்பு மிக்குறவே பாடுபடுங்கள்!
சொத்துமிகு முன்முயற்சிக்கு ஈடுகொடுங்கள்.
அணுக்கமதே  ஆல்போல் இணக்கவிரிப்பால்
சுணக்கமறச் சூழ்பயனாய்ச் சுரக்கவிடுங்கள்.
தொழில்தொடங்கு நோக்குடனே வானவூர்தி
எழில்பயணம் எல்லையின்றி மேனிலையாக!
பங்காளித் தன்மையாண்டும் பரக்கவேண்டும்;
தங்காமல் எப்பணியும் சிறக்கவேண்டும்!
குமுகங்கள் புதுமையிலே குதூகலிக்க‌
குழந்தைகளும் மிகுந்தமகிழ் வதில்சொலிக்க!
புத்தாக்கம் புதுமுனைப்புப் பரிமாற்றங்கள்
பூத்துவந்தால் நாடுபெறும் உருமாற்றங்கள்!
பண்டுவந்த உறக்கத்தைக் களைந்துவிட்டுத்
தொண்டுசெய்து தூயமனம் விளைந்துவாழ்க!
சிதலரித்த சீர்கேட்டுக் கொள்கைநீங்கி
முதலீட்டால் முன்மைபெற்று உயர்க நீரே.    


அருஞ் சொற்பொருள் :
கோடு  =  வரம்பு .  தேசத்தின் செழிப்பு வரம்பு.
குமுகம்  = சமுதாயம்.
பேட்டை - தொழில் பேட்டை 
பரக்க  -  விரிவு அடைய .
குதூகலிக்க  -  மகிழ்வில் துள்ள 
சிதல்  =  கரையான் .
முன்மை  = முன் நிற்கும் தன்மை . 

அச்சமோ யாங்கள் அடையோமே.........!

பயங்கரவாதிகட்கு அரசியல் தலைவர்கள் கூற்று.

அச்சமோ யாங்கள் அடையோமே எங்களின்
மிச்ச உறுதியும் விஞ்சியே ‍‍~~~ உச்சமுறக்
கொட்டினீர் உங்கள் கொடூரத்தை; தாங்களாய்
விட்டாலும் விட்டிலோம் யாம்.

பயங்கரவாதத்தை நீங்கள் விட்டாலும் விடாவிட்டாலும் நாங்கள்
நாடுகாக்கும் எங்கள் உறுதியை விடமாட்டோம் என்பது பொருள்.
மிச்ச உறுதி =  குண்டுகள் வெடிக்கையில், முன் எடுத்த உறுதியில்
எஞ்சி இருந்த நடவடிக்கைகளைத் தொடரும் உறுதி;  விஞ்சி = மிகுதியாகி;  கொடூரம் = கொடுமை ஊர்ந்து மிகுதியான நிலை.
கொடு+ஊர்+அம் = கொடூரம். ஊர்தல் =மெல்லவே  மிக்குவரும் நிலை.
குமுகத்தில் கொடுமைச் சிந்தனைகள் மெல்ல உருவாகி, நாளொரு
மேனியும் பொழுதொரு வண்ணமுமாய்ப் பெரியனவாகி இறுதியில் வெடிக்கின்றன. தாங்களாய் விட்டாலும் ‍ : செய்வதைச் செய்துவிட்டு, அகன்றுவிட்டாலும். விட்டிலோம் : விட்டு இலோம் (இல்லோம்) : விடமாட்டோம் என்பது.














ரு



தீவிரவாதம் ஒழிக (இலண்டன் தாக்குதல் )

உலகுக்கு மக்களாட்சி போதித்த ஒண்நாடு;
பலகற்கப் பண்டிதன்மார் சென்றுபயன் கண்டநாடு;

நிலைகுலையா நூறிரண்டு நின்றதே ஆண்டுகளாய்;
கலைபலவும் கண்டுகரை மேவிப்புகழ் கொண்ட‌நாடு.

மதங்களின் நல்லிணக்கம் இனங்களின் ஒற்றுமைஎன்
றிதுகாறும் காத்தபடி இலங்குகிற இசைநாடு.

இதைவிட்டு வைத்தானோ இழிதீவிர வாதியென்போன்
சதைகிழித்தே உயிர்குடிக்கும் நடபடிக்கை மேற்கொண்டான்!

இலண்டனுக்கு நேரிடர்க்கே இரங்குவதே எம்மனமும்.
திரண்டதனைக் கண்டிப்போம்; தீமைகடிந் திடுவோமே.


தீவிரவாதம் ஒழிக (இலண்டன் தாக்குதல் )

மக வேர்ச்சொல் "மகரந்தம்"

மக என்பது ஓர் வேர்ச்சொல். இது ஒன்றிலிருந்து மற்றொன்று தோன்றுதலைக் குறிக்கும் தமிழ்ச்சொல்.  மகன், மகள், மக்கள், மக> மா;  மாக்கள் என்ற ஒரு சொற்குடும்பமே தமிழில் இருக்கிறது. இந்த மகச் சொல்லை நாம் உலகிற்கும் கொடையாக வழங்கியுள்ளோம். அவற்றில் மக்டோனல்டு என்ற சொல்லில் வரும் மக்  (Mac) என்பதும் அடங்கும்.  மக்டோனல்டு என்றால்  டோனல்டின் மகன் என்பதே பொருள். இது காலை  அஃதொரு குடிப்பெயராய்  மேலையில் வழங்கி வருகிறது.: "மக" கலப்பில்லாத இன்னொரு குடிப்பெயர் டோனல்டுசன் (Donaldson)  என்பதாகும்.

மக என்பதனுடன் மை என்ற பண்புப் பெயர் விகுதியை இணைத்தால்
மகமை என்பது கிடைக்கிறது. இது பிறப்பித்தலாகிய தன்மை என்று
பொருள் தரவேண்டும். மக என்பதற்கு, இளமை, பிள்ளை, காணிக்கை என்று பொருளிருத்தலால்,  மகமை என்ற மை என்னும்
பண்புப்பெயர் விகுதி கலந்த சொல்லுக்கு  அறக்கொடை ( அறத்தின்
பொருட்டு வழங்கும் கொடை) என்று பொருள் காணப்படுகின்றது.

மக என்பது உண்மையில் ஒன்றிலிருந்து மற்றொன்று தோன்றிடுதல்
ஆகையினால், பூவிலிருந்து தோன்றும் பொடிகட்கு "மகரந்தம்" என்ற‌
சொல் விளைந்தது.   மக+ அரு + அம் + தம்  என்று பிரிக்க, இதன்
பொருள்: பூவிற் பிறந்த அரிய அழகிய (தூள் அல்லது பொடி) என்று
பொருளாகிறது.  மக என்பதன் இறுதி அகரமும் அரு என்பதன் இறுதி
உகரமும் கெடவே, மகர ஒற்றும் நகர ஒற்றாகி மகரந்தம் என்ற‌
இனிய சொல் கிடைத்து மகிழ்விக்கிறது.

மகரந்தத்திலிருக்கும் இறுதிச்சொல் முடிவு குறிக்கும் அந்தமன்று.
அப்படிப் பண்டிதன் சொன்னால் அது பிசகு ஆகும்.

வெள்ளி, 24 மார்ச், 2017

குமரன் பிள்ளையின் முன் நடப்புகள்

இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு வாக்கில் நம் தமிழ்க்  கணினி மக்கள் தொடர்பு முன்னணியாளர் ஒருவர் "தொடர்புக் கழகம்"   Contact Club  என்று பொருள்படும்  ஒரு வசதியைக் கணினி வலைத்தளம்மூலம் தொடங்கினார்.  சிலர் அதில் இணைந்து தங்களுக்குள் மகிழ்ச்சியாகத் தொடர்பில் ஈடுபாடு காட்டிக்கொண்டிருந்தனர்.

இதை விரிவு படுத்துவதற்காக ஒர் குழும்பினைத்   (company)  தொடங்க எண்ணிப்
பணவசதி உள்ள இன்னொரு தமிழரைத் தேடிப் போய்ப் பேசினார்   ". இது ஓர் உதவாக்கரை வேலை, ஒன்றும் எடுபடாது, இதில் நான் வேறு பணம் போடவேணுமா?? " என்று கடிந்து கொண்ட அந்தச் செல்வர், "போய்  மூடுவிழா நடத்திவிட்டு வேறுவேலையைப் பார்"  என்று விரட்டிவிட்டார்.

அதுவரை தாம் செய்திருந்த எல்லா வேலைகளையும் தூக்கி எறிந்துவிட்டு, தாம் தயாரித்திருந்த கணினி வட்டுக்களையும் அப்புறப்
படுத்திவிட்டு , வேறுவேலையைப் பார்க்கப் போய்விட்டார். இந்த மேதை .

இதன்பின் வந்த பல தொடர்புக் கழகங்கள் நல்லபடியாக முன்னேறி
இப்போது வாட்ஸ் எப்   வரை போய்ப்  பகலவன்போல் ஒளிவீசுகின்றன.

அந்தக் கணினி முன்னணியாளர்தான் எம். குமரன் பிள்ளை. அந்தச்
செல்வரின் ஆணித்தரமான் ஆனால் அறியாமையில் ஊறிய விரட்டுப்
பேச்சைக் கேட்காமல் இருந்திருந்தால்.......?

பட்டறிவு பற்பல; அனுபவங்கள் அனேகம்!!

Kumaran Pillai now operates the SINGAPORE INDEPENDENT.

no copyright for this item.







இகுத்தல் இகை > சிகை

இகுத்தல் என்பது குழைத்தல், மறித்தல் என்றும், இகுப்பம் என்பது திரட்சி  என்றும் பொருள்படுவன‌.

சிகை என்பது ஒன்றாகக் குழைத்து வேண்டியாங்கு மறித்தும் திரட்டியும்
கட்டப்படுவது.

இகு> இகை;
இகை > சிகை.

இது எளிதான அமைப்புச்சொல்.

அகரவருக்கச் சொற்கள் சகர வருக்கமாகும்; அதாவது அ>ச, ஆ>சா, இ > சி என்று இப்படியே நெடுகிலும் வரும்.

குழைத்து, அதாவது திரட்டிக் கட்டப்படுவதால் தலைமுடிக்கு குழல்
என்றும் பெயர். கூட்டிக் கட்டப்படுவதால் கூ > கூ + தல் > கூந்தல்
என்றும் பெயர்.

இகுத்தல் என்பது குழைத்துத் திரட்டுதல் ஆதலால்,

இகு> இகு+ ஐ = இகை > சிகை ஆனது.  இகு> சிகு > சிகை எனினும் ஆம்.

இகு என்பது சுட்டடிச் சொல்.  இ= இவ்விடம்;  கு = அடைவு அல்லது
சேர்தல் குறிக்கும் மிக்கப் பழங்காலச் சொற்கள். இன்னும் நம் மொழியில் உள்ளன‌. இங்கு தலையில் வளர்வதை இங்கேயே குழைத்துக் கட்டுதலைக் குறிக்கும். எனவே சிகை அழகிய கருத்தமைதி கொண்ட சொல். இ+கு என்பதிலிருந்து திரிந்து அமைந்தது.  கு என்பதும் அவனுக்கு, சென்னைக்கு என்று இன்றளவும் வழங்கி சேர்விடம் உணர்த்துகிறது.

தமிழை நன்குணர ஓர் ஆயுள் போதாது. இங்கே(தலையில் வளர்வதை)
இவ்விடமே குழைத்துத் திரட்டிவைக்கும் செயல் இகு> சிகு> சிகை.
இங்கிருப்பது அங்கு செல்லுமானால் இ+அம்+கு = இயங்கு என்பது
இதற்கு மாறுதலாக அமையும் ஒரு கருத்து.  இவையெல்லாம் திட்ட்வட்டமான அமைப்புகள்.

அறிந்து மகிழுங்கள்.

பைரவர் : இரவனுக்கு நன்றி

  பைரவர் என்பது நாம் நம் ஆலயங்களில் அடிக்கடி கேட்கும் சொல். பைரவர் சாமியைக் கும்பிடும் பற்றரும் அதிகமே.

பல உயிர்ப் பைரவர்கள் பகலில் பெரும்பாலும் உறங்கி இரவில் சுற்றி வருவர்.  ஆலயங்கள் இரவில் முன்னிரவிலே மூடப்பெறுவதால் பைரவர் சாமிகட்கு இரவுகளில் பற்றருக்கு அருள்பாலிக்கும் வாய்ப்புகள் இல்லை.

நாம் கவனிக்க இருப்பது வீட்டுப் பைரவர்களை. இவர்களில் பலர் இரவில் வீட்டுச் சுற்றுச்சுவருக்குள் காவலுக்கு விடப்படுவர்.  இவர்களின் சேவையோ மாபெரும் தகையதாகும்.  வைகுண்டம், வையாபுரி, வையகம், வையம் என்று வரும் பலசொற்களின் தொடக்கமான வை என்னும் சொல் வைரவர் என்பதில் முன்னிலை பெற்றிருப்பதைக் காணலாம்,இச்சொல் முன் நிற்பது ஒரு சிறப்பு என்பதறிக.

வை என்பது இறைவனால் வைக்கப்படுதலைக் குறிக்கிறது. இது வைரவனுக்குப் பட்டமளித்தது போன்றது.

இவன் இரவில் உழைப்பவன்.  ஆகையால் :  " இரவன் "  என்று
இச்சொல்லிலே சுட்டப்பட்டவன்,

வை + இரவன் =  வைரவன்.  இங்கு இகரம் கெட்டுச்  சொல் அமைந்தது.  வையிரவன் >  வயிரவன் என்று ஐகாரம் கெட்டும்\   சொல் அமையும். வேண்டாத நீட்டத்தைக் குறுக்கிச் சொல்லை அமைப்பது ஒரு நல்ல கொள்கை.  அறு + அம் =  அறம் என்பதில் உகரம் கெட்டுப் புணர்ந்தது காண்க; மேலும் வகர உடம்படு மெய்யும் நுழைக்கப்படவில்லை.  இவை சொல்லமைப்பினில் கையாளும் தந்திரங்கள்.

இறைவனால் நமக்காக வைக்கப்பட்ட நன்றியுள்ள இரவனுக்கு நன்றி
நவில்வோம்.
வைரவர்  -  பைரவர்


வை இரவு அன் >  வையிரவன் > வைரவன் அல்லது வயிரவன்
வையி > வயி;
வயி > வை
எப்படியாயினும் வேறுபாடின்மை காண்க.

தமிழக அரசின் குறள் கொள்கை

ஆயிரத்து முன்னூற்று முப்பதான‌ அருங்குறளும்
போயிருந்து பள்ளியிலே புகுநாட்கள் முதல்கற்பீர்
ஏயுணர்வு மிக்குவர இனியவாய பண்பமைந்த‌
சேயர்செஞ் சீர்பெறுவீர் செந்தமிழ்க்கோல் உத்தரவே.

இடர்கள்பல குமுகத்தில் ஏறுமுகம் இழிகுற்றத்
தடர்தொகையால் ஆழ்குழிக்குள் வீழ்படாமை ஆற்றிடவே
தொடர்தகவு  நடவடிக்கை எனப்பலரும் பாராட்டும்
சுடர்கொள்கை சூழ்பயன்சேர் செந்தமிழ்க்கோல் உத்தரவே.


புவி . (தோன்றியது .)

பூத்தல் என்பது, பலரும் அறிந்த பொருள்,  "பூ மலர்தல்".

ஆனால் இச்சொல்லுக்கு வேறு பொருள்களும் உள்ளன:

தோன்றுதல், பயன் தருதல், அழகாகுதல், பருவம் எய்துதல் என்பன.

இவற்றுள் தோன்றுதல், முன்மைவாய்ந்த பொருளாம்,

புவி அல்லது இவ்வுலகம் தோன்றியது  என்பதே பலரின் எண்ணமாகும்.
தமிழரின் எண்ணமும் அஃதே.

மண் தோன்றி... என்பதைக் கேட்கையில், இம்மண் தோன்றியதென்பதே
நம் அறிவு நமக்குச் சொல்வது  ‍  :  தோன்றிய ஞான்று நாம்
இல்லை எனினும்.

பூ > பூவுலகு.  ( பூ+ உலகு).
பூ >  பூமி.    ( இங்கு "ம்" இடைநிலை).
(இவ்விடைநிலை உம் என்பதன் தலைக்குறை.)
பூ > பூவனம் > புவனம்.
( பூ ‍= தோன்றிய; வனம் = அழகுள்ளது ).
( வல்>வன்; வன் > வனை> வனைதல்; வன்>  வனம் ).
வனப்பு = அழகு. வல்> வல்லி ‍: பெண்,அழகி.
இவ்வோர்பும் ஏற்புடைத்தே:‍
பூவு> பூவு+அன்> அம் > பூவனம்; . புவனம்.
நெடில் குறுகுதல் பல சொற்களில் வரும்.


பூ > பூவி  >  புவி . (தோன்றியது .)   வி : விகுதி.

சாவு > சவம் எனக்   குறுகுதல்  காண்க.

இவற்றை ஆய்ந்து தெளிக.



வியாழன், 23 மார்ச், 2017

தொப்பி என்ற தமிழ்ச்சொல்

தொப்பி என்ற தமிழ்ச்சொல் பல வட்டார மொழிகளிலும் பரவியுள்ளது.
வெளிநாடுகளில் வேலைக்குச் சென்ற பல தமிழர்கள் வெயில், மழை முதலிய இயற்கை நிகழ்வுகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள,
தொப்பியணிந்தனர் என்று சொல்வர். பின், கங்காணிகளே அதனைப் பெரிதும் அணிந்தனர் என்றும் கூறுவர். இது எங்ஙனமாயினும்;

தொப்பியைப் பாருங்கள். அது நடுவில் உட்குழிந்து காணப்படுகிறது. இப்படி உட்குழிவதைத் தொய்வு என்றும் கூறுவர்.

சொல் அமைந்த விதம் காண்போம்.

தொய் (தொய்தல்).   தொய் > தொ. இது கடைக்குறை. இறுதி எழுத்துக்
கெட்டது.

தொ >  தொப்பு > தொப்பை.
தொ     தொய்  >    தொய்ப்பு    >  (   தொப்பு > தொப்பை.  )
தொ > தொப்பூழ்.
தொ> தொப்பு> தொப்பி.  ( உள்குழிந்த தலையணி).
பு, இ ஆகிய விகுதிகள் சேர்ந்த சொல். இவ்விரு விகுதிகளும்
பெரிதும் தமிழிலே வருபவை.
தொப்பிக்காரன்  வேலைமேற்பார்வையாளன்.
தொய்> தொ > தொத்து  (து விகுதி, விழு > விழுது ; கை>கைது என்பன‌போல்).
தொத்துதல்  :  தொய்வில் பற்றிக்கொள்ளுதல் .



பளபளப்பூட்டப்பெற்ற சிரமம் என்ற சொல்

சிரமம் என்ற சொல் இப்போது நம்மிடைப் புழக்கத்தில் உள்ளது. பேரிடர்களாக இல்லாமல், சிறுசிறு தொல்லைகளாகத் தோன்றி நமக்கு
இடைஞ்சல்களை ஏற்படுத்தக் கூடியவற்றைச் சிரமம் என்று சொல்கிறோம்.

இது உண்மையில் "சிறுமம்" என்பதுதான்.  சிறு தொல்லைகள் என்று
வேறு சொற்களால் சொல்லலாம்.

சிறுமம் என்ற சொல் இப்போது கிடைக்காவிட்டாலும், புனையப்பட்ட காலத்திலே அல்லது அதற்கடுத்தோ மறைந்துபோய், அதனின்று தோன்றிய "சிரமம்" என்பதுமட்டும் "ஸ்ரமம்" என்று பளபளப்பு ஊட்டப்பெற்று நம்மிடை நிலவுவது,  சொல்வரலாறுகளில் காணின் இயல்புதான் என்க.

ஆனால் "சிறுமம்" என்பது சுவடு தெரியாமல் மறைந்துவிட்டது என்று
கூறுவதற்கில்லை.  காரணம், சிரமத்தில் சிறுமம் ஒளிந்கொதுண்டிருக்கிறது. கண்டுபிடிப்பதில் பயிற்சிபெற்ற கண்களுக்கு
அதை வெளிக்கொணர்வது சிரமத்துக்குரியதன்று.

ஸ்ரமம் என்பது பளபளப்பூட்டப்பெற்ற வடிவம். அதை மகிழ்ந்து நோக்கும்  அதே வேளையில் சிறுமத்தையும் மறந்துவிடலாகது.

நம் புதிய இடுகைகள்

நாம் இங்கு புதிய கருத்துக்களில் புதிய இடுகைகளை வேய்ந்து வெளியிட்டாலும் , மிக்க அருமையான தேடுதல் எந்திரங்களை நம்
இணைய தளம் கொண்டிருந்தாலும், இப்புதிய கருத்துக்கள் உடனே
சென்று சேர்வதில்லை என்று தெரிகிறது.

அண்மையில் மலேசியாவிற்குச் சென்று இதனை நோட்டம் (சோதனை)
செய்தோம். பழைய இடுகைகள்  கிடைத்தன. நாம் புதியவாக வெளியிட்டவை அங்குக்  கிடைக்கவில்லை. தேடுதல் எந்திரங்களும்
மயக்க நிலையில் இருக்கும் என்று தெரிகிறது.

நம் புதிய இடுகைகள் உங்களின் இடத்தில் கிட்டுகின்றனவா என்பதை
உறுதிசெய்துகொள்ளுங்கள்.

The previous  message appears to  have been hacked.
It is now reposted from original draft.


சாணக்கியன் வடதிசை...... சென்று....


முன் யாம் இப்படி எழுதியிருந்தோம்.:

 சாணக்கியன் வடதிசைச்  சென்று பணிபுரிந்த தென்னாட்டுப் பிராமணன் என்பது வரலாறு. அல்லது  கதை .  (எதுவாயினும் )  .  சோழ நாட்டினன் என்று சொல்லப்படுகிறது. இப்போது இவன் பெயரை ஆராய்வோம்.
இவன் நுண்மாண் நுழைபுலம் உடையவன்.  எத்தகு நுண்ணிய பொருளாயினும் அதில் உள் நுழைந்து அறிந்து வந்து விளக்கும் வல்லமையே  நுண்மாண் நுழைபுலம் என்று தமிழில் சொல்லப்படும். ஐந்தடிக்கு மேல் வளர்ந்து நலமுடன் திகழ்ந்த அவன், எந்த விடயத்திலாவது புகுந்து உண்மை காணவிழைந்தால் ஒரு சாணாக குறைந்து உள் நுழைந்து மறைந்திருக்கும் உண்மையைக் கண்டுபிடித்துவிடுவான் என்று மக்கள் நம்பினார். இந்த நம்பிக்கை தமிழ் மரபில் சொல்லப்படும் நுண்மாண் நுழை திறனைப் படியொளிர்வதாக உள்ளது.  
சாண்  ஒரு சாணாக;அக்குதல் : குறைதல்.அ  அன் என்பன சொல்லிறுதிகள்.
சாணக்கியன்   சாணாகக் குறைகின்றவன்.


எனினும்,  நீட்டமானவற்றைச் சாணாகக் குறைத்தவன் எனப்படுவதால், தென்னாட்டினன் என்றும் சொல்லப்படுவதால்,  வள்ளுவனே ஏன்
சாணக்கியன் என்ற பெயரில் வடதிசைச் சென்றிருக்கலாகாது  என்ற‌
கேள்வியும் எழுகிறது. வள்ளுவனும் சாணக்கியனும் முன்காலத்தில்
வாழ்ந்தவர்கள். அவர்கள் காலக் கணக்கெல்லாம் கருத்துரைகளே. கூற்றும் மறுப்புகளுமாய் உள்ளவை அவை.

நீண்ட கருத்துக்களையும் சாணாகக் குறைத்துக் குறளாக்கின பெரும்புலவனே வள்ளுவன். குறளும் ஒரு சாண் நீட்டுக்கு மேல்
போகாதவை எனலாம்.

செவ்வாய், 21 மார்ச், 2017

இலாகா அருமையான புதுச் சொல் how?

இந்தச் சொல் எப்படி உருவாயிற்று என்று இப்போது ஆய்வு செய்வோம்.

எடுத்துக்காட்டில் தொடங்குவது எளிதாய் இருக்கும்.  ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தில் காட்டு விலங்குகளைக்  காப்பாற்ற ஆள்வோர் எண்ணுகின்றனர்.  அதற்காகச்  சில அலுவலர்கள், காவலர்கள் ஆகியோரை நே(ர் )மித்து  ஒரு சிறு அலுவலகம் அமைக்கின்றனர்.  அஃது ஒரு :காவல்  இல்லம் என்றால் அது பொருத்தம் ஆகும்.

ஒவ்வொரு காட்டிலும்  காவல் இல்லம் ஒன்று அமைத்து  ஒரு தலைமை அகம் ஓர்  நகரில் அமைப்பதானால் அது ஒரு "துறை" என்று இப்போது நாமறிவோம்.

கொஞ்ச காலத்தின்முன் துறை என்று இதைச் சொல்லலாம் என்பது அதிகாரிகள் சிந்தனைக்கு எட்டவில்லை என்றுதான் கூறவேண்டும்.
அவர்கள் அதற்கு ஒரு சொல் தேடினார்கள். ஒன்று  அமைத்துவிடலாமே என்று சிலர் ஓர் உத்தி (யுக்தி) செய்தனர்.

காவல் இல்லம் என்பதையே திருப்பிப் போட்டனர்.

காவல் ஆகும் இல்லம்.
கா -  ஆ -  இல்
இல் - ஆ -- கா
 இப்போது இலாகா  என்ற அருமையான புதுச் சொல் கிட்டிற்று.

Reverse formation!

இது என்ன "பாஷை" என்றவர்க்கு எதாவது சொல்லவேண்டியதுதான்.

முன்பே மொழியில் பின்னோக்கு அமைப்புச் சொற்கள்  உண்டென்பது தெரிந்தவர்தான் இதைப்  பின் நடைப் புனைவு செய்திருக்கிறார்.

இரகசியம் என்பதும் அப்படிப் போட்ட சொல் தான். இதை நான் முன் இடுகை ஒன்றில் சொல்லியிருக்கிறேன்.  There are quite a few of this sort.





மாலையில் கண்கள் தேடுகையில்...........

பொடிசெய்து வைத்தேன் முறுக்கினையான்;
குடிபெய   ராச்சிறு குருவிகளே
காலையில் வந்து கத்துகையில்
கைகளில் ஒன்றுமே இல்லையன்றோ!
மாலையில் கண்கள் தேடுகையில்
மயங்கும் வேளையில் அகன்றுவிட்டீர்!
நீல வான்வெளி வெற்றிடமாய்
நிலைத்திடப் போமோ வந்திடுவீர்!
ஞாலம் ஒலிபெற் றுயர்ந்திடவே
நாணா தென்னிடம் வந்திடுவீர். 

ஞாயிறு, 19 மார்ச், 2017

"சல்லாப மயிலே "

சல்லாபித்தல் என்ற சொல்லை ஆய்ந்ததில், அது உண்மையில் "சிறுமை ஆக்குதல்"  என்றே பொருள்தருகிறது.  அது தன் முந்துநிலையில் "சில் ஆ(கு)வித்தல்"  என்றே இருந்தது . மொழியானது பல்வேறு வளர்ச்சி நிலைகளைக் கடந்துவந்துள்ளது. இவற்றுள் ஒரு கட்டத்தில்
அது "சல் ஆ(கு)வித்தல்"  என்றாகி, சல்லாவித்தல் என்று கூட்டுச்சொல்
ஆகி, வகரம் வழக்கம்போல் பகரமாகி, சல்லாபித்தல் என்று என்று திரிந்தமைந்தது. இப்படி மாறி அஃது ஒரு சொன்னீர்மைப் பட்டது நாம்
மகிழற்குரியதே ஆகுமென்க.

அறியாப் பெண்ணிடம் சென்று பல சில்லறை விளையாட்டுகள் செய்து அவளை மயக்கி,  ஆண்மகன்  அவள் உடலை மேவி, அவளுடன் இணைந்து அவளைச் சிறுமைப் படுத்திவிடுகிறான். அவளும் தன் தூய்மை துறந்து அவனிடத்துச் சிறுமைப் பட்டுவிடுகிறாள். இதைத்தான் "சல்லாபம்" என்ற சொல் தெளிவாகக் காட்டுகிறது.

குமுகாயத்தின் பெருமக்கள் தங்கள் வெறுப்பைக் காட்டப் புனைந்த‌
சொல்லே "சல்லாகுவித்தல்"  "சல்லாவித்தல்"  "சல்லாபித்தல்"
என்ற சொல்லானது.  இறுதி வடிவம்: சல்லாவித்தல், சல்லாபம். சல்லிக்கல் என்பதும்  உடைந்த சில்லுக் கல் என்று பொருள்படுவதால்
இத்தகு நிலை சல்லிநிலைதான் அன்றோ?

இதையே கண்ணபிரான் காதலியிடத்துச் சல்லாபம் செய்து மகிழ்வித்ததாகக் கவிஞன் பாடுகையில் :  சல்லாபம் என்ற சொல்
உயர்நிலை பெற்றுவிடுகிறது. இறைவன்பால் பத்தை நுகர்ந்த ஆன்ம‌
இன்பமாகிவிடுகின்றது. "தோழி, வந்தருள் என்று அவனை -  நீல மணி வண்ணனை,   வேய்ங்குழற் பண்ணனைக்  கண்டு   வருந்தி    அழைப்பாய், கொஞ்சம் சல்லாபம் செய்து  திரும்பலாம் என்பாய்"
என்கிறான் கவிஞன் தன்பாட்டினில். இப்படிச் சிறுமையாக்கம் பெருமிதம் தருவதாகவும் வரும். "சல்லாப மயிலே "   என்பதும்  அது .

நாளடைவில் சிறுமை மறக்கப்பட்டது என்பது தெளிவு. பயன்பாடு காரணம் ஆகிறது .

சனி, 18 மார்ச், 2017

சில் > சல் > சன் என்பவற்றின் தொடர்பு

அகர இகரத் தொடக்கத்தினவாகிய சொற்களில் சில கண்டோம். அவற்றிடைப் பொருள்நெருக்கம் உள்ளமையும் அறிந்தோம். இப்போது
சில் > சல் > சன் என்பவற்றின் தொடர்பு காண்போம்.

சில்: இதன் கருதற்குரிய பொருளாவன:

      அற்பம்; வட்டம்,  உருளை,  ஒட்டு, சிறுதுண்டு, சில.

சில் என்ற சொல் சல் என்று திரியும்:

      (சல் )  :

      சல்லுதல்:   அரித்தல், சல்லடையில் சலித்தல்.

      சல்லிவேர் :   ஆணிவேருக்கருகில்  இருக்கும் சிறுவேர்

      சல்லித்தல்: துண்டாக்குதல்.

      சல்லிசு (>சல்லிது  ஒப்பு நோக்குக: மெல்லிது>                 மெல்லிசு).எளிமையானது.

      சல்லிக்கல் = சிறுகல்.


      சல்லடை : சலித்துத் தூள் எடுக்கப்பயன்படும் கைக்கருவி.

      சல்லாபித்தல் = சல் ஆகுவித்தல் > சல்லாவித்தல் >     சல்லாபித்தல்.  ( சிறுசிறு விளையாடல்கள்; சரசம் ).

      சல்லாவு+ அம் >  சல்லாவம் > சல்லாபம்).

இனி, சல் என்பது சன் என்று திரியும்.

    சன்னம் :  சிறுமை; நுண்மை;  மென்மை;  நுண்ணியபொடி

    அதே சிறுமை, நுண்மை என்ற கருத்துகள் பொருள்மாறாமல் வந்தன.

    சன்னம் >  சன்னல்.

    உண்மையில் சுவரில் உண்டாக்கப்பட்ட சிறு காற்றுவருவதற்கான‌
துவாரத்தைக் குறித்தது.  இதன் சொல்லமைப்புப் பொருள் சிறுமை, குறுமை என்பன. கதவை நோக்க, சன்னல் சிறியதே அன்றோ.  கம்பிகள் கண்ணாடிகள் இல்லாத அல்லது கிட்டாத முன்காலத்தில்
ஓட்டைகள் பெரியனவாய் இருப்பின், திருடர் அல்லது வெளியார்
புக எளிதாகிவிடும். சிறு ஓட்டைகளே பாதுகாப்பு.

சில்  என்ற  மூலத்திலிருந்து  சன்னல்கள் வட்டமாய் இருந்தன  என்பதறிந்தோம்.

எனவே சன்னல் என்பதன் பொருளமைப்பு  அறிந்தோம்  மகிழ்ந்தோம்.

will edit.




   

     

அகர இகரச் சொற்கள் பொருள்நெருக்கம்

இன்று நாம் ஆய்ந்தறியவிருக்கும் சொற்கள் அகர  இகரச் சுட்டுச் சொற்கள். இவை ஒரு பொருளனவல்ல ஆயினும் இவற்றிடைப்  பொருள் நெருக்கம் உளவென்பதைச் சற்று விளக்குவோம்.

இடி :  அடி.

இடிப்பது வேறு; அடிப்பது வேறு. எனினும் இரண்டும் மோதுதலே. நுட்ப‌
வேறுபாட்டினவாம்.

இகலுதல் :  அகலுதல்.

இகலுதல் என்பது வேறுபடுதல். எனினும், பகையுணர்ச்சியால் அவ்வாறு வேறுபடல்.  அகலுதல், நீங்கிச் செல்லுதல், ஆனால் இதில்
பகையுணர்ச்சி இருந்தும் இல்லாமலும் இருக்கக்கூடும்.

இணைதல் : அணைதல்.

இரண்டும் ஒன்றுசேர்க்கையாகும். பெரும்பாலும் இரண்டு இணைதல் அல்லது சேர்தல். அணைதல், நீர் கரையை அணைதல்; காதலால்
ஒருவரை ஒருவர் அணைதல் அல்லது அணைத்தல் எனப்  பலவகை.

இடுதல் :  அடுதல்,

இடுதல் என்பது வைத்தல்; அடுதல் என்பது நெருப்புவைத்தல். அடுத்தல் என்பது நெருங்குதல். இவைமூன்றும் நெருங்கினாலே
செய்ய ஒண்ணுபவை.

இவற்றிலுள்ள பொருள் அண்மைநிலையைக் கருத்தில் கொண்டு
சில்,> சல் > சன் என்பவாகிய அடிச்சொற்களிலிருந்து பிறப்பிக்கப்பட்டுள்ள சொற்களை அடுத்து ஆய்வுசெய்வோம்.

தயாராகுங்கள்.


ஈட்டி (எறிதல்)

ஈட்டி என்ற சொல்லை ஆய்வு செய்வோம்.

இதன் அடிச்சொல் இடு என்பது.  இது பலபொருளுடைய சொல். இதன்
பொருளாவன: அணிதல், (பிச்சை முதலியன ) ஈதல்,  எறிதல், சொரிதல், வைத்தல் என்பன.

"இட்டார் பெரியார்"  :    ஈதல் செய்தவரே பெரியோர்.
பொட்டு இட்டுக்கொண்டாள் :  இங்கு அணிதல் பொருள்.
இதைப் பெட்டியிலிட்டுப் பூட்டு:    வெறுமனே வைத்துப் பூட்டுக என்பது.

எறிதல் என்பதும் பொருளாதலின், இடு + இ = இட்டி என்றும்  ஈட்டி
என்றும் வரும். பின்னது முதனிலை திரிந்த தொழிற்பெயர். இகரம்
ஈகாரம் ஆனது.  கெடு > கேடு என்பதும் முதனிலை நீண்ட தொழிற்பெயர்.  கேடு + இ = கேடி என்று போக்கிரியைக் குறித்தது.


இட்டி என்பது உலக வழக்கில் இல்லை. செய்யுளில் வந்தவிடத்துக்
காண்க.  ஈட்டி என்பதே உலகவழக்குச் சொல்.

ஈட்டுதல்  (சம்பாதித்தல் ) என்பது வேறு சொல் .


யார்பிள்ளை ஆனாலும் யார்பேரன் ஆனாலும்

தென்கொரியாவின் அதிபர் மக்கள் ஆதரவினால் பதவிக்கு
வந்தவர். வழக்கின் காரணமாக பதவியை விட நேர்ந்தது.
இவர் முன்னைய  அதிபரின் மகள். மக்களாட்சியில் வேறு
யார் வருவதாயிருந்தாலும் மக்கள் ஆதரவு தேவையன்றோ?
அதுவே மக்களாட்சி.  ஓர் அதிபரின் மகள் என்பது அறிமுகத்துக்கும்
புகுமுகத்துக்கும் பயன்படுவது மட்டுமே.

யார்பிள்ளை ஆனாலும் யார்பேரன் ஆனாலும்
பார்தன்னில் ஆதரவு மக்களினால் ‍=== ஊரூராய்
என்னென்ன கூறினும் வாக்கில்லை என்றாலோ

பொன்னன்ன பூம்பதவி இல்.



பொன்னன்ன =  பொன் அன்ன :  பொன்னைப் போன்ற மதிப்புடைய.
பூம்பதவி ‍:  அழகிய பதவி; பூவான பதவி.  பூம் ‍=  புகும் என்றும்
இரட்டுறலாக வரும்.

வெள்ளி, 17 மார்ச், 2017

எழுத்துக்களை விழுங்கிப் பேசுதல்

எழுத்துக்களை விழுங்கிப் பேசுதல்.

பேச்சு வழக்குக்கும் எழுத்துநடைக்கும் உள்ள வேறுபாடுகளைக் கவனித்தால், பல சொற்களில் எழுத்துக்களை விட்டுப் பேசுதல் என்பது
தமிழருடையதும் ஏனைத் திராவிட மொழியினருடையதும் வழக்கம்
என்பது நன்றாகத் தெரியும்.

கொடுக்கிறா(ர்)க(ள்) ‍  > கொடுக்கிறாக.
செய்கிறாள்  >  செய்(கி)றா(ள்)

என்று ஒன்றிரண்டு சொற்களைப் பார்த்தாலே போதும்.  பேச்சுமொழி
முழுவதும் இங்ஙனம் பல விழுங்கல்கள் மிளிர்கின்றன.

-மேற்காட்டியபடி ரகர ஒற்று மறைதல் எழுத்துநடைச் சொற்களிலும் உள.

சேர் > சேர்மித்தல் > சேமித்தல்.
நேர் > நேர்மித்தல் > நேமித்தல்.
( நியமம் > நியமி > நியமித்தல் என்பது வேறு சொல் என்பது
தெளிவு; பொருள் ஒன்றாயினும் ).

வேறு சில சொற்களிலும் ரகர ஒற்று மறைந்துள்ளது.

சேர் > சேர் + கு + அரன் =  சேகரன்.
உமையாளுடன் சேர்ந்திருப்பவன்; அல்லது நிலவுடன் சேர்ந்து தோன்றுபவன் ( எனப் பொருள் பலவாறு விரிக்கலாம்)

சேர் + து =  சேது  என்பதும் அது.

சேத்து என்ற சொல்லும் உளது.

கரன்  என்பது பிறழ் பிரிப்பால் விளைந்த  சொல்.
சிவ  என்பதும் சே என்று திரியும்.

to edit..




மொழி நூலும் தேவியும்

மொழி என்பது ஒரு கருத்தறிவிப்புக் கலை. ஓர் அறிவியல் என்றுகூடச்
சொல்லலாம். ஓர் இசைவட்டு வாங்குகிறவன், அதை அதற்குரிய இயந்திரத்தில் இயக்கி  இசையை நுகர்தல் வேண்டும். அஃதின்றி அந்த‌
வட்டு எந்த மூலப்பொருள்களால் ஆனது என்பது அவனுக்குச் சற்றும் பயன் தரா அறிவாகும். அதுபோலவே ஒரு சொல்லைப் பயன்படுத்திக்
கருத்தினைக் கேட்பவன் புரிந்துகொள்ளுமாறு செய்வதே மொழி. அவனுக்கு மூலங்கள் தேவை அற்றவை.

இருப்பினும் சொல்லைப் பயன்படுத்தும் புலவனுக்கும் கவிவாணனுக்கும் இடமறிந்தும் உண்மைப்பொருளறிந்தும் பயன்படுத்த மூலச்சொற்கள் அடிச்சொற்கள் பற்றிய ஆய்வு உதவியாக இருக்கும், மேலும் பழஞ்சொற்கள் அமைந்துள்ள முறையறிந்தால் புதுச்சொற்களை அமைக்கும் முறையை நாம் அறிந்து மொழியை‍ , அதாவது நம் மொழியை மட்டுமின்றி எம்மொழியையும் வளர்ச்சிபெறச்
செய்யும் திறத்தைப் பெறலாம். உலக மொழிகள் அனைத்துக்கும்
இது பொதுவான கருத்து ஆகும்.

பிரித்தியங்கறா தேவி என்ற கடவுட் பெயரை நாம் 2013 வாக்கில்
அறிந்துகொண்டோம். இந்தப் பெயரைப் படைத்த பூசாரி அல்லது புலவன் மிக்கக் கற்பனை ஆற்றலும் சிந்திக்கும் திறமும் உடையவன்.
இந்தத் தேவியைத் தனியாக நிறுவினாலும் சிவத்துடன் தேவிக்கு உள்ள உறவு ஒன்றும் அற்றுப் போய்விடுவதில்லை என்ற உணர்வில்
அவன் அச்சொல்லை உருவாக்கினான். அது சொல்லாலே நமக்குப்
புரிகின்றது. சொல்லை அமைத்தபின், வணங்கும் பற்றனுக்கு (பத்தனுக்கு அல்லது பக்தனுக்கு)  மூலங்கள் தேவைப்படா. இறையுணர்வு முதன்மையாம் அன்றி சொல்மூலம் தேவையற்றது.
சொல்மூலத்தைவிடச் சூடன் சாம்பிராணி அவன் பார்வையில்
முன்மைபெறுதல் காண்க.

பிரித்தியங்கறா (~ரா) தேவிபற்றிய எம் முன் இடுகை காண்க:

தலைப்பு   :  மொழி நூலும் தேவியும்  

வியாழன், 16 மார்ச், 2017

ராகு என்று வழங்குவது........

இராகு என்பது ராகு என்று வழங்குவது தலையெழுத்திழப்பு ஆகும்.

இர்:  இது இருள் என்பதன் வேர்ச்சொல்.

இர் > இருள்.
இர் > இர் +ஆகு = இராகு.  (இருளாகிவிட்ட கிரகம்).

ராகு என்பது ஒரு நிழற்கிரகம் அல்லது நிழற்கோள். கேதுவும் நிழற்கோள் தான்.

இர் > இராமன்.
இர்+ஆம்+அன்:   கருப்பு நிறமான அவன்.  ஆம் : ஆகும் என்பதன்
குறுக்கம்.  அன் = அவன்.

இர் > இரா>  இராவண்ணன் > இராவணன்.

இவனும் கருத்தவனே.

இர் > இரா > இராகுலன்.

இருள் நிறக் குலத்தினன்.

இவற்றை 2009 ‍~  2010 வாக்கில் விளக்கியிருந்தாலும் இவை கள்ள‌
மென்பொருளால் அழிவுண்டன. பழைய இடுகைகளின் பகர்ப்பு அல்லது
சேமிப்பு இருந்தால் அனுப்பிவையுங்கள்.

இர்> இரவு .  இருள் நேரம்.

இர் > இரா > இராவு.

இர் > இரா > அத்து + இரி:  இராத்திரி.

இரு> இரி:  இருப்பது.  அத்து : சாரியை.

புதன், 15 மார்ச், 2017

சன்னலுக்குப் பலகணி

பலகணி என்ற சொல் அவ்வப்போது நம்மை எதிர்கொள்கின்றது. சன்னல்
என்பதே பரந்து வழங்குவதாய் உள்ளது. நாம் இப்போது பலகணி என்ற‌
சொல்லைப் புரிந்துகொள்ள முயல்வோம்.

ஒன்று, சில, பல என்னும் எண்ணிக்கைகளில் பல என்பதே  பலகணி என்ற சொல்லில் முன்நிற்கிறது.

இது உணர்ந்துகொள்ள விளக்கம் வேண்டாதது ஆகும்.

கண் என்பது ஓட்டையையும் குறிக்கும். கண்  என்ற சொல்லின் பொருளை முழுமையாக அறிந்துகொள்வோம். பொருளாவன:

அல்லி, அழகு, அறிவு, இடம், கணு, துவாரம், மூங்கில், விழி,
பீலிக்கண், தேங்காய்க்கண், மூங்கிற்கண், பெருமை, ஞானம்.

கண் என்பது பலபொருள் ஒருசொல்.  "துணியில் பூச்சிகடித்ததுக்    கண்ணு
கண்ணாய்ப் போய்விட்டது, அதை வீசிவிட்டேன் " என்று பேசுகையில்
கண் என்பது விழியைக் குறிக்கவில்லை; ஓட்டையையே குறிக்கிறது.

முற்காலத்தில் சன்னல்களை அமைத்தவர்கள், பல வட்டமான துளைகளை ஒவ்வொரு சன்னலிலும் அமைத்து காற்றுவர வசதி செய்தனர்.  அதனால் சன்னலுக்குப் பலகணி என்ற பெயர் ஏற்பட்டது.

இதைப் பல + கண் + இ என்று பிரிக்கவேண்டும். பல கண்களை
உடையது என்று பொருள்.

இது அழகாய் அமைந்த ஒரு தமிழ்ச்சொல். இதைப் பயன்படுத்துங்கள்.

கேது

கேவலம் என்ற சொல்லை அறிஞர்கள் முன்னர் விளக்கியுள்ளனர்.
கெடுவலம் என்பதே கேவலம் என்று திரிந்துள்ளது. வலிமை கெட்ட‌
நிலை என்பது பொருள்.

கெடு > கேடு > கே.

கேது என்ற சொல்லும் கெட்ட கோள் என்று பொருள்படுவதே. பலர்
இன்றும் இப்படி நினைக்கின்றனர். கேது என்பதில் து என்பது விகுதி.

கேதம் என்பதும் கெடுதம் என்ற சொல்லின் திரிபுதான், சாவு என்பது
பொருள்.

கெடார்நாதன் என்ற சொல்லுக்கு சிவபத்தர்கள் கெட்டுப்போக மாட்டார்கள், அவர்களின் நாதன் சிவன் என்பது பொருள்.


ஞாயிறு, 12 மார்ச், 2017

Malware

Please be warned that these malware should be deleted from your computers before
you   visit our website.

SiteRanker
DictionaryBoss
Videoscavanger

They may delete your recordings and interfere with the functioning of your computers.
It is also feared that they do other forms of harm.  They spread by bundled installation.
Deleting them may not be easy, You may have to use antivirus software or removal tool.
More often than not, they survive by hidden installation and reinstallation,

சனி, 11 மார்ச், 2017

root word "il" and changes...brief view

இலுப்பை மற்றும் இனிமை
==========================

இலுப்பைக்கும் இனிமைக்கும் உள்ள தொடர்பினை அறிந்துகொள்வோம்.

இலுப்பைக் காய் பழுத்தவுடன் சர்க்கரை போலும் ஓர் இனிமை இதில் உள்ளது. யாம் சுவைத்துப் பார்த்தவை வியட்நாம், தாய்லாந்து, மலேசியா ஆகிய நாட்டில் விளைந்தவை. இதை மலாய் மொழியில் "சிக்கு" என்பார்கள்.

இலுப்பை என்ற சொல்லின் அடி, இல் என்பது. அது சிதைவு அடையாமல் சொல்லில் இன்னும் வாழ்கின்றது.

இனிமை என்ற சொல்லின் அடி இன் என்பது. இது, இன்> இனி> இனிமை என்று அமைந்தது. இன்மை (இல்லாமை) என்பதில் வரும் இன் - சந்தியில் தோன்றியதாகையால் அது வேறு என்க.


இல் என்பது இன் என்று மாறும். இவ்விரண்டில் இல் என்பதே மூலம். இல் என்பது பல்பொருள் கொண்ட ஓர் மூலச்சொல். இதன் எல்லாப் பரிமாணங்களின் உள்ளும் இங்கு யாம் புக முற்படவில்லை, பரிமாணம் ஆவது பரிந்து சிறப்பது. அதாவது தோன்றிப் போல இருப்பவற்றினின்று அழகுற்று வேறுபடுவது,, தோன்றிப் போன்மையின் வேறுபடல். மாணுதல் = சிறத்தல். மாண்> மாணு > மாணம். எனவே பரிமாணம். பரிதல் - வெளிப்படுதல். பரி > பரிதி. முன் வெளிப்பட்டதாகிய சூரியன். அதிலிருந்து வெளிப்பட்டன ஏனைக் கோள்கள். காற்றுப் பரிதல் ( வெளிப்படல்) என்னும் பேச்சு வழக்கை நோக்குக.. இத் தடப் பெயர்வு நிற்க



இல் = இன்.
இல் >இலுப்பை
இன் > இனிப்பு.

இல்> இலுப்பு> இலுப்பை.
இன் > இனுப்பு > இனிப்பு.
இலுப்பு> இனுப்பு > இனிப்பு.

இனிப்பு என்பதைப் பேச்சில் இனுப்பு என்று பலுக்குவோர் பலர் உளர். அது இனிப்புக்கு முந்திய வடிவம்.

தமிழில் இனுப்பு என்பதை இனுப்பு என்றே பேசினோரும் அதை இனிப்பு என்று பேசினோரும் என இருசாரார் இருக்க, இனிப்பு என்பதே எழுத்தில் முதலில் வந்து நிலைத்துவிட்டது;

மொழி ஆய்வு வேறு. மொழியை தற்கால நிலைப்படி மரபு காத்தல் என்பது வேறு. பேச்சுக்குப் பிந்தியது எழுத்து. விரி வரிக்க - விவரிக்கத் தேவை இல்லை.

Shall meet and greet again. Stay tuned.
This was written sometime back. Shall edit later.

கச்சடா என்ற பேச்சு வழக்குச் சொல்லை...

இப்போது கச்சடா என்ற பேச்சு வழக்குச் சொல்லைப் பார்க்கலாம்.

கசப்பு என்பது வெறுக்கத் தக்கதாக இருந்துவந்துள்ளது. அடா என்பதும்
அடர்வு, அடைந்துநிற்பது என்று பொருள்தரும்.  அடு> அடர்> அடர்வு.
அடு>அடா. ஆ என்பது ஓர் விகுதி. இது நிலா ( நில்+ஆ),  கலா ( கல்+
ஆ ), பலா ( பல் + ஆ: பல சுளைகளை உடையது ) எனப் பல சொற்களில் வரும்; மேலும் பெயர் அல்லாத சொற்களிலும் வரும்:  இல்> இலா; செல் > செல்லா எனக் காண்க. வளைவு குறிக்கும் வில்> விலா (வயிறு அடுத்த எலும்பு).  ஐ என்பதும் ஆ என்று திரியும்: தலை> தலா. இவை போதும். விளியிலும் வரும்: கண்ணன் > கண்ணா.

ஆக, வெறுக்கத்தக்கது அடர்வாய் இருக்கும்  நிலையே கச்சடா.

இங்கு கச என்பது புணர்ச்சியில் கச்ச என்று சகரம் இரட்டித்தது.

பசு(மை)+ அடி = பச்சடி போல. பசு என்பது பச்சு > பச்ச என இரட்டித்தது.

அறிந்து மகிழ்வீர்

A densely constituted detestabe stuff!

சூத்திரர் comparison with other words

continue reading from last post

ஒன்றைச் சூழ்ந்து (ஆலோசித்து) அறிந்து திறம் காட்டுவோரே
சூத்திரர் ஆவர். எனவே மூளைவேலையர் என்பது பொருள்.
இசை பாடுதல் சூத்திர வேலை. இதற்கு மூளையும் வேலை செய்யவேண்டும்.

சூழ்த்திறர் என்பதில் உள்ள ழகர ஒற்று மறைந்தது.

இதுபோன்று திரிந்த இன்னொரு சொல்லைக் கவனித்து, இதனுண்மை
நாமுணரலாம்.

வாத்தியங்கள் என்பவை திருமணம், விழாக்கள் முதலிய நிகழ்ச்சிகளில் இடம்பெறுவன.  இயம் என்றாலே இசைக்குழு என்று
பொருளுண்டு.  வாழ்த்தி இசைக்கும் குழு  வாழ்த்தியம். இதிலுள்ள‌
ழகர ஒற்று மறைந்து அது வாத்தியம் என்றானது.  வாழ்த்துதல் என்பதைச் சிற்றூர் மக்கள் வாத்துவது என்றே ழகர ஒற்று இல்லாமல்
பேசக் கேட்கலாம்.  மக்கள் கல்வி பெறப்பெற வாழ்த்து என்பதை
வாத்து என்று சொல்வது தவறு என்று போதிக்கப்படுவதால் திரிபுகள்
மறைந்துவிடும். ஆனால் முன்காலத்து ஆட்சிபெற்ற திரிபுகள் நம்
மொழியினின்று அகலா. ஆர்கெஸ்ட்ரா போன்ற ஆங்கிலச் சொல் அதனிடத்தை வந்து பிடித்துக்கொண்டால் அப்புறம் வாத்தியம் என்ற‌
சொல் இருந்த இடம் தெரியாமல் போய்விடும் வாய்ப்பு ஏற்படும்,

சூத்திரம் சூத்திரர் முதலிய சொற்கள் பொருளிழிவு உற்றவை. நாற்றமென்ற சொல்போல இப்போது பொருள் இழிந்தது அல்லது சொற்பொருள் அழிந்தது. பிராமணர் அல்லாதவர் தாங்கள் எதையும் அறிந்து அமைப்பவர்கள் என்று ஒருகாலத்தில் ஒரு தற்காப்பு வாதத்தை முன் நிறுத்தியிருக்கலாம். உயர்வு அளிக்கப்படாதவிடத்து அது நிகழ்வது இயல்பு ஆகும். அதனால் அவர்கள் சூத்திரர் என்று தங்களைக் குறித்துக்கொள்ளவும் பிறரால் குறிக்கப்படவும் ஆனது.
பிற்காலத்து நிகழ்வுகளில் சாதி ஒன்றையே மக்கள் நினைவில் கொண்டதனால் சொற்பொருளை மறந்தனர்.சொல்லும் இழிநிலைக்குத்
தள்ளுண்டது என்பதறிக.

சூத்திரம்.

ஒருவன் பிராமணனாகப் பிறந்தாலன்றி அறம் விளக்கும் குருவாகல்
ஆகாது என்பது பண்டையோர்  பின்பற்றி வந்த ஒரு சட்டநெறி. இது   brahma janatiti brahmanah. என்பதாகும்    

இது சில வேளைகளில் கடைப்பிடிக்கப்பட்டும் சிலவேளைகளில் நெகிழ்ச்சியாக விடப்பட்டும் வந்துள்ளமை, சரித்திரத்தின் மூலம் நாம்
அறிகிறோம். அது நெகிழ்ச்சி கண்ட காலத்து, சூத்திரர்களும் பிராமணர்
தொழிலை மேற்கொண்டனர்.

ஆனால் பிராமணர் சூத்திரரின்     தொழிலை மேற்கொள்வதும் பெரும்பான்மையே.  பல சூத்திரத் தொழில்களும் இனிமை பயந்து
பெரும்பொருள் ஈட்டற்கு வழிவிடுவன என்பது யாவரும் அறிந்ததே.
நடித்தல் , இசைபாடல் முதலியன குறிக்கலாம்.

பிராமணர் பிரம்மத்தை உணர்ந்தவர்.  அதற்கும் போதுமான வயதும்
அறிவும் தேவைப்படுகிறது. சூத்திரர்க்கும் அப்படியே. பெரும்பாலும் தொழிற் பூசல்கள்  மக்களைப் பாதிக்காமல் இருப்பதே இவற்றின் நோக்கமாகலாம்.
" Kalau sudrah sambhava"   என்று  சங்கத  நூல்கள் கூறுதலால்  இக்காலத்தில் அனைவரும்  சூத்திரர்களே   காரணம் எல்லோரும் ஆலோசித்துத்தான் செயல்படுகின்றனர்.
ஆக சூத்திர என்றால் என்ன?

சூழ்+ திறம்  = சூழ்த்திறம் > சூத்திரம்.

ஒன்றைச் சூழ்ந்து (ஆலோசித்து) அறிந்து திறம் காட்டுவோரே
சூத்திரர் ஆவர்.எனவே மூளை வேலையர் என்பது பொருள்.
இசை பாடுதல் சூத்திர வேலை. மூளையும் வேலை செய்யவேண்டும்.

சூழ்த்திறர் என்பதில் உள்ள ழகர ஒற்று மறைந்தது. றகரம்  ரகரம் ஆனது.

வெள்ளி, 10 மார்ச், 2017

Modi's results: மோடிதம் தொலைநோக்கு

மோடிதம்  தொலைநோக்கு முன்னின்று வழிகாட்டத்  தேர்தல்தன்னில்
நாடிதம் நயந்தாக்கும் நல்லபல விளைவுகளை நாம்காண்கின்றோம்!
ஏடிதழ் ஊடகங்கள் பன்னலங்கள் விரித்துணர்த்தி  மேன்மைகூறும்
வீடுகள் துயர்விலகி வியத்தமுற்றுச் சிங்கைபோல்  செழித்துய்கவே.


நாடிதம் நயந்தாக்கும் :  நாடு இதம் நயந்து ஆக்கும் என்று பிரிக்கவும்.
இதம் = இனிமை.  நயந்து ‍ :  நல்லபடி தந்து.

வீழருவி ஆயிற்றே

என்னநே ரம்மையா இந்த நேரம்
என்னறையில் யானெழுதிக் கொண்டி ருந்தேன்!
என் தலைக்கு  மேலிருந்த  தண்ணீர்த் தாங்கி
என்னவென் றறியாத கார ணத்தால்
விண்மலையில் நின்றிற‌ங்கு நேர்த்தி போல‌
வீழருவி ஆயிற்றே விரைந்த  கன்றேன்
கண்ணிமைக்கும் நேரத்தில் கலைந்த நேர்ச்சி.
காலையிலே நாளைக்குச்  சரிசெய் வார்கள்.

களைப்புடனே சிங்கைவந்த எனக்கே  இங்கு
கவியொன்றும் வரவில்லை புவி என்  செய்வேன்.

The fibreglass tank has split/////


விண் மலையில் == விண் போலும் உயர்ந்த மலையில் . இது உவமைத்தொகை .

புவி  :  புவியில் .  இல் உருபு  தொக்கது.
புவி : பூத்ததாகிய  இவ்வுலகு   பூத்தல் -  தோன்றுதல். விரிதல் . வி:  விகுதி .
சாவு > சவம்   போல  பூவி  > புவி என்று சுருங்கியது .

புதன், 8 மார்ச், 2017

கொடுவா மீன். கொடுவாய் மீன்

கொடுவாய் என்பது புலியையும் குறிக்கும். பிற பொருளும் உள.

மீனைக் குறிக்குங்கால்  இச்சொல் இருவிதமாக வரும்.

கொடுவா  மீன்.
கொடுவாய் மீன்.

sea bass

ஈண்டு யாம் சுட்டிக்காட்ட விழைவது:  வாய் என்று வரும் சொல்
யகரம் நீங்கி வா  (கொடுவா) என்றும் வரும் என்பதே. வழக்கில்
கொடுவா என்பதே மீனின் பெயர் என்பர் சிற்றூர் மக்கள்.

வாய் அதிகம் பேசுவோன் வாய்ப்பட்டி எனப்படுவான்.  இச்சொல் "வாப்பட்டி" என்று பேச்சில் வரும். மலையாளத்திலும் வாய் என்பது
வா என யகர ஒற்று மறையும்.



வாக்கு என்பது வாய்மொழி தருதல் என்று பொருள்தரும்.  வா+கு. இது
வாக்கு ஆனது.  கு என்பது விகுதி.  இது வினையாக்க விகுதியாகவும்
வரும்.  மூழ்கு, அடுக்கு என்பன காண்க.

எனவே, வாக்களித்தல், வாக்குமூலம், வாக்காளர் யாவும் தமிழே.


வேற்றுமை உருபு   ஏற்குங்கால்  வாய் என்பது வா என்று  வாராது.  வாய்க்கு என்பது வரும்.  வாக்கு என்று வருதல் இல்லை. 

தொல்காப்பியம் பெயர்க்காரணம்

தொல்காப்பியம் என்ற கூட்டுச் சொல்லில் இரு சொற்கள் உள்ளன.
ஒன்று தொல் என்பது. மற்றொன்று காப்பியம் என்பது.
தொல்காப்பியம் என்பது  சிலப்பதிகாரம்  மணிமேகலை போன்ற காப்பியம் அன்று. எனவே  இந்தச் சொல்  வடமொழியிலுள்ள காப்யா  என்ற சொல்லினின்று வந்ததென்பது  தவறு ஆகும்.
இது காப்பு +இயம்  என்ற சொல்லும் விகுதியும் சேர்ந்தமைந்த சொல்லாகும். இதன்  முன் நிற்கின்ற "கா" என்பது  காத்தலென்னும் வினைச்சொல்.  பு  என்னும் விகுதி பெற்றுக் காப்பு ஆகி மீண்டும் இயம் என்னும்  விகுதி பெற்றுக் காப்பியம் ஆனது.  
இதை யாம் முன்னரே எம் இடுகைகளில் சொல்லியிருந்தோம்.  சில ஆண்டுகட்கு முன்னர்!
பிறரும் இணயக் கட்டுரைகளில் சொல்லியிருந்தனர்.
காப்யா என்ற வடசொல்லை இங்கு ஆராயவில்லை.  அது நிற்கட்டும். அதைப்பற்றியும் முன்பு எழுதியதுண்டு.  ஆங்குக் காண்க.
தொல் பழங்காலத்தில் "காப்பியக் குடி" என்றொரு குடி ( குலத்து உட்பிரிவு)   இருந்தது.  அவர்களின் தொழில், பழைய இலக்கணங்களைக் கற்று, இலக்கியங்களையும் அறிந்து, அவற்றைக் காப்பது ஆகும்.
இப்படியும் இருந்திருக்குமா என்று வியந்து கேட்போருக்கு,  நாம் வரலாற்றையும் சற்று எடுத்துக்காட்டுவோம்.  பழங்கால யூதரிடை
"ச்cரிபெச்" என்றோரு பிரிவினர் இருந்தனர் என்பதை நீங்கள் விவிலிய நூலிலிருந்து கண்டுகொள்ளலாம்.  அரபியர்களிடை "அல் காத்தீபு" என்ற குடிபெயருடையவர்களும் இருந்தனர். சிறிது வரலாறு படித்து இதனை உறுதிப்படுத்திக்கொண்டால் உங்களுக்கு வியப்பு ஏற்படக்  லாரணங்கள்  இரா.
காப்பியக்குடி பற்றி  பேராசிரியர் கா . சு. பிள்ளை அவர்களும்
எழுதியுள்ளார்.
காப்பியாற்றுக் காப்பியனார் என்ற காப்பியக் குடிப் புலவரும் சங்க காலத்தில் இருந்தமை உணரவேண்டும்.
பல்காப்பியர் என்ற ஓர் இலக்கணப் புலவரும் இருந்தார். அவரின் சில நூற்பாக்கள் யாப்பருங்கலக் காரிகையில் காட்டப்பெறுகின்றன.
இது காறும் சுருங்கக் கூறியவற்றால்,தமிழரிடை காப்பியக் குடியினர் இருந்ததும் அக்குடிப் பிறந்த அறிஞரே தொல்காப்பியர் என்பதும் இனிது விளங்கும்.
-----------------------

மீள்பதிவு:  2015.

தொல்காப்பியம்  பெயர்க்காரணம் 

செவ்வாய், 7 மார்ச், 2017

"கயஸ்த பிராமணர்" யார்

பிராமணருள் "கயஸ்த பிராமணர்" என்பார்  ஒரு வகை. இவர்கள்
கலப்பற்ற பிராமணருடன்  அரச குலத்துப் பின் தோன்றிகளும் வணிக‌
குலத்தின் உறுப்பினர்களும் கலந்து அமைந்த அமைப்பு என்று கூறுகின்றனர். இவர்கள் யூதர்களிடை ஏற்பட்டிருந்த எழுத்துத் தொழிலர்கள் போன்ற ஒரு பிழைப்பை மேற்கொண்டிருந்தனர் என்று  கூறப்படுகிறது.

இப்போது கயஸ்த என்ற சொல்லைச் சற்று சிந்திப்போம்.

இவர்கள் கையெழுத்து வேலை மேற்கொண்டிருந்ததால், இவர்களைச்
சுட்டுவதற்கு ஒரு பெயர் தேவைப்பட்டது.  வங்காளத்தில் தமிழரும்
இருந்ததனால், அத் தமிழர்  இவர்களைக் "கையெழுத்தர்" என்றனர். இச் சொல்லின் ழுகரத்திற்குப் பதிலாக  "ஸ்" ஒன்றை  இடுங்கால்,
கையெஸ்த்த" என்றாகிவிடும். தமிழன்றிப் பிறவற்றில் அர் விகுதி
இன்மையின், அர் என்று சொல் முடிபு கொள்ளாது. ஐ காரம் கெட்டுக்
ககரம் ஆகும்.  இறுதி வடிவம் "கயஸ்த" ஆகிறது.

இங்ஙனம் கயஸ்த என்பது தமிழினின்று சென்றதென்பது காணக் கிடக்கின்றது.  

இப்படிப் பெயரொன்று  அமைந்தது  இறையருள் தான்.

கல்யாணம் < கலியாணம்.


கல்யாணம் - முன் இடுகைகள் அழிந்தன.
கலி = மகிழ்ச்சி.
ஆணம் = பற்றுக்கோடு.
கல்யாணம் < கலியாணம்.
மகிழ்ச்சிகுப் பற்றுக்கோடாவது.

கண்ணாலம் > கண்+ நாலு+ அம்.
நாலு கண்கள். இருவர் கலந்த வாழ்க்கை என்பது.

காதலுக்கு நாலு கண்கள் என்பது கண்ணதாசன் பாடல் வரி. இது கண்ணாலம் என்பதன் மறைமுகமான
விளக்கம்.

இவை பேச்சு வழக்குச் சொற்கள்.

அடிச்சொல்:  

கல .

கலத்தல் .
க ல + இ =  கலி .  அகரம் (ல் + அ )  ல -வில்  ,  அது கெட்டது ..
தளை  கலந்து வரும் பா கலிப்பா எனப்பட்டது.
கலி ,    ஆணம்  இரண்டும் தமிழ். 
கல்யாண்  என்பது  கொடுந்திரிபு. But copied from Tamil and mutilated.

கலியாணம் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளிலும் தமிழாகும். 



---------------


kalyaaNam - mun itukaikaL azinthana.
kali = makizchchi.
aaNam =  paRRukkOtu.
kalyaaNam  <  kaliyaaNam.
makizchchikup paRRukkOtaavathu.

kaNNaalam  > kaN+ naalu+ am.
waalu kaNkaL.  iruvar kalantha vaazkkai enpathu.

kaathalukku naalu kaNkaL enpathu kaNNathaachan paatal vari.  ithu kaNNaalam enpathan maRaimukamaana
viLakkam.

ivai pEchchu vazakkuch choRkaL.

கம் > கம்கம and words from

கம் என்பது ஒரு தமிழ் அடிச்சொல். கம் என்பதற்குப் பல
பொருள் உண்டெனினும், அவற்றுள் ஒன்றை மட்டும்
ஈண்டு விளக்குவோம்.

கல்யாணப் பெண் கமகம வென்று வாசமாக இருக்கிறாள்.
கல்யாணம், வாசம் எல்லாம் முன் விளக்கப்பட்டவையே. அவை உள்ளனவா என்று தேடவில்லை. ஆனால் அவற்றைப் படித்த உங்கட்கு இச்சொற்களின் அமைப்பு நன்கு
தெரியும்.

கம் > கம்கம நறுமணக்குறிப்பு
கம + அழ் = கமழ் > கமழ்தல். இது வினைச்சொல். .
அழ் = அல். அல்>அழ்.
இல் என்பதும் இழ் என்று திரிவது காண்க.

பலர் அழ். இழ் என்பனவற்றை அல், இல் என்றே பலுக்குவர்.

கம் > கம்+தம் = கந்தம் (வாசனை)

தம் என்பது ஒரு விகுதி.

will edit

.

மென்பொருள் வல்லவளானேன்


மென்பொருள் வல்லுநராய் என்னை உருவாக்க
என்கணினிக் குள்ளனுப்பி எள்ளினரோ -- வன்கணமாய்க்
கள்ள அழிப்பானைக் கண்டதும் அஃதழித்து

மெல்ல வல்லவளா     னேன். .

ஞாயிறு, 5 மார்ச், 2017

தீயைப் பற்றி மனித சிந்தனை

மனிதன் தீ உண்டாக்குவதற்கு அறியுமுன்பே தமிழ்மொழி தோன்றி வளர்ந்துகொண்டிருந்தது. அதற்கான ஆதாரம் தீ என்னும் சொல்லிலேயே
அடங்கி இருக்கிறது.

தீக்கற்கள் உராய்வதனால் தீ உண்டாயிற்று. உராய்தல் என்பது தேய்தல்.
தேய் > தீ ஆனது. இஃது ஒரு பழங்காலத் திரிபு ஆகும்.  தீயைப் பற்றி
மனித சிந்தனை வளர்ச்சிபெற்று  அது வணங்கப்பெறும் நிலைக்கு உயர்ந்த பின்பு வேறு சில சொற்கள் தோன்றின.

தேய் > தேய்வு என்ற சொல் தோன்றி, தேவு என்றானது. யகர ஒற்று
மறைந்து சொல் அமைந்தது. தேவு என்பது கடவுள் என்ற நிலையில் உணரப்பெற்றது. ஆதலின் கடவுள் என்ற பொருளுண்டாயிற்று.

தேவு > தேவன்,   > தேவி, என்று பின்னர் பான்மை உணரப்பட்டுச்
சொற்கள் அமைந்தன.   தேய்வு > தெய்வம் என்று அம் விகுதி பெற்ற‌
சொல்லும் அமைந்தது

எனவே தேய் என்ற அடிச்சொல்லிலிருந்து இத்தகைய சொற்களைப்
 பெற்ற தமிழ் மிக்கப் பழங்கால மொழி என்பது பெறப்படுகிறது. இதனை அறிஞர்கள் விளக்கியுள்ளனர்.




சனி, 4 மார்ச், 2017

காருண்யம் கருணை how derived

காருண்யம் ‍ சொல் பின்புலச் சிந்தனைகள்.

இந்தச் சொல் காருண்யம் என்னாமல் காருண்ணியம் என்று எழுதப்படுதல் வேண்டும். அப்படி எழுதினால் சொல்லின் தன்மையும் அதிலடங்கியுள்ள பொருண்மையும் நன்கு புலப்படுவனவாகும்.

கார் என்பது கரு என்பதன் திரிபு. ஒளிக்குறைவு அல்லது ஒளியின்மையைக் குறிக்கும். கருமுகில்களைக் கார்முகில் என்போம்.
கார்மேகம் என்பதுமுண்டு.  இந்தக் கருமையினை உண்பது எது?
அதாவது இருளை விழுங்கி  இல்லாமல் ஆக்குவது ஓளியே அன்றி
வேறில்லை. கருமை இரக்கமின்மையைக் காட்டுமானால் அக் கருமையை உண்டு அதை விலக்கும் ஒளி இரக்கத்தையும் அன்பையும் காட்டுமென்று சிறாரும் கூறிடுவர். அந்த ஒளியாகிய சிவம் அக்கருமையை விலக்க  உண்ட காலை,  அதுவோ அவரை விட்டு
நீங்காமல் அவர் கண்டத்திற் பதிந்துகொண்டது.  உண்மை யாதென்றால்
ஒளியை விட்டு இருளும் முழுமையும் நீங்காமல் . இரண்டும்  ஒன்றை ஒன்று பின்னிப் பிணைந்துகொண்டுள்ளன .  .  காயம் (ஆகாயம்) கருமை;
அதை விலக்கும் , (விளக்கும்)  ஒளி செம்மை. இரண்டும் விடாமல்
மாறி   மாறி வரும்.

கருமையை (கார்) உண்ட நிலையிலே,  கார் என்ற கொடுமை நீங்கிய‌
நிலையிலே, இரக்கமும் அன்பும் தோன்றுகின்றன. இவையே மொத்தமாகக் கார் உண்ணு இயம் ( காருண்ணியம் ) என்னும் ஒன்றாகிறது. கருணை என்பதும் கரு+ உண் + ஐ = ஆகிறது. கரு என்பது
கண் என்றும் திரியும். கருண் (கரு+உண்) என்பதும் கண் ஆகும்.

கரிய உள்ளத்துத் தோன்றும் இரக்கமின்மையை உண்டு ஒளியை வெளிப்படுத்துவதே கருணை, காருண்ணியம் எனப்பட்டன.

இவை  இந்தோ ஐரோப்பியச் சொற்கள் அல்ல.


இடைநின்ற யகர ஒற்று மறைதல்.

இடையில் உள்ள ஒற்றுக்கள்  மறைந்து சொற்கள் அமைவதென்பது
தமிழில் பெருவரவான நிகழ்வு ஆகும்.

வேய்தல் :  வேய்+ து + அம் =  வேய்தம் >  வேதம்.
வேய்தல்:   வேய் + து + அன் = வேய்ந்தன் > வேந்த‌ன்
தேய்தல் :   தேய் + கு  + அம் = தேய்கம் > தேக‌ம்
வாய்        வாய் + து +  இ =  வாய்த்தி >  வாத்தி >  வாத்தியார்.
தாய்:        தாய் + தி   =  தாய்தி > தாதி.
வேய் :      வேய் + சி =  வேய்சி  >  வேசி.
நோய்:       நோய் + து + ஆன் = நோய்ந்தான் > நோஞ்சான் (திரிபு).
பாய்தல்      பாய்+ சு + அன் + அம் = பாய்சனம் > பாசனம்.
காய்தல்      காய் + சு + இன் + இ = காய்சினி > காசினி .

இவை முன் இங்கு விளக்கப்பட்டுள்ள  சொற்கள். முன் இடுகைகளைக்
காணவும். பின் யாதாயினும் அழிந்திருப்பின் மீளேற்றம் பெறும்.
வேய்தல் என்பது மேலணிந்துகொள்ளுதல். கூரை வேய்தல். அதுபோல்
பாடல்கள் அமைத்தல். வேந்தன் , முடி அணிதலால் வேந்தன் எனப்பட்டான். வாய்ப்பாடம் சொல்பவன் வாத்தி எனப்பட்டான். உப அத்தியாயி ஆகிய உபாத்தியாயி ( `~ யர், ~யினி ) வேறு சொல். பண்டிதர் குழம்பியதுண்டு.  பல அணிகலன்களும் வாசனைத் திரவியங்களும் பூசிக்கொள்பவள், பூசி மயக்குபவள் வேசி ஆனாள்.
பாய்தல் இங்கு நீர்ப் பாய்ச்சல்.காய்தல் : வெறுத்து ஒதுக்குவதற்குரிய‌
போதிக்கப்பட்ட இவ்வுலகம். காய்தல் ‍:  வெறுத்தலும் ஆம். வேறு
பொருளுடையதுமாம் இச்சொல்.

யகர ஒற்று மறைந்த சொற்கள் பல  இங்கு ஆய்வு செய்யப்பட்டு
விளக்கப்பட்டன.  வேதம் ‍ : மறைமலையடிகள் விளக்கம். வித்
என்ற சொல்லிற் புறப்பட்ட வேதா என்ற சொல் வேறு. இரண்டும்
ஒரு பொருளையே சுட்டினும் வெவ்வேறு பிறவிகள். ஆங்கிலத்தில்
பேக்கட் என்பது வேறு; தமிழில் பைக்கட்டு என்பது வேறு. ஓலி
ஒப்புமை உள்ளது. பார்லிமென்ட் வேறு; பாராளுமன்று வேறு .சுட்டப்பட்டது
அப்பொருளே  ஆயினும்.  

வெள்ளி, 3 மார்ச், 2017

சூசி.சாடி

அகர வருக்கத் தொடக்கத்துச் சொற்கள் பல சகர வருக்கத் தொடக்கமாக
மாறின என்று பல இடுகைகளில் காட்டினோம் .  இதற்கு அமை ~ சமை;
அமண்~ சமண் என்பன காட்டப்பெற்றுள்ளன;  ஆய்வுகளும் அவ்வடிப்படையில் நடைபெற்றன.

இப்போது ஊசி என்ற சொல்லைப் பார்ப்போம். இது சூசி என்றும்
வழங்கும்.

ஊசி >  சூசி.

ஆடி என்பது கண்ணாடி. ஆடி பலபொருட்சொல். அவற்றுள் ஒரு
பொருள்:  கண்ணாடி.
இது சாடி என்று திரியும்.  கண்ணாடி அல்லது மண்ணாலான பாத்திரத்துக்கு  ஆகுபெயர். இக்காலத்தில் சாடி என்பது பாத்திரத்தை
மட்டுமே குறித்தலால், ஆகுபெயர் நிலையினின்று முழுப்பெயராக‌
மாறியுள்ளது.
மேலும் சாடி என்பது ஜாடி என்று மாறி வழங்குகிறது. மூலச்செய்பொருளான கண்ணாடியினின்று தொலைவில் வந்துவிட்டது
காண்க,

வியாழன், 2 மார்ச், 2017

வார்த்தை என்ற சொல் தமிழன்று!!

வார்த்தை என்ற சொல் தமிழன்று என்பார்கள். சொல், கிளவி முதலியவை தனித்தமிழ்ச் சொற்கள்.  ஆகவே வார்த்தையை ஆய்வு
செய்வோம்..

கோத்தல் என்ற சொல் உங்கட்குத் தெரிந்ததே. ஊசியில் நூல் கோத்தல்
என்பார்கள். இதைச் சிலர்  கோர்த்தல்,  கோர்வை என்று நடுவில் ஒரு
ரகர ஒற்றினை செருகிப் பேசுவதுண்டு. இது தவறு என்று தமிழாசிரியன்மார் கண்டிப்பதுண்டு.  ஆனால் நாம் கவனிக்க வேண்டுவது என்னவென்றால் இதுபோன்ற சொற்களில் ஒரு ரகர ஒற்று எழுவது இயற்கை என்பதே. புலவர் ஏற்பின் அது சரி; ஏலாவிட்டால் தவறு என்பதே மொழிநிலை.

இப்போது சொல்லைக் காண்போம்.

வாய் > வா > வார் > வார்த்தை.

வாயினின்றும் வெளிப்படுவதே வார்த்தை.  வா(ய்) என்பதில் ஒரு
ரகர ஒற்று எழுந்தது. கோ > கோர்வை போல.  திரிபுகள் ஒரே மாதிரியானவை என்றாலும், புலவர் சிலதிரிபுகளை ஏற்பர். சிலவற்றை
ஏற்பதில்லை.

வாய் என்பது வழி என்றும் பொருள்தரும். இந்தப்பொருளில் அது
மேலைமொழிகளிலும் ஏறியுள்ளது.  வாய்   (Tamil ) ,  ‍வியா   via (Latin)   வே.(way - English).  வாயைச் சில சிற்றூரார் வே என்பதும் நீங்கள் அறிந்தது. இங்ஙனம்
வாய், வார்த்தை பல மொழிகளில் இடம்பெற்றுவிட்டது. மலாயில்
"வார்த்த பெரித்த" என்றால் செய்தி அறிக்கை. ஆங்கிலத்தில் வர்டு  word
என்பதும் காண்க.

தமிழனின்  வாய்ச்சொல்  (வார்த்தை )   எங்கும் பரவியுள்ளது.  மகிழ்ச்சிதானே.!






துவாரம்

துவாரம் என்ற சொல் முன்பு விளக்கப்படடதேயாம்.  இப்போது இதை இங்குப்
பயன்படுத்த விருப்பதால் அதையும்  சற்றுத் தெரிந்துகொள்வோம். துவைத்தல் என்ற வினைச்சொல் குற்றுதலையும் இடித்துச் சிறு குழிகளை உண்டாக்குதலையும் குறிக்கும்.இப்படிக் குழித்தது துவாரம்படுதலும் இயல்பு. அதனால் துவைத்தல் துவாரமிடலையும் குறிக்கும்.  அம்மி துவைத்தல்
(பொழிதல்) என்ற வழக்கும் உள்ளது.

துவை+ ஆர்+ அம் = துவாரம்.

துவைத்தல்: முன் விளக்கிய படி.

ஆர்தல் -  நிறைவு.

அதாவது இடிப்பதை முழுமையாகச் செய்து ஓட்டையாக்கிவிடுதல்.  ஓட்டையானதை இடித்தல் தூள் செய்தல் அல்லது பல துண்டுகளாகச் செய்தல். குறித்த அளவுடன்  இடித்து நிறுத்திவிட அது ஓட்டையாவதுடன் நின்றுவிடும்.

அம் என்பது விகுதி.

துவாரம் தமிழ்ச்சொல்

துவை என்பதன் இறுதி ஐ வீழ்ந்தது.

Translation of word Rasul (Messenger)

Rasoul comes from Risalla, which is the standard Arab word for a message, like any postcard or any email message. Every man is a Rasoul everyday. Nabi comes from Hebrew Navi, which comes from Nevouha, which is Prophecy, which is vision of the Future or of the Devine. Only in the Old Testament there are Prophets

--- Arab academics.

இங்ஙனம் அரபுப் பண்டிதன்மார் உரைக்கின்றனர். இஸ்லாமியத்தில்
சொல்லப்படும் "ரசூல்" என்ற பதத்துக்கு ஒரு தமிழ் மொழிபெயர்ப்பாக‌
இப்போது சிலவற்றைக் காண்போம்.

ரசூல்:

இறைச்சொலவர்.  (சொலவு = சொல்லுதல்; வார்த்தை).
இறையுரைஞர்.
இறைமொழிஞர்.

இதில் இறைச்சொலவர் என்பது ரசூல் என்ற பதத்திற்குச் சற்று
அணுக்க ஒலிகளை உடையதாய் இருக்கிறது.   இறை  ‍=/  ர;
சூல் =/  சொலவு.

வேறு மொழிபெயர்ப்புகள் உங்கட்குத் தெரிந்திருப்பின் 
அனுப்பினால் நன்றி.




vasool வசூல்

வா என்ற ஏவல்வினை. வந்தான் எனும்போது வ‍~ என்று குறுகிவிடும்.
வரு என்பதே பகுதி, இது ஏனென்றால், வருகிறேன், வருவாய், என்று
வருதல் காணலாம்.

இப்போது வசூல் என்ற சொல்லைக் காணலாம்.  இது தமிழ் நாட்டில்
உருதுமொழியும் வழங்கிய காலத்து வழக்கு வந்த சொல்லென்பர்.
சங்க இலக்கியங்களில் இல்லை என்பதால், இது ஒரு பேச்சு வழக்குச்
சொல் எனலாம்.  எக்காலத்தில் இது பேச்சில் வந்தது என்பதற்கான‌
பதிவுகள் இலவென்று சொல்வர். ஆனால் பிற்கால எழுத்துக்களில்
காணப்படுகிறது.

உருதுமொழியிலும் இது வழங்குகிறது என்பர் சில ஆய்வறிஞர். அங்கு
அது இருப்பதால், இங்கும் அது இருந்தாலும், அங்கிருந்து வந்திருக்க‌
வேண்டுமென்பர்.  ஆனால் உருது, இந்தி முதலியன புதிய மொழிகள்.
இந்தியும் உருதும் தக்காணி ( தெற்கணி) மொழியினின்று வந்ததென்பர்.  தெற்கணி என்பது தெற்கண் (தென்னாட்டில்) கிளைத்து
எழுந்த மொழி.

வரு என்பது வ~ என்று குறுகும்.  சூல் என்பது "உண்டானது" என்ற‌
பொருள்விரிவில், விளைச்சலைக் குறிக்கும்.  மேகம் சூல் கொண்டால், அதன் விளைவு மழை.

எனவே  வசூல் என்பது தமிழ்மூலங்களை உடைய சொல்லாம். 

will edit later.  Some maintenance is being done now.


புதன், 1 மார்ச், 2017

உன்னதம்

உன்னதம் என்ற சொல்லை பல ஆண்டுகட்குமுன் விளக்கியது இன்னும்
என் ஞாபகத்தில்  இருக்கின்றது. மூளைக்குள் இருப்பதால் அது நாவிலும்
அகத்திலும் இருக்கிறது. சற்று வேறு தடத்தில் செல்வோம்.

நாவில் இருக்கிறது; காரணம் அகத்தில் இருக்கிறது.  ஆகவே நாவகம்>
ஞாபகம். நயம்>ஞயம் போல. ஞயம்> ஞாயம்  : (  நியாயம் ).

இந்த உன்னதம் என்ற சொல்லை இங்கும் எழுதிய வேறு இடங்களிலும்
தேடிப்பார்க்கலாம். பழையதையே தேடிக்கொண்டிருந்தால் புதியது ஏதும் ஆகாது.

உன்ன = நினைக்க.
(உன்னுதல் : நினைத்தல்.)

(நீ>  உன் என்ற பதிற்பெயர்த் திரிபும் தொடர்புடையது.)

உன்ன ‍:  மனத்தின் முன் கொணர்ந்து எண்ண;
(உன் > உன்னு.   உன் > முன்.  இவற்றைப் பின்னொரு நாள் காண்போம்)

அது:  அப்பொருளானது;

அம் ‍=  அழகு.

உன்ன + அது + அம்  இது சுருங்கி உன்+அது + அம் = உன்னதம்
ஆயிற்று.

இங்கு + இது + அம் = இங்கிதம்  .  அம் = அழகு.  அம்மை = அழகு.